உடனடிச்செய்திகள்

Wednesday, February 5, 2014

“பி.ட்டி கத்திரி - நியூட்ரினோ ஆய்வு” - பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்புக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்


பி.ட்டி கத்தரிக்கு அனுமதி, நியூட்ரினோ ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு

பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்புக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்





பி.ட்டி கத்தரிக்கு அனுமதி மற்றும் நியூட்ரினோ ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு என பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
.
ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் மரபீனீ மாற்ற விதை நிறுவனங்களின் பேச்சாளர் போல் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனீ மாற்றப் பயிர்களுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்ற அச்சமூட்டும் முயற்சிகள் என்று போகிற போக்கில் அவர் சொல்வது மாண்சாண்டோ , சின்ஜெண்டா ஆகிய மரபீனீ விதை நிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளது. 

ஏனெனில், இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் நியமித்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையையே தூக்கி வீசுகிற சனநாயகப் பகை அறிவிப்பாக இது உள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழுவில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். 

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் விரிவான கள ஆய்வுகளும் ஆவண ஆய்வுகளும் மேற்கொண்ட இக் குழு உலக அளவிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு 506 பக்க அறிக்கையை 2012 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் அளித்தது. 

“ மரபீனி மாற்ற உயிரிகள் – வாய்ப்புகளும் சவால்களும்” என்றத் தலைப்பிலான இந்த ஆய்வறிக்கை மரபீனி மாற்றப் பயிர்கள் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மைக்கும் மீட்க முடியாத தீங்குகளை ஏற்படுத்திவிடும் என்று முடிவு செய்து அன்று இசைவு அளிக்கப்பட்ட பி.ட்டி கத்தரிக்கும் இசைவுக்காக காத்திருந்த பிற மரபீனீ மாற்றப் பயிர்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என பரிந்துரை செய்தது.

பி.ட்டி கத்தரிக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதையும் இக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. 

அரசின் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக் குழு நியமித்த பி.ட்டி கத்தரி குறித்த ஆய்வுக் குழுவில் கணிசமானோர் அமெரிக்காவின் மரபீனி மாற்றப் பயிர் பெருங்குழுமமான மாண்சாண்டோ மற்றும் அதன் துணை நிறுவனமான மேஹைகோ நிறுவனம் ஆகியவற்றிடம் பணப்பயன் பெற்றவர்கள் என்பதை பாசுதேவ் ஆச்சார்யா குழு வெளிப்படுத்தியது. 

பி.ட்டி கத்தரிக்கு ஏற்பிசைவு வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற கே.கே திரிபாதி, மதுரா ராய் , வசந்தா முத்துசாமி, சசிகிரன் , அனந்தகுமார், திலீப் குமார் ஆகியோர் தங்கள் ஆய்வுக்காகவும் வேறு பணிகளுக்காகவும் இந் நிறுவனங்களிடம் நிதி பெற்றவர்கள், இக் குழுமங்களுக்கு ஆதரவாக வலுவான பரப்புரை செய்தவர்கள் என்பது பல தளங்களிலும் வெளிப்பட்ட செய்திதான். 

அரசே நியமித்த, காங்கிரசு உறுப்பினர்களும் இடம் பெற்ற ஆய்வுக் குழுவின் அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டு , அதில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும் , பிற மரபீனி மாற்றப் பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. 

அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டி அங்கு நிறுவப் பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மன் மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகை அறிவிப்பாகும். 
அப்பகுதி மக்களும் , தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந் நிலையம் குறித்து எழுப்பியுள்ள எதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு தலைப் பட்சமான திணிப்பாகும். 

கூடங்குளம் அணு உலைக்கும் மீதேன் திட்டத்திற்கும், நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பையும் , கவலைகளையும் கண்டுகொள்ளாமல் இவ்வாறு மக்கள் நலனுக்கெதிரான திட்டங்களைத் தொடருவது மன்மோகன் சிங் அரசின் தமிழினப் பகைப் போக்கையே காட்டுகிறது.

பிரதமர் மன் மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவையும் நியூட்ரினோ திட்டத்தை தொடரும் முடிவையும் இந்திய அரசு கைவிட வேண்டும்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT