உடனடிச்செய்திகள்

Friday, May 2, 2025

*போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் அறச்சீற்றம், ஆன்மிகர்களுக்கு வழிகாட்டி!* பெ. மணியரசன்



*போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின்
அறச்சீற்றம், ஆன்மிகர்களுக்கு வழிகாட்டி!*


பெ. மணியரசன்



பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
நாள் : 2.5.2025 ===================================
ஆன்மிகச் சான்றோர்கள் அரசியலுக்கும் சமூக அறத்திற்கும் சிறந்த பங்களிக்க முடியும் என்பதை மெய்ப்பித்து, அண்மையில், 21.4.2025 அன்று மறைவெய்தியுள்ளார் போப்பாண்டவர் என்ற பொறுப்பில் இருந்த போப் பிரான்சிஸ் அவர்கள்.
ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்தும், - தென்னமெரிக்காவின் பின்தங்கிய நாடான அர்ஜென்டினாவிலிருந்தும் ரோமாபுரி - வத்திக்கான் அரசுத் தலைவராக வரமுடியும் என்பதை அவர் நிலைநாட்டியுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் செல்வாக்குடன் தொடர்ந்து அப்பதவியில் இருந்துள்ளார்.
உலக அமைதி - நீதி - ஏழைகளுக்கான குரல் என்ற இம் மூன்றும் போப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலட்சியங்கள்!
கட்டற்ற லாப வேட்டை நடத்தும் தனியார் தொழில் - வணிகங்களை அவர் சாடினார். அனைத்து மனிதர்களுக்கும் ஞாயமான ஊதியமும் கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க வேண்டும் என்றார்.
எந்த அக்கறையும் இல்லாமல் இயற்கை வளத்தைச் சீரழிப்பதை - இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் கடுமையாக - வெளிப்படையாகச் சாடினார். சுற்றுச் சூழலுக்கு இழைக்கப்படும் தீங்கு ஒரு சமூக அநீதியே என்றார். இது குறித்து அவர் அவரது பதவிக்கே உரியதான வெளிப்படைக் கடிதம் ஒன்றை (Encyclical) 2015-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அது நூல்வடிவில் லாடேட்டா சி (Laudato Si) என அறியப்படுகிறது.
போப் பிரான்சிஸ் மத நல்லிணக்கத்திற்கு உழைத்தவர் என்று புகழப்படுகிறார். பல்வேறு மாற்று மதங்கள், கிறித்துவத்துக்குள்ளேயே இருக்கும் உட்பிரிவுகள், (Denominations) கடவுள் நம்பிக்கை அற்றோர் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களிடையே, பேச்சு வார்த்தைகள் மற்றும் குறைபாடுகளைத் திருத்துதல் வடிவில் சமரசம் ஏற்பட உழைத்தார்.
உலகெங்கும் உள்ள ஏழைகள், இன்னும் குறிப்பாக உள்நாட்டு நிலைமைகளால் ஏதிலிகள் ஆனோர் - புலம் பெயர்ந்தோர் முதலியவர்களின் குரலாய் விளங்கினார் போப் பிரான்சிஸ். பன்னாட்டு சிக்கல்களில் கருத்துக் கூறத் தயங்காதவர்!
அதிகாரமற்றவர்களின் குரலாய் விளங்கிய போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் உலக நாடுகளில் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ள குடியரசுத் தலைவர்கள், தலைமை அமைச்சர்கள், அமைச்சரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எந்த மதம் அல்லது சமயமாக இருந்தாலும், அவற்றின் பொறுப்பில் உள்ளோர் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதினங்களும் வைணவ ஜீயர்களும், கிறித்துவ, இசுலாமிய பீடங்களும் சமூகச் சிக்கலில் நடுநிலை, அறம் சார்ந்து கருத்துகள் கூற வேண்டும். காலஞ்சென்ற குன்றக்குடி அடிகளார், அவ்வாறு சமூகவியல் - மொழி - தமிழ்இனம் சார்ந்து கருத்துகள் கூறினார். ஆட்சியில் இருப்பவர்களின் மனம் கோணாமல் செயல்பட வேண்டும் என்று சமயத் தலைமை பீடங்கள் சுருங்கிக் கொண்டால், அரசியல் சீரழிவுகள், அட்டூழியங்கள் பெருகும்!
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்று உரத்துப் பேசினார் 7-ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர். “கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என்றார் இராமரலிங்க வள்ளலார் 19-ஆம் நூற்றாண்டில்!
வத்திக்கான் அரசுத் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களுக்கு வீர வணக்கம்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================


 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT