“முற்றுகைப் போரில் ஈடுபடும் கூடங்குளம் மக்களுக்கு
துணை நிற்போம்!”
சென்னையில் அணுஉலைக்கு
எதிரான அரசியல் அமைப்புகள் உறுதி!
சென்னை, 08.09.2012.
ஒட்டு மொத்தத் தமிழ் இனத்திற்கும் ஒரே சவக்குழியாக விளங்கும் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்து, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் கீழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் இடிந்தகரை கிராம மக்களை அச்சுறுத்தும் வகையில், இடிந்தகரையில் காவல்துறை தனது படைகளைக் குவித்து வருகின்றது.
நாளை கூடங்குளம் மக்கள் முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மக்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் படைகளைக் குவித்துவரும் அரசைக் கண்டித்து, இன்று(08.09.2012) மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு மே பதினேழு இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இச்செய்தியாளர் சந்திப்பில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் அனைத்து அரசியல் கட்சி - இயக்கத்தினரால் வெளியிடப்பட்டது.
· சனநாயக ரீதியாக அமைதிவழியில் அணு உலையை மூடக்கோரி போராடி வரும் மக்களிடத்தில் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதே அடிப்படை சனநாயக மரபு என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
· மக்களாட்சியானது மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து வன்முறை மூலம் ஒடுக்க நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. உலகெங்கும் உள்ள சனநாயக அரசுகள் மக்களை அவர்களது கோரிக்கைகளுக்காக ஒடுக்குவதில்லை, மாறாக அவர்களுடன் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்கள். அதே மரபுடன் தமிழக அரசு நடந்து கொண்டு காவல்துறையினரை உடனடியாக திரும்ப்ப் பெற்வேண்டும்.
· போராடும் மக்களின் மீது அதிகப்படியான வழக்குகளை பதிவு செய்வதையும், அவர்களை கடுமையான சட்டரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாக்குவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் மீதன பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்குவது மட்டுமல்லாது, அவர்கள் மீது மேலும் வழக்குகளை பதிவு செய்வது தடுக்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்கிறோம்.
· கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தொடர்ந்து 25 வருடங்களாக போராடிவரும் அப்பகுதி மக்களது போராட்ட்த்தினை தமிழக அரசு கணக்கில் கொண்டு உடனடியாக அந்த அணு உலையை மூடவேண்டும்.
· பல்வேறு பொறியியல், சூழலியல், புவியியல், காரணிகள் அணு உலைக்கு ஏதுவாக இல்லாது இருப்பதை பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியபிறகும் மத்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கையை புறக்கணிப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் அடிப்படை புரிதலுக்கும் எதிரானதாக அமைகிறது என்பதை நாங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆகவே தமிழகத்தின் கோரிக்கைக்கு செவிசாய்த்து கூடங்குளத்தினை மூட ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
· அணு உலையில் ஒட்டு இருக்க கூடாது என்கிற சர்வதேச விதிமுறைகளை மீறி ஒட்டு வைக்கப்பட்ட உலைகளை இறக்குமதி செய்து கூடங்குளத்தில் நிலை நிறுத்துகிற வேலைப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
· மக்களின் கேள்விகளுக்கான பதிலை அளிக்காமலும் , பேரிடர் பயிற்சி அளிக்காமலும் அணு உலையினுள் எரி பொரிளை நிரப்புவது என்பது நேர்மையற்றதாகவே பார்க்கப்டுகிறது. ஆகவே இதற்கு மேலும் அணு உலையில் ஏதும் வேலைகள் நடைப்பெறாமல் தடுத்து நிறுத்துவதை அரசு உடனடியாக செய்யவேண்டும்.
· தனியார் மின் உற்பத்தியாளர்களைடமிருந்து வரும் வருடங்களில் அரசு 14,000 கோடி ரூபாய்க்கு பெறப்போகும் மிசாரமும், கூடங்குளத்தில் இருந்து பெறப்போகும் மின்சாரமானது 60 மெகாவாட் என்கிற அளவிலேயே சொற்பமானதாக இருப்பதும் என்கிற உண்மைகளை கருத்தில் கொண்டு அரசு மின் உற்பத்தி முறைக்கு சூற்றுச்சூழல் பாதுகாப்பு கொண்ட நவீன மின் தாயாரிப்பு திட்டங்களை உடனடியாக பரிசீலனை செய்வது அறிவுப் பூர்வமாகும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் பொருளாதார, சூழலியல் சார்ந்த வாழ்வுரிமைகளை பாதுக்க வேண்டும்.
· அனைத்துக்கும் மேலாக கூடங்குளம் , இடிந்தகரை , கூத்தங்குழி, உள்ளிட்ட போராடும் மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்வதும் அவர்களின் உரிமைகளை மதிப்பதும் அவசியன் என்பதை வலியுறுத்துகிறோம்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ரூட்டி திரு. வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.ஐ. தலைவர் திரு. டெகலான் பாகவி, ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, கல்பாக்கம் மருத்துவர் வீ.புகழேந்தி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார். நாளை(09.09. 2012) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் கூடங்குளம் மக்களுக்கு துணை நிற்போம் என கலந்து கொண்ட அனைத்து அமைப்புகளும் கூட்டாகத் தெரிவித்தனர்.
Post a Comment