உடனடிச்செய்திகள்

Wednesday, May 25, 2016

தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா. அருணாச்சலம் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்!



தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்
அய்யா நா. அருணாச்சலம் அவர்களுக்கு
தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்!


தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனரும், மாணவர் நகலகத்தின் உரிமையாளருமான அய்யா. நா. அருணாச்சலம் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (23.05.2016) மாலை, சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அகவை 76.
ஆனாரூனா என்று அறியப்பட்ட அய்யா நா. அருணாச்சலம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், “ஒரு குறிப்பிட்டக் காலத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இன வரலாற்ற முன்னோக்கிய ஒரு நகர்வை ஏற்படுத்திய, ஆனாரூனா அவர்கள், என்றென்றும் தமிழர் நெஞ்சில் பதிந்திருப்பார்என்று தெரிவித்திருந்தார்.
சென்னை கொட்டிவாக்கம் இராமலிங்கம் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யா அருணாச்சலனாரின் உடலுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இன்று (24.05.2016) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இரா. இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன், தோழர்கள் வடிவேலன், பாலசுப்பிரமணியன், இளவல், அருண் குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று, அய்யாவின் திருவுடலுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இன்று (24.05.2016) பிற்பகல் 2 மணிக்கு மேல், அய்யாவின் திருவுடல், அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் - நன்னிலம் வட்டம் - திருகண்ணபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது. நாளை காலை 10 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் அங்கு நடைபெறுகின்றன.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் அதில் பங்கேற்கின்றனர்.
அய்யா ஆனாரூனாவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செம்மாந்த வீரவணக்கங்கள்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT