உடனடிச்செய்திகள்

Saturday, November 28, 2015

“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்!”


“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்!”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாவீரர் நாள் உரை!

தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று, “தமிழீழ மாவீரர் நாள்” கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் நினைவெழுச்சி – வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


சென்னையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில், ம.தி.மு.க. சார்பில், நேற்று (27.11.2015) மாலை “மாவீரர் நாள் – வீரவணக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை இக்கூட்டத்திற்குத் தடை விதிக்கவே, சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று, கூட்டம் நடத்த ஆணை பெறப்பட்டது.

கூட்டத்தின் தொடக்கத்தில், மாவீரர் ஈகச்சுடரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் தலைவர்கள், ஏற்றிவைத்தனர். கூட்டத்திற்கு, திரு. வைகோ. தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, ஓவியர் வீரசந்தனம், தமிழ்ப்புலிகள் தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன், தற்சார்பு உழவர் இயக்கம் திரு. கி.வே. பொன்னையன், கவிஞர் மணிவேந்தன், இயக்குநர் வ. கவுதமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு, வீரவணக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

“தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மறுமலர்ச்சி தி.மு.க. ஏற்பாடு செய்திருக்கும் இந்த மேடையிலே நின்று, அம்மாவீர்ர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலே எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரஞ்சுப் புரட்சி வீரர்களை, இரசியப் புரட்சி வீரர்களை, சீனப் புரட்சி வீரர்களை, வியட்நாம் விடுதலைப்போர் வீரர்களை உலகம் அறிந்த அளவிற்கு, தமிழினப் போராளிகளை உலகம் அறிந்து கொள்ளவில்லையே என்று பிற்காலத்தில் இருந்த வரலாற்று வறுமையை நீங்கச் செய்து, உலகிற்கு தமிழினத்தின் போராளிகளை அறிமுகப்படுத்தி – தமிழினத்திற்கே, அந்த இனத்தின் பெருமைகளை மீண்டும் அறிமுகப்படுத்திய மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கம்!

“வரலாறே இல்லாமல் ஒரு இனம் வாழ்வதைவிட, வரலாற்றைப் படைத்துவிட்டு மறித்துப் போகலாம்” என்று சொன்ன தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வாக்குக்கேற்ப, களம் கண்டு இன்னுயிர் ஈந்த, மாவீர்ர்களை – போராளிகளை நினைவுகூரும், மாவீர்ர் நாள் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.

மறைந்த பிறகும் தீபமாய் தமிழினத்திற்கு ஒளிவீசி நிற்கும் மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழ விடுதலைக்காக உயரீகம் செய்து மடிந்தப் போராளிகளை நினைவுகூரும் இந்த நாளுக்குக்கூட, இரங்கல் தெரிவித்துக் கூட்டம் நடத்தக்கூட, இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து இதுபோல் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

காவல்துறையினர், நவம்பர் 27 அன்று வேண்டாம், வேறொரு நாளில் கூட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கின்றனர். நவம்பர் 27 அன்று ஏன் கூட்டம் நடத்தக் கூடாது? அன்று கூட்டம் நடத்தினால், உங்களுக்கு என்ன “புனிதம்“ கெட்டுவிடப் போகிறது?

நல்லவேளை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. இல்லையெனில், இந்நேரம் நாம் கைதாகியிருப்போம். நான் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழீழத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் போல் செயல்பட்ட, சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள், வான்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்தும், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் சென்னையில் அண்ணன் வைகோ, அய்யா பழ. நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினோம்.

அன்றைக்கு முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, எங்களைக் கைது செய்து, புதிதாக அப்போது கட்டியிருந்த புழல் சிறையில் அடைத்தார். அண்ணன் வைகோ – அய்யா நெடுமாறன் ஆகியோருடன் புழல் சிறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கையின் குடியரசுத் தலைவரான மைத்ரி சிறீசேனாவும், முன்னாள் குடியரசுத் தலைவரான இராசபக்சேவும் ஒற்றைக் குரலில், மாவீர்ர் நாள் கடைபிடிக்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதேநிலைதான் என்றால், என்ன பொருள்? நாம் இருப்பது இலங்கையிலா அல்லது இந்தியாவிலா?

இந்தியா தொடர்ந்து சொல்கிறது, “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு!”. இந்தியப் பிரதமர் மோடி சொல்கிறார். பா.ச.க. அமைச்சர்கள் சொல்கிறார்கள், “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு!”. நாம் சொல்கிறோம், இலங்கை உங்களுக்கு நட்பு நாடு அல்ல, சகோதர நாடு! உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு அப்படித்தான் இருக்கிறது!

அப்படியெனில், நாங்கள் உங்களுக்கு யார்? நீங்கள் எங்களை பகைவர்களாக்கிக் கொண்டுள்ளீர்கள். தமிழர் பகைவர்கள் - சிங்களர் நண்பர்கள் என்பதுதான் இந்திய அரசின் தொடர்ச்சியான அணுகுமுறையாக இருந்து வருகிறது.

இந்தக் கூட்டம் நடந்தால், இந்திய அரசு கேள்வி கேட்குமோ என தமிழ்நாடு அரசு அஞ்சுகிறது. எனவே முந்திக் கொண்டு தடை போடுகிறது.

“எங்கள் மண்ணில் இன உணர்ச்சி உண்டு, விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்களை நாங்கள் நினைவுகூருவது இயல்புதான், இதையெல்லாம் தடுக்க முடியாது” என தில்லி அரசிடம் சொல்லும் துணிச்சல், தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லையென கருதலாமா? அல்லது மனம் இல்லையென கருதலாமா? வேறெப்படி கருதுவது?

கடந்த ஆண்டும் இப்படித்தான் நீதிமன்றம் சென்று நடத்தினோம். இந்த ஆண்டும் இப்படித்தான் இருக்கிறது. நீதிமன்றம் சென்று இந்த இரங்கல் நிகழ்வை நடத்த வேண்டிய அவலம் இருக்கிறதென்றால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இந்தியாவும் இலங்கையும் சகோதர உறவு வைத்திருக்கிறது. அது ஆரிய உறவு! அதை அவர்களே சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் தமிழர்கள் தவிர்த்து – இலங்கையில் தமிழர்கள் தவிர்த்து, நாமெல்லாம் ஆரியர்கள் என சிங்களத் தூதர் ஒருவர் சொன்னார்.

நாங்களெல்லாம் மேடையில் பேசி வருவதை, நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரசு உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருக்கிறார். “நீங்கள் தான் வெளியிலிருந்து வந்தவர்கள், நாங்கள் இந்த மண்ணின் மக்கள்” என அவர் பேசினார்.

இது குறித்து தொலைக்காட்சியில் விவாதம் நடந்தபோது, தில்லியிலிருந்து அந்த விவாதத்தில் கலந்துகொண்ட, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் டி.கே. ரங்கராசன், “கார்கே வரலாற்றைத் தானே சொல்கிறார்” எனக் கருத்துத் தெரிவித்தார்.

இப்படி வரலாறு நம்முடைய மேடைகளிலிருந்து மட்டுமல்ல! அவர்களது மேடைகளிலிருந்தும் வெளி வருகிறது. அதற்கான அழுத்தம் எழுந்திருக்கிறது! நீண்ட நாட்களுக்கு உண்மையான வரலாற்றைப் புதைத்து வைத்திருக்க முடியாது.

வடவர்களும், இந்திய ஆட்சியும் எப்பொழுதும் தமிழர்களை பகைவர்களாகவே, அயலார்களாகவே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அதைப் புரிந்து கொள்ளும் உணர்ச்சிப் போக்கு மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அது பேரெழுச்சியாக மாற இருக்கிறது. அதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.

அதை கோட்பாட்டுப்படி சரியாகக் கொண்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் குழப்பங்கள் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் பொறுப்புணர்ச்சியும் தேவை.

ஏதோ பூகோள அமைப்பில், தமிழீழம் தெற்காசியாவின் மூலையில் இருப்பதால்தான், இந்தியா தமிழீழப் போராட்டத்தை எதிர்க்கிறது என நாம் கருதிக் கொள்வது சரியல்ல! அது, இந்தியாவின் தமிழினப் பகையை மூடிமறைக்கும் கருத்தாகும்.

தமிழினம் என்பதால்தான் இந்தியா, தமிழீழத்தை மறுக்கிறது. தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறது. அதே, இலங்கையின் வட பகுதியில் வேறொரு இனம் இப்படியொரு போராட்டத்தை நடத்தியிருந்தால், இந்தியா ஆதரித்திருக்கும். வங்க தேச விடுதலையை இந்தியா ஆதரிக்கவில்லையா? அதுபோல.

தமிழர்களை எப்பொழுதும், இந்திய ஆளும் வர்க்கம் அது பா.ச.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி, பகைசக்தியாகத் தான் கருதுகிறது. அதனால்தான் நம் போராட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. பூகோள அரசியல் என்பதெல்லாம், நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சாக்கு போக்கு! இங்கே பூகோள அரசியல் வேலை செய்யவில்லை, இந்தியாவின் இன அரசியல்தான் வேலை செய்கிறது.

இந்துத்துவா என்பது வெறும் மதவாதமல்ல! அது ஆரிய இனவாதம். இரண்டாவது, பார்ப்பன வர்ணாசிரம தருமம். மூன்றாவதாகத்தான், இந்து மதவெறிவாதம். எனவே, இந்துத்துவாவை வெறும் மதவாதமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது.

இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால்தான், இந்தியாவுக்கும் நமக்குமான உறவு எப்படிப்பட்டது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

தமிழீழச் சிக்கலை இந்திய அரசுக்கு புரிய வைக்கலாம் என நினைத்தால், நம்மைப் போல் ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய அரசுக்குப் புரியவைக்க முடியாது, இந்திய அரசைப் பணியவைக்க வேண்டும். அதற்கான ஆற்றல் - பலம், ஏழரை கோடித் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் இருக்கிறது. அதற்கான எழுச்சி இங்கிருந்துதான் உருவாக வேண்டும். தமிழின உணர்ச்சியுடன் இந்தியாவை அடையாளம் கண்டு – புரிந்து கொண்டுதான் அதை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பேரிழப்பிற்குப் பிறகாவது, இதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாவீரப் போராளிகளே, நீங்கள் ஏற்றி வைத்துள்ள வெளிச்சம் தமிழீழத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எழுச்சியூட்டும். இந்த வெளிச்சத்திலேயே தமிழீழத்தையும் வெல்வோம்! தமிழ்நாட்டையும் எழுச்சிபெறச் செய்வோம்! மாவீரர்களே! உங்களுக்கு எமது வீரவணக்கம்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி தென்சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் கவியரசன், சாமி, முழுநிலவன், நல்லசிவம், காளிராஜ், பாலசுப்பிரமணியம், மணி, வினோத் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு, மெழுகு திரிகள் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

குடந்தை வட்டம் – சாமிமலை கடைவீதியில், நேற்று மாலை, மாவீர்ர் நாள் வீரவணக்க நிகழ்வு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. அருள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு மெழுகு திரியேற்றி, வீரவணக்கம் செலுத்தினர்.

இன்று மாலை குடந்தை கும்பேசுவரர் கோயில் மேல வீதியிலுள்ள நாடார் திருமண மண்டபத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையேற்கிறார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றுகிறார். நிறைவில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச. செந்தமிழன் நன்றி தெரிவிக்கிறார்.

இதுபோல், தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT