உடனடிச்செய்திகள்

Wednesday, June 25, 2014

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!



சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

தமிழினத்தின் வீரமரபின் அடையாளமான சல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சி - திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இன்று(25.06.2014) அறிவன்(புதன்) கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி திருச்சி அமைப்பாளர் தோழர் மு.தியாகராசன் தலைமை ஏற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.



சல்லிக்கட்டு பேரவையின் மாநில துணைத்தலைவர் திரு. மு.தன்ராசு, சல்லிக்கட்டு பேரவை திரு. ஜீலி, திரு.தங்கத்துரை, ம.தி.மு.க அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் புலவர் க.முருகேசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் நா. இராசாரகுநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மு.த.கவித்துவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 






த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாற்ற முடியாதது அல்ல. ஏற்கெனவே இடஒதுக்கீடு, இராசீவ்காந்தி கொலை வழக்கு தீர்ப்பு உள்ளிட்டவைகள் மக்கள் போராட்டத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் திருத்தப்பட்டிருக்கின்றன. எனவே தமிழ் இனத்தின் அடையாளத்தை அழிக்கும், சல்லிக்கட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். தமிழக, இந்நிய ஒன்றிய அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தடையை நீக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.


நிறைவில், த.தே.பொ.க. தோழர் இனியன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில், த.தே.பொ.க., த.இ.மு., சல்லிக்கட்டுப் பேரவை அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT