உடனடிச்செய்திகள்

Wednesday, October 2, 2019

தோழர் தி.மா. சரவணன் மறைவு சமகால வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

தோழர் தி.மா. சரவணன் மறைவு

சமகால வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 

தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்ட மூத்த தோழர்களில் ஒருவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து வெளி வந்த தமிழ் இதழ்களின் தொகுப்பாளருமான நம்முடைய அன்பிற்குரிய தோழர் தி.மா. சரவணன் அவர்கள், நேற்று (01.10.2019) திருச்சி அரசு மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது.

சிறுநீரகக் கோளாறால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தி.மா.ச. காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு மட்டுமின்றி, சமகாலத் தமிழர் வரலாறு கற்கக்கூடியவர்களுக்கும் எழுதுவோருக்கும் பேரிழப்பாகும்!

தமிழர் கண்ணோட்டம் இதழ், உருட்டச்சாக வந்ததிலிருந்து அண்மைக்காலம் வரை அதில் வந்த போராட்டச் செய்திகள், கட்டுரைகள், மாற்றுக் கருத்துடையோருடன் நடந்த தர்க்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் எழுதி வந்தார். அந்தப் பணி, அவர் மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து நின்று விட்டது. இப்பொழுது அவர் மறைவால் நிரந்தரமாக அந்தப் பணி நின்று போன பேரிழப்பும் நமக்கிருக்கிறது.

2014இல் சென்னையில் நடைபெற்ற புத்தகச் சங்கமம் (ஏப்ரல் 18 - 27) நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தோழர் தி.மா.சரவணன் அவர்களுக்கு “புத்தகர்” விருது வழங்கி பாராட்டினார்.

மிக நல்ல பண்பாளராக, தோழமை உணர்வுமிக்கவராக அனைவரோடும் இணக்கமாகப் பழகும் பக்குவம் பெற்றவராக விளங்கிய தோழர் தி.மா.ச. அவர்களின் மறைவு தமிழுணர்வாளர்கள் அனைவருக்குமான இழப்பாகும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தோழர் தி.மா. சரவணன் அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT