உடனடிச்செய்திகள்

Sunday, November 10, 2019

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! பெ. மணியரசன் அறிக்கை!



அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்
தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


அரசியல் ஆக்கப்பட்ட ஆன்மிக வழக்கான அயோத்தி வழக்கில், இன்று (09.11.2019) – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பு, முற்றிலும் ஏமாற்றமளிக்கிறது.
சர்ச்சைக்குரிய 1,500 சதுர கெஜம் முழுவதும் இராமர் கோயிலுக்கு உரியது என்றும், அதற்கு அருகிலே உள்ள 67 ஏக்கர் திடலில் ஐந்து ஏக்கர் நிலத்தை இந்திய அரசு மசூதிக்காக ஒதுக்கித் தர வேண்டும் அல்லது அயோத்தி நகருக்குள் முசுலிம்கள் விரும்பும் ஒரு பகுதியில் 5 ஏக்கர் நிலம் மசூதிக்காக உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கித் தர வேண்டும், மூன்று மாதத்திற்குள் இராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை நடுவண் அரசு நிறுவ வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010இல், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து, இந்துக்களுக்கு இரண்டு பங்கும், முசுலிம்களுக்கு ஒரு பங்கும் கொடுத்து அளித்த தீர்ப்பே நடுநிலை தவறியது என்று அப்போது பேசப்பட்டது. ஆனால், அலகாபாத் தீர்ப்பைவிட பின்தங்கியதாகவும், தரவுகளையும், சாட்சியங்களையும் முதன்மைப்படுத்தாமல் ஒருசார் மத நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டதாகவும் இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
தீர்ப்புரையின் செயலாக்கப் பகுதியில் (முடிவுரையில்), 796ஆம் பத்தியில் “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது” என்று சரியாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் “நம்பிக்கையை”த்தான் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.
தீர்ப்பின் 798ஆம் பத்தியில் 1949 திசம்பர் 22 / 23 நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் இந்துக் கடவுளான இராமர் சிலையை வலுவந்தமாக வைத்தது குற்றச்செயல் என்று கூறும் இத்தீர்ப்பு, அந்த நாளிலிருந்து இந்துக்கள் அங்கு வழிபாடு நடத்தி வருகிறார்கள் என்றுகூறி, அதையொரு அனுபோகப் பாத்தியதையாகக் கருதுகிறது. அதேவேளை, அங்கு அதன்பிறகு முசுலிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்றும் தெரிவிக்கிறது. இந்த பதிவு (Observation) எதற்காகக் கூறப்படுகிறது?
“அனுபோகப் பாத்தியதை இல்லை” என்ற பொருளில்தான் கூறப்படுகிறது. அதேபோல், 1857க்கு முன் அந்தக் கட்டடத்தில் முசுலிம்கள் தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு சான்று இல்லை என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. இந்துக்கள் 1857க்கு முன் அந்த இடத்தில் வழிபாடு நடத்தினார்களா, இல்லையா என்பது பற்றி இத்தீர்ப்பு எதுவும் கூறவில்லை! உண்மையில், இதற்கும் சான்றில்லை!
1934இல் மசூதிக்குள் அத்துமீறிய இந்துக்களில் ஒரு சாராரையும், 1949இல் மசூதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து இராமர் மற்றும் சீதை படிமங்கள் வைக்கப்பட்டதையும், 1992 திசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் சட்டத்தை மீறிய செயல் என்று கண்டிக்கும் இத்தீர்ப்பு, அவ்வாறான அத்துமீறல்களையே “இந்துக்களின் நம்பிக்கை”க்கான அழுத்தமாக எடுத்துக் கொள்கிறது. ஆனால், “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை, அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறோம்” என்று சொல்கின்ற இந்தத் தீர்ப்பு, ஐயத்திற்கு இடமின்றி எந்த வரலாற்றுத் தரவையும் அகழ்வாராய்ச்சித் தரவையும் சுட்டிக்காட்டவில்லை!
இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது என்றும், அனைத்து மக்களுக்கும் சமத்துவம் வழங்குகிறது என்றும், அதுவே நமது வழிகாட்டும் நெறி என்றும் புகழ்ந்து பேசும் தீர்ப்புரை – ஒரு சாரார் கூறும் மதநம்பிக்கை என்ற வாதத்தை மட்டுமே அடிச்சரடாகக் கொண்டு இத்தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.
சொத்துரிமை குறித்த குடிமையியல் வழக்குதான் இது என்று சொல்லிக் கொள்ளும் இத்தீர்ப்பு, அதற்கான அடிப்படைச் சான்றுகள் இன்றி ஒரு தரப்புக்கு முழுசொத்துரிமையையும் வழங்கியிருக்கிறது. மத நம்பிக்கை அடிப்படையிலும், அரசதிகாரம் மற்றும் பெரும்பான்மை என்ற அளவுகோல் வைத்தும், இத்தீர்ப்பு வழங்கப்பட்டதா என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு எழுவது இயல்பே!
ஏற்கெனவே மதுரா, ஆக்ரா போன்ற பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள் இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டது என்றும், அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் ஆரிய இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இப்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்துத்துவா வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் அபாயமிருக்கிறது.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT