உடனடிச்செய்திகள்

Wednesday, December 17, 2014

“கச்சத்தீவு சிக்கலில் மக்களை ஏமாற்ற பொன். இராதாகிருட்டிணனும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் பேசுகிறார்கள்” - தோழர் பெ. மணியரசன் கண்டன அறிக்கை!


“கச்சத்தீவு சிக்கலில் மக்களை ஏமாற்ற பொன். இராதாகிருட்டிணனும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் பேசுகிறார்கள்”
 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டன அறிக்கை!
 

கச்சத்தீவு காலங்காலமாக தமிழ்நாட்டின் சொத்தாக இருந்தது என்று பா.ச.க. நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனும், இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காகவே கச்சத்தீவை இந்திராகாந்தி இலங்கைக்குக் கொடுத்தார் என்று தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் ஆயுதம் ஏந்தி, போலிப் போர் நடத்துகிறார்கள்.

கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு அன்றையத் தலைமையமைச்சர் இந்திரா காந்தி இலங்கை அரசுக்கு கொடுத்த அநீதியைக் கண்டித்து, அன்றும் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. அதன்பிறகு நாளது வரை தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள், தென் கடலில் மீன் பிடிக்கும் உரிமை பறிபோய் இருக்கிறது. கிட்டத்தட்ட 600 தமிழக மீனவர்களை சிங்களப் படை சுட்டுக் கொன்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானத் தமிழக மீனவர்களை அடித்தும், சுட்டும் படுகாயப்படுத்தியிருக்கிறது. இப்பொழுதும் அன்றாடம் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழர்களை கடத்திக் கொண்டு போய் சிறை வைக்கிறது. படகுகளை களவாடி வைத்துள்ளது.

இந்த அளவுக்கு மீனவர் கொலைகளும் மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடரும் நிலையில், அதை தடுத்து நிறுத்தி கச்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் காங்கிரசு அரசும் எடுக்கவில்லை. வாஜ்பாய் தலைமையிலிருந்த பா.ச.க. அரசும் எடுக்கவில்லை. இப்பொழுதுள்ள பா.ச.க அரசும் எடுக்கவில்லை.

கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதைப் பற்றி தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், தமிழக பா.ச.க. தலைவர்களில் ஒருவரான நடுவண் அமைச்சர் பொன்.இராதாகிருட்டிணன் அவர்களும் இலாவணிக் கச்சேரி நடத்திக் கொண்டுள்ளனர். 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைத் தமிழர்களின் நன்மைக்காகத்தான் இந்திரா காந்தி கொடுத்தார் என்று ஒரு முழுப்பொய்யை, பொய் என்று தெரிந்தே புளுகியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அந்தப் புளுகை மறுக்கும் பொன்.இராதாகிருட்டிணன், “இந்திய நாட்டின் அசைக்க முடியாத அங்கமாகவும், தமிழர்களின் சொத்தாகவும் விளங்கிய கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு இலங்கை நாட்டிற்கு இந்திரா காந்தி தாரை வார்த்துக் கொடுத்ததை ஞாயப்படுத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன் வந்திருக்கிறார்” என்று கூறி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், தலைமுறை தலைமுறையாக தமிழர்களுக்குச் சொந்தமானத் தீவு கச்சத்தீவு என்று பொன்.இராதாகிருட்டிணன் கூறியுள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்து, மீட்க வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், கடந்த 02.07.2014 அன்று, பதில் மனு தாக்கல் செய்த பா.ச.க. நடுவண் அரசு, கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதம் வைத்தது.

இப்பொழுது பொன்.இராதாகிருட்டிண, காலம் காலமாக தமிழ்நாட்டின் சொத்து கச்சத்தீவு என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மடக்க உறுமுகிறார். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு நடுவண் அரசு கச்சத்தீவு ஒரு போதும் இந்தியாவில் இருந்தததில்லை என்று பதில் மனு தாக்கல் செய்தது. அதே, பதில் மனுவைத்தான் பா.ச.க. நடுவண் அரசும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பொய் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றிட போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் பொன் இராதாகிருட்டிணனுக்கும் இடையே, எள்ளளவு நேர்மையும் கிடையாது. உண்மையும் கிடையாது. இருவருமே பொய்யர்கள்.

பொன்.இராதாகிருட்டிணன் தமது அறிக்கையில் கச்சத்தீவு குறித்து பா.ச.க. அரசு எடுத்துள்ள நிலைபாட்டை மாற்றிட நான் முயல்வேன் என்று கூறியிருந்தால், அவர் உண்மை பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அப்படிப்பட்ட உறுதி எதையும் கொடுக்காமல் பொன்.இராதாகிருட்டிணன் கொடுத்திருக்கும் “கச்சத்தீவு உரிமை” அறிக்கை இரண்டு பொய்யர்கள் நடத்தும் விவாதமாகவும், இரண்டு பேரும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றுவதற்கு போட்டுக் கொள்ளும் சண்டையாகவும் மட்டுமே உள்ளது என்பதை தமிழ் மக்கள் நன்கு அடையாளம் கண்டு கொள்வார்கள். காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் தமிழின எதிர்ப்பில் பெயர் வேறுபாடு தவிர, வேறு எந்த வேறுபாடும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT