உடனடிச்செய்திகள்

Tuesday, March 20, 2012

வெள்ளியன்று(23.03.2012) நெல்லையில் கூடுவோம் - த.தே.பொ.க. போராட்ட அழைப்பு!

கூடங்குளம் அணு உலை திறப்புக்கு எதிராக நெல்லையில் கூடுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அழைப்பு!

 

தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்ப தென்று முதலமைச்சர் செயலலிதா தலைமையில் 19.3.2012 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்து, அணு உலையை திறந்துள்ளது இந்த அணு உலைக் கெதிராக மக்களைத் திரட்டி அமைதி வழிப் போராட்டம் நடத்தி வரும் அணு சக்திக் கெதிரான போராட்டக் குழு உறுப்பினர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

 

கூடங்குளம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமம் கிராமமாக வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரால் கொடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த மக்கள் பகை, அடக்கு முறை நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

     அமெரிக்கா, சப்பான், செர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்துள்ள நிலையில், உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பலரும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசின் விருப்பத்திற்கு இசைய கூடங்குளம் அணு உலையை திறக்க அணுமதிப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு ஒரு தலைச் சார்பானது. மக்களுக்கு எதிரானது.

 

அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வரும் போராட்டக் குழுவினரைப் பொய் வழக்குகளில் கைது செய்வதும் காவல் துறையினரைக் குவித்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை கைது செய்வதும், வேட்டையாடுவதும் அப்பட்டமான சனநாயக விரோத நடவடிக்கையாகும்.

 

கூடங்குளம் அணு உலையை திறப்பது என்ற தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்குழுவினரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக 23.3.2012 வெள்ளி அன்று திருநெல்வேலி தொடங்கி இடிந்தகரை செல்லும் போராட்டப் பயணத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டப் பயணத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பது என முடிவு செய்துள்ளது.

 

கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளான த.தே.பொ.க. தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள். 23.3.2012. அன்று காலை 9.00 மணிக்கு பாளையங்கோட்டை திடலில் தொடங்கும் இப்போராட்டப் பயணத்தில் தமிழின உணர்வாளர்களும் மனித நேயர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  

 தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


| நாள் : 20.03.2012 | இடம்: சென்னை-17



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT