உடனடிச்செய்திகள்

Saturday, July 31, 2010

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!


காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காவிரி ஆற்றுநீர் உரிமைப் பிரச்சினை காவிரி பாயும் பகுதியின் உழவர் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையாகும்.

1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை மீறி கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட, வழக்கம் போல் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் இந்திய அரசு இதிலும் கர்நாடகத்திற்கே துணை நின்றது. தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்ததோடு இந்திய அரசைப் பாதுகாக்கும் பணியை செம்மையாக செய்து வருகின்றன.

வேளாண்மையில் ஈடுபட்டுள்ள உழவர்களாகிய நாமும் கட்சிகளாக பிரிந்து லாவணியில் பங்கெடுத்து காவிரி உரிமையை இழந்துக் கொண்டிருக்கிறோம். குறுவை சாகுபடியை இழந்தோம்; சம்பாவுக்கும் நீரின்றி தவித்தோம். பின் புழுதி ஒட்டி நேரடி விதைப்புக்கு மாறினோம். தமிழக வேளாண் வல்லுனர்களும் காவிரி உரிமையைப் பெறுவதற்கு பதிலாக மாற்று பயிர் சாகுபடி செய்யுங்கள்; மரம் வளருங்கள்; சொட்டு நீர் பாசனம் செய்யுங்கள் என்று இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில அரசியல் கட்சிகள் நதிகளை இணைப்போம்! நதிகளை தேசியமயமாக்குவோம்! என போகாத ஊருக்கு வழி காட்டுகின்றன.

பாகிஸ்தானும், பங்களாதேசும் ஆற்றுநீரை உரிமையுடன் இந்திய அரசிடமிருந்து பெறுவது போல் காவிரி நீரை தமிழகமும் பெற வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்களாக உழவர்களாகிய நாம் இருக்கிறோம்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி ஜூலை வரை வரவேண்டிய நீரை தமிழகம் மாதந்தோறும் கேட்டுப்பெற்றிருந்தால் குறுவைக்க ஜன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்திருக்கலாம். இதைவிடுத்து, ஆடிப்பெருக்குக்காக அணையை திறப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பது ஒரு அரசியல் நாடகம். இதை நம்பி உழவர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது சூதாட்டத்திற்கு ஒப்பானது.

ஆகவே தமிழக உழவர்களே! இன்னும் காலம் கடந்து விடவில்லை. கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் நாம் சிந்தித்தால் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும். காவிரியில் நமது உரிமையை இழப்பது வேளாண்மையை மட்டும் பாதிக்காது. தமிழகத்து தொழில், வணிகம், குடிநீர் தேவை ஆகியவற்றையும் பாதிக்கும். ஆகவே ஒட்டுமொத்த தமிழர்களும் ஓருடம்பாய் வீறுகொண்டு எழுவோம்! காவிரி உரிமை மீட்போம்!

தமிழக அரசே! காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நிறுத்து! காவிரி நீர் தராத கர்நாடகத்தின் மீது பொருளாதார தடைவிதி! என்று கோரிக்கைகளை முன்வைத்தும், நடுநிலை தவறிய இந்திய அரசு, தமிழகத்தில் வரிவசூல் செய்வதை நிறுத்த வேண்டும், நரிமணம் பெட்ரோல், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற தமிழகத்து கனிம வளங்களை இந்திய அரசு கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 05.08.2010 அன்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இவ்வார்ப்பட்டத்தில் திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு இனஉரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT