Friday, November 27, 2009
Saturday, November 14, 2009
முல்லைப் பெரியாறு தீர்ப்பு: தமிழக அரசின் துரோகத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடும் கண்டனம்
முல்லைப் பெரியாற்றுத் தீர்ப்பு
கேரள அரசின் அடாவடிக்கு துணைபோன தமிழக அரசு
தமிழக உழவர் முன்னணி கண்டனம்
தமிழக உழவர் முன்னணி கண்டனம்
முல்லைப் பெரியாறு வழக்கில், கேரள அரசுக்கு துணை போய் தமிழக அரசு செய்த துரோகத்திற்கு கடும் கண்டனத்தை தமிழக உழவர் முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் 12.11.09 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு வழக்கில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற ஆயம் (டிவிசன் பென்ச) 10.11.09 அன்று அளித்துள்ள தீர்ப்பு தமிழக உரிமையை பறிப்பதாக உள்ளது. இத்தீர்ப்புக்கு தமிழக அரசின் முன் ஒப்புதல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிறகே இத்தீர்ப்பு உரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முல்லைப்பெரியாறு உரிமையை தமிழக அரசே கை கழுவிவிட்டது.
2006இல் உச்சநீதிமன்ற ஆயம் அளித்த தீர்ப்பு உடனடியாக 142 அடி தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு தேக்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இத்தீர்ப்பை முறியடிக்கும் தீய உள்நோக்கத்தோடு கேரள அரசு அம்மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற அணையையும் கொணர்ந்தது. இதன் மூலம் தமிழகப் பொதுப் பணித்துறையின் கட்டு்ப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை சட்டவிரோதமாக கேரள அரசு பறிக்க முயன்றது. முல்லைப் பெரியாறு அணை சட்டப்படி கேரள அரசின் அதிகார எல்லையில் இல்லை.
ஆனால், இப்போதைய தீர்ப்பின் மூலம் நிலவும் நிலைமை செயலில் இருக்கட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கேரள அரசின் அடாவடியான சட்டம் செயலில் இருக்கும் என்பதும், 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.
முப்பது ஆண்டுகால முயற்சியில் கிடைத்த நியாயத்தை இத்தீர்ப்பு பறிக்கிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால் இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இத்தீர்ப்பு வரைவிற்கு தமிழக அரசு முன் ஒப்புதல் தந்ததின் மூலம் தமிழகத்தின் உரிமையை கைகழுவி முப்பது ஆண்டு முயற்சியால் தமிழகத்திற்கு கிடைத்த நியாயத்தை குழு தோண்டி புதைத்து விட்டது.
ஏனெனில் இப்போதைய தீர்ப்பில் மேல் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள அரசமைப்பச் சட்டசிக்கல் அனைத்துமே 2006 ஆம் ஆண்டு நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் ஆயம் தீர விவாதித்து முடியு கூறிய செய்திகள் தாம். அரசமைப்புச் சட்ட விதிகள் 3 மற்றும் 4, 131, 363 போன்ற அனைத்து பிரிவுகளின் கீழும் கேரள தீர்ப்பு எழுப்பிய ஆட்சேபணைகளையெல்லாம் அத்தீர்ப்பு நிராகரித்தது. மேலும் 1956 ஆம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பகிர்வு தகராறு இல்லை. மாறாக அணையின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையே இவ்வழக்கின் மையச் சிக்கல் என்று தெளிவுபடுத்தியது.
கேரள அரசு முன்பு எழுப்பிய ஆட்சேபணைகளைத்தான் இப்போதும் எழுப்பியுள்ளது. அன்று தமிழக அரசின் சார்பில் எல்லாவற்றிற்கும் மறுப்புரை அளிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இன்று அதே சட்டப் பிரச்சினைகளின் மீது மறு ஆய்வுக்கு ஒப்புதல் கொடுத்ததன் மூலம் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை கைகழுவி விட்டது. இவ்வாறு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் போனால் ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய ஆயத்திற்கு அனுப்புவது என்ற தீர்ப்பே வர வாய்ப்பில்லை. ஏனெனில் இப்போது தீர்ப்புரைத்துள்ள உச்சநீதிமன்ற ஆயமும் மூன்று நீதிபதிகள் கொண்டது தான். சம அதிகாரம் கொண்டது தான். இவ்வாறு சம அதிகாரம் கொண்ட ஒரு ஆயம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவை இந்த ஆயம் எடுப்பதற்கு தமிழக அரசின் ஒப்புதலே கதவை திறந்து விட்டுளளது.
முல்லைப் பெரியாற்றுப் பாசன உழவர்களின் முப்பதாண்டு கால முயற்சியில் கிடைத்த வெற்றியை கைகழுவிவிட்ட தமிழக அரசுக்கு தமிழக உழவா முன்னணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி தமிழக அரசையோ இந்திய அரசையோ நம்பி காத்திராமல் உழவர்களும் தமிழக மக்களும் இன உணர்வு பெற்று ஒன்றுபட்டு போராடுவது மட்டுமே முல்லைப் பெரியாறு உரிமையை நிலைநாட்ட உள்ள ஒரே வழியாகும். இதற்கு அணியமாகுமாறு அனைவரையும் தமிழக உழவர் முன்னணி அழைக்கிறது.
இடம் : சிதம்பரம்
நாள் : 12.11.09
Friday, November 13, 2009
கொடி எரித்தத் தோழர்கள் விடுதலை: சிறை வாசலில் உற்சாக வரவேற்பு


சிங்கள இனவெறி அரசுக்கு உதவிய இந்திய அரசைக் கண்டிக்கும் விதத்தில், இந்திய இலங்கை தேசியக் கொடிகளை எரித்தத் தோழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனையொட்டி, கோவை நடுவண் சிறையிலிருந்து தோழர்கள் பா.தமிழரசன், வே.பாரதி ஆகியோர் கடந்த செவ்வாய்(10.11.09) அன்று மாலை 7.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை நடுவண் சிறை வாசலில், பறையடித்து தோழர்களுக்கு வரவேற்பு மட்டும் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் தோழர்களை வரவேற்று உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், த.தே.பொ.க. பொதுக் குழு உறுப்பினர்கள் ஓசூர் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, ஈரோடு வெ.இளங்கோவன், மதுரை இராசு, ஆனந்தன், திருச்செந்தூர் தமிழ்மணி, தமிழக மாணவர் முன்னணி அரவிந்தன் உள்ளிட்ட பலரும் தோழர்களை வாழ்த்தி, பரிசளித்து கௌரவித்தனர்.
கோவை நடுவண் சிறை வாசலில், பறையடித்து தோழர்களுக்கு வரவேற்பு மட்டும் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் தோழர்களை வரவேற்று உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், த.தே.பொ.க. பொதுக் குழு உறுப்பினர்கள் ஓசூர் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, ஈரோடு வெ.இளங்கோவன், மதுரை இராசு, ஆனந்தன், திருச்செந்தூர் தமிழ்மணி, தமிழக மாணவர் முன்னணி அரவிந்தன் உள்ளிட்ட பலரும் தோழர்களை வாழ்த்தி, பரிசளித்து கௌரவித்தனர்.

(தோழர் பா.தமிழரசனை பாராட்டுகிறார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன்)

(தோழர் வே.பாரதியை பாராட்டுகிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு)
ஈழத்திற்கு எதிரான இந்தியத்தின் கொடியை எரித்த தோழர்கள், அக்கொடியை தம் வீட்டில் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை தள்ளுபடி செய்தும், இது போன்ற நிபந்தனையை இனி எந்த வழக்கிற்கும் விதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, இத்தீர்ப்பு, இனி இது போன்ற தவறான நிபந்தனைகளை விதிப்பதற்கும் தடை விதித்துள்ளது.

உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட போதிலும், ஈழத்தமிழர் இன அழிப்பிற்கு துணை போன இந்திய நாட்டின் கொடியை எங்கள் வீட்டில் ஒரு போதும் ஏற்ற மாட்டோம் என்று உறுதியுடன் தமது இளமைப் பருவத்தின் 6 மாத காலத்தை சிறையிலேயெ கழித்து, உறுதியுடன் போராடிய தோழர்கள் பா.தமிழரசன்(த.தே.பொ.க.), வே.பாரதி(த.தே.வி.இ.) ஆகியோரின் மன உறுதியையும், கொள்கைப் பற்றையும் உணர்வாளர்கள் உணர்வுடன் பாராட்டினர்.
Thursday, November 12, 2009
முல்லைப் பெரியாறு வழக்கில் கேரளாவுடன் இணைந்து தமிழக அரசு துரோகம்: பெ.மணியரசன் கண்டனம்
முல்லைப் பெரியாறு வழக்கைக் கிடப்பில் போட கேரளத்திற்கு
துணைபோய் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
துணைபோய் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
தஞ்சை, 12.11.09
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு உரிமைச் சிக்கலை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயத்திற்கு விடுவது என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது ஏமாற்றமளிக்கிறது. அதற்குத் தமிழக அரசு இசைவுத் தெரிவித்திருப்பது, தமிழகத்தின் உரிமையைப் பலி கொடுக்கும் செயலாகும்.
2006 பிப்ரவரி 27-ஆம் நாள் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்குத் தண்ணீர்த் தேக்கிக்கொள்ளலாம. ஆணை வலுவாக உள்ளது என்று கூறியிருந்தது. அத்தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் உடனடியாகக் கேரள சட்டமன்றம் அணைகள் பாதுகாப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி முல்லைப்பெரியாறு அணை தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் கேரள அரசு அறிவித்தது.
அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக உள்ள இச்சட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தது. அத்துடன், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்குவதைக் கேரளம் தடுக்கக்கூடாது என்றும் கோரியிருந்தது.
இவ்வழக்கு விசாரணை விரிவாக நடந்தது. 10.11.2009 அன்று தீர்ப்பு வழங்கவேண்டிய நிலையில், தீர்ப்பு வழங்காமல் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் அமைத்து அதன் விசாரணைக்கு. இவ்வழக்கை விடுமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு ஐந்து நீதிபதிகள் ஆயத்திற்கு வழக்கை மாற்றிவிட, தமிழக அரசு வழக்கறிஞர் பராசரன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கருத்துப்படியே அவர் ஒப்புதல் தந்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு இருக்கும் 999 ஆண்டு ஒப்பந்தத்தையும் 2006 பிப்ரவரி தீர்ப்பையும் கிடப்பில் போட்டு, செயலற்றதாக்கும் கெட்ட நோக்கமுடைய கேரளாவின் நிலைபாட்டிற்குத் தமிழக அரசு உடந்தையாய்ப் போயிருப்பது ஏன்? என்ற வினா எழுகிறது. இதற்குத் தமிழக அரசு விடை சொல்லியாக வேண்டும்.
காவிரி உரிமையைப் பலிகொடுத்தது போலவே, இப்பொழுது முல்லைப்பெரியாறு உரிமையையும் பலி கொடுத்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் இந்தத் துரோகத்தைத் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்நிலையில் தமிழக மக்கள் கொந்தளித்து எழுந்தாலன்றி, முல்லைப்பெரியாறு அணையில் தமிழ் நாட்டிற்குள்ள உரிமையை நிலைநாட்ட தமிழக அரசோ, நடுவண் அரசோ, உச்ச நீதிமன்றமோ முன் வராது. ஐந்து மாவட்ட மக்களின் வேளாண்மை பாழாவதுடன், குடிநீர் பஞ்சம் பெரிதாக ஏற்படும். எனவே தமிழக மக்கள் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Monday, November 9, 2009
இந்தியத் தேசியக் கொடி எரித்தத் தோழர்கள் விடுதலை
இந்தியத் தேசியக் கொடி எரித்தத் தோழர்கள்
பிணையில் விடுதலை - உச்சநீதிமன்றம் உத்தரவு
நாளை சிறை வாசலில் வரவேற்பு
சிங்கள இனவெறி அரசுக்கு உதவிய இந்திய அரசைக் கண்டிக்கும் விதத்தில், இந்திய இலங்கை தேசியக் கொடிகளை எரித்தத் தோழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும், கொடி எரித்த தோழர்கள் அக்கொடியை தம் வீட்டில் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை தள்ளுபடி செய்தும், இது போன்ற நிபந்தனையை இனி எந்த வழக்கிற்கும் விதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது. கோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லை, அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இந்நிபந்தனையை மறுபரீசீலனை செய்யக்கோரி தொடுக்கப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகரப் பொறுப்பாளர் பா.தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு உறுப்பினர் வே.பாரதி ஆகிய இருவரும் இந்நிபந்தனைகளை ஏற்க இயலாது என தில்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவிற்காக பிரபல வழக்கறிஞரும் முன்னாள் நடுவண் சட்ட அமைச்சருமான திர. இராம் ஜெத்மலானி அவர்கள் தில்லி உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, தீபக் வர்மா ஆகியோர் அளித்தத் தீர்ப்பில் மனுதாரர்களை விடுதலை செய்யக் கோரி உத்தரவிட்டனர்.
அத்தீர்ப்பில், எரித்த கொடியை ஏற்றச் சொல்வதும், அநாதை ஆசிரமத்தில் பணியாற்றச் சொல்வதுமான நிபந்தனைகள் சட்டப்படி ஏற்பதற்குரியதல்ல என்றும் இது போன்ற நிபந்தனைகளை இனி யாரும் விதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிணை உத்தரவு சிறையை வந்தடைந்ததை ஒட்டி, நாளை(செவ்வாய் - 10.11.09) மாலை கோவை நடுவண் சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக, கடந்த 6 மாதங்களாக சிறையில் இருந்து, ஈகம் செய்த அத்தோழர்களை, உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் திரண்டு வரவேற்போம்! வாருங்கள்!
முழுத் தீர்ப்புக்கு:
தொடர்புக்கு:
தோழர் பா.சங்கர் 9865555275
Subscribe to:
Posts (Atom)