உடனடிச்செய்திகள்

Monday, January 25, 2010

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்: த.தே.பொ.க. வீரவணக்கம்!

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் அஞ்சலி

1938-1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்தும், நஞ்சுண்டும், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று(25-1-2009) கடைபிடிக்கப்படுகிறது.

திருச்சி

இதனை முன்னிட்டு, இன்று காலை திருச்சியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திப் பேசினார். திராவிட இயக்கங்களின் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும், தமி்ழ் மட்டுமே அனைத்து நிலைகளிலும் செயல்பட வழிவகுக்கும் ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்றும் அவர் பேசினார்.

சென்னை

சென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாலமுத்து நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் தோழர்கள், இன்று காலை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிதம்பரம்

மொழிப்போரில் இந்திய அரசின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மொழிப் போர் ஈகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் தெற்கு சன்னதித் தெருவில், த.தே.பொ.க. சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் கு.சிவப்பிரகாசம், இளந்தமிழர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் அரவிந்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொள்கின்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT