உடனடிச்செய்திகள்

Monday, May 20, 2013

ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!




வரும் 2013 சூன் மாதத்திலிருந்து தமிழக அரசின் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை அரசுப் பள்ளிகளில் தமிழில் நடத்தப்பட்டு வந்த அறிவியல், சமூகவியல் ஆகிய பாடங்கள் ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

10.05.2013 அன்று நிதிநிலை அறிக்கையின் கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள், 3200 பள்ளிகளில் மட்டுமல்ல, பெற்றோர்கள் விரும்பினால் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்குவோம் என்று அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் இம்முடிவுக்கு எதிராக சென்னையிலுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆங்கிலத்தை மொழிப் பாடமாக(Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம். அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இப்போது பெரும்பாலும் வரலாறு, பொருளியல், கணக்கு, வணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.

கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர, இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்வி இயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள். சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை, கற்பிக்கிறார்கள்.

தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போது, கிராமப்புற மாணவர்கள், அட்டவணை வகுப்பு மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்கு ஆளாவார்கள். இவர்கள் நகர்ப்புற, மற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள். தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மனப்பாதிப்பு அடைவார்கள். இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல், ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு, ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இந்நிலையில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன் வைத்து தமிழக அரசின் முடிவுக்கெதிராக, 28.05.2013 அன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

1. 1 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

2. அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள், விளையாட்டுத் திடல் போன்றவை வேண்டும். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.

3. மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டுமெனம், அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில் தொடங்கினால், கிராமப்புற, அட்டவணை வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும்.

இவ்வாறு அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

முன்னதாக, இதற்கான ஆலோசனைக் கூட்டம், கடந்த 18.05.2013 அன்று, சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஒருங்கிணைத்தார்.

பேராசிரியர் பிரபா.கல்விமணி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் திரு. பிரின்சு கசேந்திர பாபு, பாவலர் இன்குலாப், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், சென்னை மாவட்டத் தலைவர் புலவர் இறையெழிலன், தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் சுந்தராசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், சேவ் தமிழஸ் இயக்கப் பிரதிநிதி திரு. நாசர், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பொறுப்பாளர்களும், பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர். இக்கலந்துரையாடலின் அடிப்படையில், உருவாக்கப்பட்ட தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் தான், இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ் மீதும், கல்வி மீதும் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தொடர்புக்கு: 044-24348911

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT