உடனடிச்செய்திகள்

Wednesday, December 17, 2014


பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி குடித்த தாலிபான்களின் மனித வேட்டைக்குக் கண்டனம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
 
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த 16.12.2014 அன்று திடீரென்று புகுந்து, தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவர்களை ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் சென்று கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மாணவர்கள் 132 பேரும், ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 9 அலுவலர்களும் ஆக மொத்தம் 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 250 மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். எனவே, இறப்பு எண்ணிக்கை அதிகமாகிடும் அவலம் உள்ளது.


பாகிஸ்தான் ‘தெஹ்ரி-இ-தாலிபான்’ என்ற அமைப்பு, இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்று அறிக்கை கொடுத்துள்ளது. அவ்வமைப்பின் பேச்சாளர் முகமது கொரசானி, “வஜ்ரிஸ்தான் கைபர் பகுதியில் எங்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் பாகிஸ்தான் இராணுவம் படுகொலை செய்து வருகிறது. அதற்குப் பழி தீர்க்கவே, பள்ளி மாணவர்களைக் கொன்றோம்” என்று கூறியுள்ளார்.

இந்த வாதத்தை எந்த நடுநிலையாளரும் ஏற்க முடியாது. ஆயுதப்போர் நடத்துபவர்களின் பகை இலக்கு, எதிரியின் இராணுவமாக இருக்க வேண்டுமே தவிர குடிமக்களை கொல்லக்கூடாது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராகும்.

சிங்களப்படை எத்தனையோ தடவை குடிமக்கள் பகுதிகளைக் குறிவைத்துக் குண்டுபோட்டு, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. போரில் பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த தமிழ்க் குழந்தைகளைக் குறிவைத்து, செஞ்சோலைக் காப்பகத்தின் மீது சிங்களப்படை குண்டு போட்டு 91 குழந்தைகளைக் கொன்றது. பலரைப் படுகாயப்படுத்தியது. ஆனாலும், பழிவாங்கும் நோக்கில் சிங்களக் குழந்தைகளையோ குடிமக்களையோ விடுதலைப்புலிகள் தாக்கவில்லை என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.

பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளைக் கொன்று குவித்த ‘தெஹ்ரி-இ-தாலிபான்’ அமைப்பினரின் குருதி வெறியை, காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வது மென்மையான கண்டனமாகும். பிஞ்சுகளின் குருதி குடித்த தாலிபான் கயவர்களின் மனித வேட்டையைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதியில் மனித வேட்டையைத் தொடங்கி வைத்தது, வட அமெரிக்க இராணுவம். அதற்கான எதிர்வினையாகத்தான் தாலிபான் அட்டூழியங்கள் தொடர்கின்றன. அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். அந்தந்த நாட்டின் பாதுகாப்பை அந்தந்த நாட்டின் அரசுகள் உறுதிப்படுத்திக் கொண்டு, மக்கள் நாயகம் அங்கெல்லாம் தலையெடுக்க வழிசெய்வது ஒன்றே, இந்த மனிதகுல அழிப்பு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அதேபோல், பாகிஸ்தானில் தனிநாடு கேட்கும் தேசிய இனங்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி அச்சிக்கலுக்கு முடிவு காண்பதும், தாலிபான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT