மேக்கேதாட்டு அணையை எதிர்க்க வேண்டாம் என்கிறதா தமிழ்நாடு அரசு?
பெ. மணியரசன்
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
==============================
இயற்கையின் நில அமைப்புப்படி காலங்காலமாக பலநாடுகளைக் கடந்து ஓடிவரும் ஆறுகளின் பயன்பாட்டை இப்போது மேலே உள்ள நாடுகள் தடுத்துத் தாங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, கீழே உள்ள நாடுகளுக்குத் தண்ணீர் போவதைத் தடுக்க்கூடாது என்று பன்னாட்டு ஒப்பந்தங்களும், சட்டங்களும் கூறுகின்றன.
அதேபோல் இந்தியாவில் ஓர் ஆற்றின் மேலே உள்ள மாநிலம் அல்லது மாநிலங்கள், கீழே உள்ள மாநிலங்களுக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக்கூடாது என்று 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த்தகராறு சட்டம் (Inter-State Water Dispute Act - 1956) கூறுகிறது.
இந்தச் சட்டங்களையும் மனித மாண்புகளையும் முரட்டுத் தனமாக மீறி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடுத்து, தான் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்துக் கொள்கிறது. அத்தோடு நில்லாமல், மிகை மழையும் மிகை வெள்ளமும் பெருக்கெடுக்கும் காலங்களில் கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீரையும் தடுக்க, மேக்கேதாட்டு என்ற கர்நாக எல்லையில் அணைகட்ட எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளது. இதன் கொள்ளளவு 66 டிஎம்சி. இதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயில் விரிவான திட்டம் தயாரித்து அடிப்படை வேலைகளில் இறங்கியுள்ளது.
அண்மையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேக்கேதாட்டு அணை கட்டுதற்கான அடிப்படை தொடக்க நிலைப் பணிகள் முடிந்து விட்டன என்று கூறினார். இப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஓர் ஆயிரம் கோடி ரூபாய்!
பெருமழை பெய்துவரும் இந்த ஆண்டில் கூட, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி மாதாமாதம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் திறந்துவிடவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக முதல்வருடன் நல்ல நட்பு வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடன் பேசி மேக்கேதாட்டு அணைகட்டாமல் கைவிடச் செய்தால் என்ன என்று கேட்டார். அதற்கு சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “உஷ், ஜாக்கிரதை, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்கிறார்கள். கடந்த காலங்களில் அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிப்பார்த்து அடக்கிப் பேசுங்கள்” என்று எச்சரித்துள்ளார்.
காவிரிச் சிக்கலை முன்வைத்து கர்நாடகத்தில் இனவெறியர்கள் காலங் காலமாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் ஏராளமானோரை, 1991-ஆம் ஆண்டு இனப்படுகொலை செய்தார்கள். ஏராளமான தமிழர் வீடுகளை எரித்தார்கள்; தமிழர் வணிக நிறுவனங்களைக் கொள்ளை அடித்தார்கள்; இலட்சக் கணக்கான கர்நாடகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடிவந்தார்கள். அந்த இனப்படுகொலையை துரைமுருகன் மறைமுகமாக நினைவூட்டி அச்சுறுத்தினார்.
அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலை, இன ஒதுக்கல் செய்யப்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும் இல்லையா? இல்லையென்றால் தமிழ்நாட்டில் கட்சி நடத்தாதீர்கள். அதேபோல் சட்டப்படி தமிழ்நாட்டு ஆற்று நீர் உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு தி.மு.க. போன்ற கட்சிகளுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இல்லையா? உண்டு!
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கர்நாடகத்தில் நடந்ததைக் காட்டி, காவிரி உரிமையைக் கைவிடச் செய்யும் மறைமுக உள்நோக்கம் தி.மு.க. விற்கு இருக்கிறதா?
அடுத்து, மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அதற்கான ஒப்புதலை இந்திய அரசுத்துறைகளிடம் இன்னும் வாங்கவில்லை. எனவே மேக்கேதாட்டு அணை கட்டமுடியாது என்று திட்டமிட்டு, துரைமுருகன் உண்மை இல்லாத செய்திகளைத் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
மேக்கேதாட்டு அணைக்கு ஏற்கெனவே விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report- DPR) 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரித்து, அதற்கு இந்திய நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் ஏற்பிசைவைப் பெற்றுள்ளார்கள். அந்தத் திட்டத்தை அதே நீராற்றல் துறை காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் கோரி அனுப்பி வைத்தது. மேற்படி ஆணையமும் பெரும்பான்மை வாக்கு ஆதரவுடன் ஏற்றுக் கொண்டு, செயல்படுத்த வலியுறுத்தி இந்திய நீராற்றல் துறைக்கு அனுப்பிவிட்டது. இதெல்லாம் துரைமுருகனுக்குத் தெரியும். ஆனால், அதையெல்லாம் மறைத்து, விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்படவில்லை என்பது போலவும், நீராற்றல் துறை, காவிரி ஆணையம் உட்பட எதிலும் அது ஏற்கப்படவில்லை என்றும், இன்னும் பல துறைகளில் ஏற்க வேண்டியுள்ளது என்றும், எனவே, மேக்கேதாட்டு அணைகட்டப்பட மாட்டாது என்றும் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவறான தகவல்களைக் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்திய அரசின் அனுமதி இல்லாமல்தான் கர்நாடகம் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி முதலிய சட்டவிரோத அணைகளைக் கட்டிக் காவிரி நீரைத் தேக்கி வருகிறது. எனவே, மேக்கேதாட்டில் கர்நாடகம் அணைகட்ட சட்டப்படியான அனுமதி எதையும் எதிர்பாரத்துக் காத்திருக்காது. சட்டப்படி பெறவேண்டிய அனுமதிகளைப் பெறாமல் கர்நாடகம் காவிரியில் அணைகட்டினால், இந்திய அரசு அதிகாரத்தில் பா.ச.க. இருந்தாலும் அல்லது காங்கிரசு இருந்தாலும் அதைத்தடுக்காது. கடந்த கால நம் அனுபவம் அதே!
எனவே, துரைமுருகன் சட்டப் பேரவையில் போலியாகத் தெரிவித்த உறுதிகள் தமிழர்களை ஏமாறச் செய்து, நிரந்தரமாகக் காவிரியை இழக்க மறைமுகத் தூண்டுகோலாக அமையும்.
அமைச்சர் துரைமுருகன் தவறாக சட்டப் பேரவையில் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற்று, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, முடிவுகள் எடுத்து மேக்கேதாட்டைத் தடுக்கவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்தச் செய்யவும் மக்கள் திரள் போராட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுங்கட்சியான தி.மு.க. அவ்வாறு காவிரி மீட்பு முயற்சிகள் எடுக்கவில்லை என்றால், தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களின் குடிநீராகவும், 12 மாவட்டங்களின் பாசன நீராகவும் உள்ள காவிரி நீர் உரிமையை மீட்க அனைத்துப் பகுதி மக்களும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழுசார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
==========================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Post a Comment