உடனடிச்செய்திகள்

Wednesday, December 10, 2014

தமிழக ஊடகத்துறையுனரையும் உணர்வாளர்களையும் தாக்கிய ஆந்திரா காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தோழர் பெ. மணியரசன் கோரிகை!


தமிழின உணர்வாளர்களையும், தமிழக ஊடகத்துறையினரையும் தாக்கிய
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்! 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!  

தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்று குவித்த சிங்கள குடியரசுத் தலைவர் இராசபட்சே, திருப்பதிக்கு வருவதை எதிர்த்துக் கருப்புக் கொடி காட்ட தமிழின அமைப்புகளைச் சேர்ந்தோர், திருமலையில் 09.12.2014 மாலை திரண்டிருந்தனர். தமிழகத்திலிருந்து ஊடகத்துறையினரும் சென்றிருந்தனர்.

ஆந்திரக் காவல்துறையினர் தமிழின உணர்வாளர்களை மதிப்புக் குறைவாக நடத்தி, பிடித்துத் தள்ளி தளைப்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும், 10.12.2014 விடியற்காலையில் இராசபட்சே தன் குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலில் நுழைந்த போது தமிழின உணர்வாளர்கள் எதிர்த்து முழக்கமிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமுற்ற ஆந்திரக் காவல்துறையினர் தமிழின உணர்வாளர்களைத் தாக்கியும், செய்தி திரட்ட சென்றிருந்த சன் தொலைக்காட்சி, தந்தி தொலைக்காட்சி ஆகியவற்றைச் சேர்ந்த ஊடகத்துறையினரை அடித்து, இழிவுபடுத்தியும், ஒளிப்படக் கருவிகளை நொறுக்கியும் அவர்களைத் தளைப்படுத்தியிருக்கின்றனர்.

பின்னர், ஊடகத்துறையினரை விடியற்காலை 3.30 மணியளவில் காட்டுக்குள் அழைத்துச் சென்று, அந்த இருட்டில் தனியே விட்டுவிட்டு வந்துள்ளனர் ஆந்திரக் காவல்துறையினர்.

தமிழகத்தில் அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக உள்ள ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களையும் தமிழின உணர்வாளர்களையும் பிடித்துத் தள்ளி இழிவுபடுத்தியுள்ளனர்.

ஒருவகையான வன்மத்தோடு, இனப்பாகுபாடு பார்த்து ஆந்திரக் காவல்துறையினர் தமிழர்களைத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளனர். தமிழர்கள் கேட்க நாதியற்றவர்கள் அல்லர், அவர்களது சட்டப்படியான உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு இருக்கிறது என்ற வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள், ஆந்திர அரசைத் தொடர்பு கொண்டு தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

இடம் : சென்னை-78.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT