உடனடிச்செய்திகள்

Thursday, February 20, 2014

மத்திய அரசின் கருத்து தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது பேரறிவாளன் , முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்

மத்திய அரசின் கருத்து தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது  பேரறிவாளன் , முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேரையும்
தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை



இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரறிவாளன் முருகன் சாந்தன் நளினி உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கு ஆணையிட்ட தமிழக அரசின் முடிவு கட்சி வேறுபாடின்றி தமிழ் நாட்டு மக்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் இராகுல் காந்தி இதனை கடுமையாக எதிர்த்துள்ளார். தூக்குமர நிழலிலும், சிறைக்குள்ளும் 23 ஆண்டுகள் கழித்தபிறகே இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்பதையும், அதுவும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டிய சூழலில் இந்த விடுதலை உத்தரவு வந்திருக்கிறது என்பதையும் மறந்து இராகுல் காந்தி தெரிவித்துள்ள எதிர்ப்பு அவரது பழிவாங்கும் வன்மத்தையே காட்டுகிறது.

ஆனால், இந்த வன்ம எதிர்ப்புக்கு இந்திய அரசு துணைபோய்விடுமோ என்ற ஐயம் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என் சிங் அவர்களின் கூற்றின் மூலம் ஏற்படுகிறது. இச் சிக்கலில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்கே உண்டு என்ற கருத்தும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.

குற்றவியல் நடைமுறை சட்ட விதி 432 (1) மற்றும் 433 (A) ன் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் தற்சார்பானது, தங்கு தடையற்றது. குற்றவியல் சட்ட விதி 435 இராசீவ்காந்தி கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செயல்பட முடியாதது என்ற போதிலும், ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு தமிழக அரசு 435 (1) கீழ் மத்திய அரசின் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஒருவேளை இத்தண்டனைக் குறைப்பை, அதாவது 7 பேரின் விடுதலையை எதிர்க்குமானால் அது தமிழக அரசைக் கட்டுப்படுத்தக் கூடியது அல்ல! அவ்வாறான நடுவண் அரசின் கருத்தை தமிழக அரசு பொருட்படுத்தத் தேவை இல்லை. எந்த தயக்கமும் இன்றி 7 பேரையும் விடுதலை செய்து விடலாம்.

இராசீவ்காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் மேல் முறையிட்டில் உச்ச நீதிமன்றம் இவ் வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று முடிவு அறிவித்துதான் இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 14 பேர் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் தடை சட்டம், ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு, விசாரணைக் காலத்தில் சிறையிலிருந்த ஆண்டுகளையே அத்தண்டனைக் காலமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அதாவது இப்போது சிறையில் உள்ள ஏழுபேரும் ஏற்கனெவே விடுதலை செய்யப்பட்ட 19 பேரில் 14 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி உள்ள அதிகபட்ச தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் ஆவர்.

இந் நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் முழு தண்டனையையும் அனுபவித்து முடித்துவிட்டார்கள் எஞ்சி இருப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 -ன் கீழுள்ள கொலைக் குற்றத்திற்கான தண்டனை தான்.

இந் நிலையில் மத்திய அரசாங்கத்தின் சட்டம் எதுவும் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கு குறுக்கே வர முடியாது. 432 -ன் கீழ் உள்ள மாநில அரசின் தங்கு தடையற்ற முழு அதிகாரத்தின் படியே இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இவ்வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுக் குழு நடத்தியது என்பதற்காகவே 435 (1) –ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

435 (1) –ன்படி மத்திய அரசுடன் கருத்து கேட்டு கலந்து ஆலோசிப்பது அடிப்படையில் ஒரு சட்ட சடங்கு தானே தவிர மத்திய அரசின் கருத்து மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.

435(1) மற்றும் 435 (2) ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் இந்த வேறுபாடு துல்லியமாகத் தெளிவாகும் .

மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டனை வழங்கப்பட்டிருந்தால் தான் அவ்வாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசின் கருத்து மேலோங்கும் நிலை இருக்கும். இதைத் தான் 435 (2) கூறுகிறது.

இந்த ஏழுபேரும் மத்திய அரசு அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் கீழ் உள்ள முழு தண்டனைக் காலத்தையும் சிறையில் அனுபவித்துவிட்டவர்கள். இந்த ஏழுபேரில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிறகு வாழ் நாள் தண்டனையாக தண்டனை குறைப்பு பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்குபேரும் 433 (A) –ன் படி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கடந்து விட்டவர்கள் ஆவர்.

23 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையின் துடிப்புமிக்க காலத்தை சிறையில் கழித்த இந்த ஏழுபேரை இனியும் தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு மனித நேயத்தின்பால்பட்டது என்பது மட்டுமின்றி அண்மையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சுட்டிக் காட்டியதற்கு இசைவானதும் ஆகும்.
எனவே அறிவித்துள்ள படி மூன்று நாள் கால அவகாசம் முடிந்ததும் இந்த ஏழுபேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT