உடனடிச்செய்திகள்

Latest Post

Wednesday, July 29, 2026

காவிரி உரிமையை தட்டிப் பறிக்க இந்திய அரசின் பச்சைக் கொடி! காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம் - கி. வெங்கட்ராமன் அறிக்கை!

காவிரி உரிமையை தட்டிப்பறிக்க

இந்திய அரசின் பச்சைக் கொடி!

காவிரி உரிமை மீட்புக்குழு கண்டனம்

கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

இந்திய ஆட்சியில் அனாதையாக்கப்பட்ட இனம்தான் தமிழினம் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் மேகேதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் இந்திய அரசு கருத்து வெளியிட்டிருக்கிறது.

 

மேகேதாது அணை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வினா எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசு “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகை கட்டமைப்பை மேற்கொள்வதாக இருந்தாலும், தமிழ்நாடு கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா?“ எனக் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு விடை அளித்த இந்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜபூஷன் சௌத்திரி “காவிரியின் குறுக்கே எந்தவகைக் கட்டமைப்பையும் நிறுவிக் கொள்வதற்கு கர்நாடக மாநிலம், தமிழ்நாடு கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் உரிமை அதிகாரம் அல்லது ஆற்றலை குறைக்கவோ, பாதிக்கவோ கூடாது. இத் தீர்ப்பாயத்தின் உத்திரவுக்கு முரண்படாதவகையில் அந்த மாநில எல்லைக்குள் உள்ள நீரின் பயன்களை அனுபவிக்கும் அதன் உரிமையை அது பாதிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறது” என்றார்.

 

மேகேதாது அணை குறித்து தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், கர்நாடகம் தொடர்ந்து செயல்படலாம் என்று வெளிப்படையாக இதன் மூலம் இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

 

காவிரி சிக்கலைக் கூர்ந்து கவனித்தால், கர்நாடகம் மட்டுமின்றி இந்திய அரசு, தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம், அனைத்திந்தியக் கட்சிகள் ஆகிய அனைத்துமே சூழ்ந்து நின்று தமிழினத்தைத் தாக்கி வருவது தெளிவாகும்.

 

தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும், அவர்களைப் பின்பற்றி ஆட்சி செய்யும் விஜயின் த.வெ.க. ஆட்சியும் காவிரி உரிமையைக் காட்டிக் கொடுப்பதில் துரோகப் போட்டி நடத்திவருவதை வரலாறு உறுதி செய்துள்ளது.

 

நர்மதை ஆற்றுநீர்ப் பகிர்வு சிக்கலிலோ, கிருஷ்ணா ஆற்று சிக்கலிலோ, துங்கபத்திரா நீர்ப் பகிர்வு சிக்கலிலோ இந்திய அரசு ஏதோ ஒரு மாநிலத்தின் பக்கமாகச் சாய்ந்து செயல்பட்டதில்லை. தீர்ப்பாயங்களும் உச்ச நீதிமன்றமும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை.

 

ஆனால், ஆரியத்துவ இந்திய அரசு காவிரி சிக்கலில் தொடர்ச்சியாக கர்நாடகத்தின் இனவெறி அடாவடிக்குப் பக்கத் துணையாக இருந்துவருகிறது.

 

மாநிலங்களுக்கிடையே ஆற்றுநீர்ப் பகிர்வு சிக்கல் தொடர்பான “மாநிலங்களிடை நீர் தகராறு சட்டம் 1956” இன் படி அமர்த்தப்படும் தீர்ப்பாயங்கள் மேற்சொன்ன எந்த ஆற்றுநீர்த் தகராறிலும் காவிரித் தீர்ப்பைப்போல படுமோசமான அநீதித் தீர்ப்பை வழங்கியதில்லை.

 

காவிரி ஆற்றில் ஒப்பந்தம் செயலுக்கு வந்ததிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 361 ஆ.மி.க. நீர் பங்கீடு பெற்றுவந்த தமிழ்நாட்டுக்கு காவிரி தீர்ப்பாயம் 205 ஆ.மி.க. என்று இடைக்காலத் தீர்ப்பில் தடாலடியாகக் குறைத்தது. இறுதித் தீர்ப்பில், 192 ஆ.மி.க என்று இன்னும் வெட்டியது. மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தன்பங்கிற்கு மேலும் குறைத்து 177.25 ஆ.மி.க. என்று அறிவித்தது. இந்தத் தீர்ப்பும் கூட 15 ஆண்டுகள்தான் உயிரோடு இருக்கும் . அதன் பிறகு மீளாய்வு செய்ய வேண்டும் என்று அறிவித்தது.

 

இந்த அநீதித் தீர்ப்புகள் ஒவ்வொரு முறை வந்தபோதும், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தீர்ப்பு நகல் எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தின.

 

இந்த அநீதித் தீர்ப்புகளிலும் கூட அவரவர் விருப்பத்திற்கு விளக்கமளித்துக் கொள்ளக் கூடிய வகையில் வழவழ வாக்கியங்களை வழங்கியது. அதனால்தான் இந்திய அரசு அன்றன்றைக்குத் தேவையான கர்நாடகத்தின் வாய்ப்புக்கு இணங்க அவ்வப்போது விளக்கம் அளிக்கிறது.

 

இதே அன்புமணி ராமதாசுக்கு 2015-இல் அன்றைய இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எழுதிய கடிதத்தில் தீர்ப்பாய தீர்ப்பின் 13-ஆம் பத்தியைச் சுட்டிக்காட்டி,  கீழ்பாசன மாநிலத்தின் பாசன தேவை எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு எனக் கூறியிருந்தார். தீர்ப்பாய தீர்ப்பின் பத்திகள் 11, 13, 18 ஆகியவற்றுக்கு இடையே உள்ள தன்முரண்பாட்டை கர்நாடகமும் அதற்கு ஆதரவான இந்திய அரசும் பயன்படுத்திக் கொள்கின்றன.

 

இணை அமைச்சர் சௌத்திரி எடுத்துக்காட்டும் பத்தி 18 கூட அவரவர் பங்கு நீரைப் பயன்படுத்திக் கொள்ள அவரவர் எல்லையில் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது இந்த இறுதி தீர்ப்பே கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரை கர்நாடகம் தீர்ப்பின்படி எப்போதுமே திறந்து விட்டது இல்லை என்று கண்டிக்கிறது.

 

கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் அந்த உபரி நீரைதான் கர்நாடகம் திறந்துவிட்டு வருகிறது. இது நாடறிந்த உண்மை. இப்போது அந்த உபரி நீரையும் தமது எல்லையிலேயே மடக்கிப் போடத்தான் மேக்கேதாட்டில் அணைகட்ட முயல்கிறது கர்நாடகம் தனக்குரிய பங்கு நீரை தாண்டி உபரி நீரை பயன்படுத்த கட்டமைப்பு எதையும் ஏற்படுத்த தீர்ப்பின் பத்தி 18 அனுமதி அளிக்கவில்லை அமைச்சர் செளத்திரி சொல்லும் விளக்கம் தீய உள்நோக்கம் உள்ளது.

 

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த ஆற்று நீர் வழக்கிலும் சொல்லாத வகையில் தீர்ப்புக்கு 15 ஆண்டுகள்தான் வாழ்நாள் என்று வரம்புகட்டியிருப்பதும் குழப்பமான சொற்களை திட்டமிட்டே பயன்படுத்தி இருப்பதும், இந்தியக் கட்டமைப்பே தமிழினப் பகை கட்டமைப்புதான் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

 

தொடக்கத்திலிருந்தே தமிழ்நாட்டின் தி.மு.க. அ.தி.மு.க. அரசுகள் காவிரி வழக்கை ஏனோதானோ என்று நடத்திய முறை இந்த இன ஆதிக்கத்திற்கு தோதாக அமைந்தது.

 

இப்போது கர்நாடகம் மேகேதாது அணை கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவரும் நிலையில் அந்த அணை கட்ட கர்நாடகம் தமிழ்நாட்டின் இசைவைப் பெற வேண்டிய சட்டத்தேவை இல்லை என விளக்கமளிப்பது கர்நாடகத்தின் அடாவடிக்கு வெளிப்படையாகப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.

 

தமிழ்நாடு அரசு இந்திய  அரசின் இந்த வஞ்சகத்தை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும்.

 

தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு உழவர்களும் இளையோரும் காவிரி உரிமை மறுப்பு என்பது தமிழின அழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொண்டு களம் காண வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================

========================
Uploaded Image

Friday, July 24, 2026

தர்மேந்திரப் பிரதான் நீக்கப்பட வேண்டும்! நீட் தேர்வைக் கைவிடவேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வற்புறுத்தல்!

தர்மேந்திரப் பிரதான் நீக்கப்பட வேண்டும்!

நீட் தேர்வைக் கைவிடவேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் வற்புறுத்தல்!

 

பல மொழி இனங்கள் வாழும் நாட்டில் அதிகாரம் மையப்படுவது அடிப்படையில் இன ஒடுக்குமுறை ஆகும். ஆயினும் காலப்போக்கில், இவ்வாறு மையப்பட்ட அதிகாரம் அதனால் பயனடைந்த ஆதிக்க மொழி இன மக்களின் கண்காணிப்பில் இருந்து விலகி, அவர்களிலும் பெரும்பாலோரை வஞ்சிப்பதாக சீரழிந்துவிடுகிறது. நீட் தேர்வில் நிகழ்ந்திருப்பது அதுதான்!

 

நீட் தேர்வுமுறையே  அறிவை ஆய்வு செய்வதற்கு மாறாக, வினாக்களுக்கு விடையளிக்கும் திறன்களை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதால் தனிப்பயிற்சி மையங்கள் (கோச்சிங் சென்டர்) முதன்மை பெற்றன. பத்து இலட்சம், இருபது இலட்சம் ரூபாய் கொட்டிக் கொடுத்தால் தான், நீட் பயிற்சி மையங்களுக்குள்ளேயே தலைகாட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்கள் புறந்தள்ளப்பட்டார்கள்.

 

பல கோடி ரூபாய் புரளும் சமூகவிரோத தொழிலாக தனிப்பயிற்சி மையங்கள் மாறிய நிலையில் தனியார் வணிகப் போட்டியில் மேற்கொள்ளப்படும் குறுக்கு வழிகள் இதிலும் கையாளப்பட்டன. அதன் அடுத்தகட்ட விளைவாக திட்டமிட்ட முறையில் பல இலட்சம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு வினாத்தாள்கள் கசியவிடப்பட்டன. தேர்வு மையங்களுக்கு வெளியில் எழுதித் தரப்படும் விடைத்தாள்கள் இணைக்கப்பட்டன.

 

இந்த ஊழல் வலைப் பின்னலின் தலைமை இடமாக இந்திய அரசின் உயர்கல்வித்துறை மாறிப்போனது.

 

நீட் தேர்வில் தொடங்கிய இந்த ஊழலும், கையூட்டும், முறைகேடுகளும் JEE, CBSE போன்ற கல்வித் தேர்வுகளுக்கும் அனைத்திந்திய வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கும் விரிவடைந்தது. படித்தால் தேற முடியாது. காசு கொடுத்தால்தான் தேர்வு பெற முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகியது. 

 

இந்தச் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் அனிதாவைப்போல உயிர்மாய்த்துக் கொள்வது அனைத்திந்திய அளவில் ஆண்டுக்கு ஆண்டு பெருகியது. இந்த ஆண்டில் மட்டும் 35 மாணவர்கள் தகுதியிருந்தும் வஞ்சிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.

 

இதில் வெடித்ததுதான் இன்று தில்லியே போர்க்களமாக மாறும் அளவுக்கு இளையோரின் கொந்தளிப்புக் களமாக மாறியிருக்கிறது.

 

திடீரென்று தோன்றிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (Cockroach Janata Party of India).  இந்த இளையோரின் கோபத்திற்கு வடிவம் கொடுக்கிற அமைப்பாக உருவானது. பல்வேறு இடதுசாரி மற்றும் பட்டியல் சமூக, இசுலாமிய மாணவர் அமைப்புகளும் இதில் இணைந்து போராட்டத்தின் அடித்தளத்தை உறுதிப்படுத்தினார்கள்.

 

அபிஜீத் திப்கே என்ற இக்கட்சியின் தலைவராக உள்ள இளைஞரின் அழைப்பை ஏற்று தில்லி ஜந்தர்மந்தரில் நாள்தோறும் பெருகிவரும் போர்க்குணமுள்ள இளையோரைப் பார்த்து உலகமே வியக்கிறது. லடாக்கைச் சேர்ந்த அறிவியலாளர் - மனித உரிமை செயல்பாட்டாளர் - சோனம் வான் சுக் இம்மாணவர்களோடு 26 நாட்கள் நடத்திவந்த உண்ணாநிலைப் போராட்டம் இதன் அற வலிமையை எடுத்துக்காட்டியது.

 

வான் சுக் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட சூழலில், நாடாளுமன்றம் நோக்கி இளையோர் பேரணி நடக்கும் என்று அபிஜீத் அறிவித்ததை ஏற்று, கடந்த 20.7.2026 அன்று நடைபெற்ற பேரணி தில்லி மாநகரத்தையே குலுங்கச் செய்தது. இணையம் முடக்கப்பட்ட நிலையிலும், பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்ட நிலையிலும், அனைத்து திசைகளிலிருந்தும் ஆயிரம் பல்லாயிரமாய் இலட்சக்கணக்கில் இருபால் இளையோர் அணிதிரண்டார்கள்.

 

திரும்பிய பக்கமெல்லாம் நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது தலைமை அமைச்சர் மோடி தர்மேந்திரப் பிரதானை நீக்கவேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கையோடு, மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கை விண்ணதிரக் கிளம்பியது.

 

அமைதியான பேரணி நடத்திய மாணவர்கள் மீது மிகக் கொடிய காவல்துறை அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. சீருடை அணிந்த காவலர்கள், அடையாளத்தை மறைப்பதற்காக, அவர்களது பெயர்குறித்த அடையாள வில்லைகள் நீக்கப்பட்டன. அடையாளம் மறைக்கப்பட்ட காவல் துறையினர் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். அடியாட்களும் தடியேந்தி பேரணியில் பங்கேற்ற ஆண்களையும் பெண்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையின் ஒருபிரிவினர் பயன்படுத்திய தடியில் ஆணிகள் பொருத்தப்பட்டு, குருதி சொட்டச் சொட்ட இளையோர் தாக்கப்பட்டனர். கண்ணீர்ப்புகை குண்டுகளின் ஊடாக சிறிய ரவைகள் (பெல்லட் குண்டுகள்) வீசப்பட்டு படுகாயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டோர் உடலில் என்ன வகை காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையே வெளியிடக் கூடாது என்று மருத்துவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

 

இக் கொடுந்தாக்குதல் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததோடு, அது குறித்த காணொலிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்க முடியாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் வன்மத்தோடு கூறியது நீதித்துறை எந்த அளவுக்கு பாசிச நிழல் படிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

 

இத் தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், சென்னையிலும் மதுரையிலும், அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக அடக்குமுறையை விஜய் அரசு கட்டவிழ்த்து விட்டது.

 

இந்திய மோடி அரசின் பாசிச அடக்குமுறையையும், விஜய் அரசின் கண்மூடித்தனமான காவல்துறை தாக்குதல்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தில்லியில் நடந்தது போலவே சென்னையிலும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் தங்கள் சட்டையில் தொங்கிய பெயர் வில்லைகளை எடுத்துவிட்டே தாக்கினார்கள். இது பா.ச.க. அரசைப் பின்பற்றியே விஜய் அரசு செயல்படும் என்பதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.

 

கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முழுமையாக ஆதரிக்கிறது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு மாணவர்கள் நடத்துகிற உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறது.

 

அதே நேரம், நீட் தேர்விலும் பிற அனைத்திந்தியத் தேர்வுகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு நிற்காமல், நீட் தேர்வையும் பிற அனைத்திந்தியப் போட்டித் தேர்வுகளையும் இந்திய அரசு கைவிடவேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது. 

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Uploaded Image

கர்நாடகத்திற்கு தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு அனுப்பி அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

கர்நாடகத்திற்கு தமிழ்நாடு அரசு

வல்லுநர் குழு அனுப்பி அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

கடந்த 22.07.2026 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறை ஆணையும் (Cauvery Water Management Authority - CWMA) கூட்டத்தில், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு வழக்கம் போல மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைகளையும் ஒருபோதும் மதிக்காமல், காவிரி ஒழுங்குமுறைக்குழுக் கூட்டத்திலேயே தண்ணீர் தர முடியாது எனத் திமிராக அறிவித்த கர்நாடக அரசின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதத்திற்கு 9.19 ஆ.மி.க. (டி.எம்.சி) மற்றும் சூலை மாதத்திற்கு 31.24 ஆ.மி.க. என மொத்தம் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40.43 ஆ.மி.க.  தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் கர்நாடகம் எப்போதும் மதித்ததில்லை! குறுவை சாகுபடி பொய்த்துப் போகும் அபாயத்தில் இருக்கும் நிலையில், சட்டப்பூர்வமாகத் தரவேண்டிய தண்ணீரைத் தராமல் பிடிவாதம் பிடிப்பது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் வாழ்வாதாரப் போராகும்.

 

தற்போது கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில், 17.21 ஆ.மி.க.வும், ஏமாவதி அணையில், 21.15 ஆ.மி.க.வும், கபினி அணையில், 10.35 ஆ.மி.க.வும், ஏரங்கி அணையில் 4.51 ஆ.மி.க.வும் என மொத்தமாக 53 ஆ.மி.க. தண்ணீர் உள்ளது. அதாவது 52% அளவுக்கு அங்கு அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், இதில் பாதியையாவது கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

 

கர்நாடக அணைகளின் உண்மை நிலவரத்தையும், அங்குள்ள நீர் இருப்பையும் நேரில் சென்று துல்லியமாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு வல்லுநர் குழுவை (Expert Committee) கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டும். அக்குழு நேரில் ஆய்வு செய்து, தரவுகளின் அடிப்படையில் நமக்குச் சேர வேண்டிய நீரின் அளவை ஆதாரப்பூர்வமாகப் புள்ளிவிவரங்களுடன் முன்வைத்து, இந்திய அரசுக்கும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவுக்கும் அழுத்தம் கொடுத்துத் தண்ணீரைப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================




Uploaded Image

Wednesday, July 15, 2026

ஐயா உ. சகாயம் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

ஐயா . சகாயம் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையின் சின்னமாக இருந்து, திறமையாகச் செயல்பட்டு பணி ஓய்வு பெற்ற அதிகாரி, திரு . சகாயம் அவர்கள் தமக்கு காவல்துறையின் பாதுகாப்புக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு காத்துக் கொண்டுள்ளார். நேற்று (14.07.2026) இவ்வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், "ஊழலற்ற - நேர்மையான அதிகாரியாகப் பணிபுரிந்ததால் மிக அதிகமான எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ..எஸ். அதிகாரி . சகாயம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏன் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கூடாது" என்று தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைந்துள்ள .வெ.. ஆட்சி ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டும்.

 

மதுரை மாவட்ட ஆட்சியராக ஐயா . சகாயம் அவர்கள் பணியாற்றியபோது (2012) மதுரை - மேலூர் பகுதியில் தனி நபர்கள் அடித்த பெரும் கருங்கல் (கிரானைட்) கொள்ளையைத் தடுத்து, இயற்கையைப் பாதுகாத்தவர் ஐயா . சகாயம் அவர்கள். அவர் அப்படி தடுத்து நிறுத்திய போது, அதுவரை கருங்கல் வெட்டி விற்றவர்கள், 10 கோடி ரூபாய் அளவுக்கு அரசின் வருமானத்தைத் தடுத்து விட்டார்கள் என்பது ஐயா . சகாயம் அவர்கள் கண்டறிந்து வெளிப்படுத்திய உண்மை! இதனால் தங்களின் கருங்கல் கொள்ளைக்கு ஆபத்து என்று கருதியவர்கள் அன்றைய .தி.மு.. ஆட்சியைப் பயன்படுத்தி ஐயா . சகாயம் அவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். அதனால் அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து விலகி மாற்று அரசுப் பணிக்குப் போனார். அப்போதும் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சதித் திட்டங்களை எதிரிகள் தீட்டியதால், அவர் ஆயுதம் தாங்கிய தனி காவல்துறை பாதுகாப்புக் கேட்டுப் பெற்றார். அப்போது ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பு .தி.மு.. ஆட்சியில் வழங்கப்பட்டது.

 

2020 இல் பணி ஓய்வு பெற்ற பின்னும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பு அவருக்குத் தொடர்ந்தது. ஆனால் தி.மு.. ஆட்சி அமைந்தபின் 2023 இல் அந்தக் காவல்துறை பாதுகாப்பை தி.மு.. ஆட்சி நீக்கிவிட்டது.

 

அதன் பிறகும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் ஆபத்துகள் சூழ்ந்ததை அறிந்த ஐயா . சகாயம் அவர்கள் பாதுகாப்புக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். அந்த வழக்கில்தான் இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி ஐயா . சகாயம் அவர்களுக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கூடாது என்ற கேள்வியை புதிதாக பொறுப்பேற்றுள்ள .வெ. ஆட்சியிடம் கேட்டுள்ளது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை உயர் நீதிமன்றமும் ஆதரிக்கின்ற ஐயா . சகாயம் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பை 24 மணி நேரமும் வழங்க ஆணையிடுமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

===============================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

===============================

 

 

 

Uploaded Image

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT