உடனடிச்செய்திகள்

Saturday, February 3, 2018

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு!

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு!
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில் , இன்று (2018 பிப்ரவரி 3), சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சிமிகு சிறப்பு மாநாடு நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் சிவனந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டின் முதல் நிகழ்வாக, பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறத்து வைத்து உரையாற்றினார்.


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றினார்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்றினார்.
”வேலை வாய்ப்பில் தமிழர்” – கருத்தரங்கம் 

மாநாட்டின் முதல் கருத்தரங்காக “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார்.
“தமிழ்நாடு அரசுத் துறையில்..” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, “இந்தியத் தொழில்துறையில்..” என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, “இந்திய அரசு அலுவலகங்களில்..” என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, “மாற்றுத்திறனாளிகள் உரிமை..” என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.


சட்ட வரைவு

இதனையடுத்து, மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்மொழிந்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பின், கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது. பெண்ணாடம் தென்றல் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சி இசையும், சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் தமிழர் வீரவிளையாட்டு நிகழ்வுகளும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.





பாவரங்கம்

இதனையடுத்து, பாவலர்கள் பங்கேற்ற பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு!” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் ஏந்தி வா!” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தினர்.


ஆய்வறிக்கை வெளியீடு

“மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிட, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா பாரதிச்செல்வன் பெற்றுக் கொண்டார். திருவாளர்கள் ச. யோகநாதன், பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், அர. மகேசுகுமார், இரா. இரஜினிகாந்த் உள்ளிட்டோர் படி பெற்றனர்.


“தொழில் வணிகத்தில் அயலார்” - கருத்தரங்கம் 

இதனையடுத்து, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றினர்.



தீர்மானங்கள் 

இதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிந்தனர்.

வாழ்த்தரங்கம் 

நிறைவாக நடைபெற்ற வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சட்டப்பேரவை உறுப்பினர் திரு. உ. தனியரசு அவர்கள் பார்வையாளராக வருகை தந்தார்.



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றினார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறினார். பாவலர் நா. இராசாரகுநாதன், தோழர் நா. வைகறை ஆகியோர் மேடையை நெறிப்படுத்தினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட “தமிழர் வேலை உறுதிச் சட்டத்தை” தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத் தேர்வில் வெளி மாநிலத்தவரை நீக்கி தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை வழங்கக் கூடாது, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு இந்திய அரசு உடனடியாக இசைவளிக்க வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

முகநூல்: www.fb.com/tamizhdesiyam 
ஊடகம்: www.kannotam.com  
இணையம்: www.tamizhthesiyam.com  

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT