உடனடிச்செய்திகள்

Sunday, June 29, 2014

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் - தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து
துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்
தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்!

இந்திய அரசின் துணையோடு அடாவடியாகக் கர்னாடகம் காவிரி நீர் மறுப்பதாலும், முல்லைப்பெரியாறு சிக்கலில் கேரளத்தின் இனவெறி காரணமாக அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியாததாலும் ஏற்பட்டுள்ள சிக்கல் ஒரு புறம், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக மழைகுறைந்து வருவது மறுபுறம் என்று மிகப்பெரும் தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடு தத்தளிக்கிறது.

நெல், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள் மட்டுமின்றி மரப்பயிர்களும் வறட்சிக்காரணமாக பொய்த்து விட்டன.

காவிரி பாசனப்பகுதிகளில் கூட நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போகத் தொடங்கிவிட்டது. நிச்சயமற்ற மின் வழங்கலும் சேர்ந்து சிக்கலை ஆழப்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம், குளித்தலை பகுதிகளில் கூட தென்னை மரத்திற்கே தண்ணீர் இன்றி அவை வாடுகின்றன. வறட்சியை தாங்கி நிற்கும் பனைமரம் கூட சேலம் மாவட்டம், எடப்பாடியில் கருகி வருவதாகவும் ஏறத்தாழ 7000 மரங்கள் கருகி உதிர்ந்து விட்டதாகவும், ஏடுகளில் வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சேலம், தர்மபுரி, கிரு~;ணகிரி மாவட்டங்களில் மா, எலுமிச்சை, பப்பாளி சாகுபடிச் செய்யும் உழவர்கள் நிலத்தடி நீர் இன்மையால் கையைப் பிசைந்து நிற்கிறார்கள். இம்மாவட்டங்களில் கறவை மாடுகளுக்கு வைக்கோல் இன்றி உழவர்கள் தவிக்கிறார்கள். அறுவடை காலத்தில் வைக்கோலை வாங்கி சேமித்து வைத்துள்ள இடைமட்ட வணிகர்கள் ஒரு டிராக்டர் வைக்கோலை 14000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை கொள்ளை விலைக்கு விற்கிறார்கள். ஆலைகளிலிருந்து வரும் தீவனங்களும் தாறுமாறாக விலை ஏறி விட்டன.

இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளைக் கேரளாவிற்கு ஓட்டிச்செல்லும் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தேசிய ஆறான காவிரியைச் சார்ந்து குடிதண்ணீர் பெற்றுவரும் 85 ஒன்றியங்களில் பெரும்பான்மையானவை  குடிதண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன். பல நகராட்சிகளில் வாரம் ஒரு முறை குடிதண்ணீர் விடுவது என்ற போக்கு இயல்பாகிவிட்டது. இந்தக் குடிதண்ணீர் தட்டுப்பாடு தனியார் குடிநீர் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

தமிழக அரசு இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள ஒதுக்கி உள்ள 680 கோடி ரூபாய் என்பது யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றதாகும்.

இந்நிலையில் 2012-ல் அறிவித்தது போல் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து இந்திய அரசை வலியுறுத்தி இயற்கைப் பேரிடர் சிறப்பு நிதியைப் பெற்று இடர் நீக்கப் பணிகளில் தமிழக அரசு விரைந்து ஈடுபட வேண்டும்.

தமிழர்கள் நீர் ஆதாரங்களைப் பெருக்க உருவாக்கிய பழைய நீர்நிலை கட்டுமானங்களை உயிர்ப்பிப்பது, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஊக்கப்படுத்துவது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் கொடுங்குற்றமாக அறிவித்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற நீண்டகாலத் திட்டங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.


இல்லையேல் வறட்சிக்காரணமாகப் பெரும் எண்ணிக்கையி தமிழர்கள் புலம்பெயரும் ஆபத்து உள்ளது.

தோழமையுடன்
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT