உடனடிச்செய்திகள்

Sunday, February 19, 2017

“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை, வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!” கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடையே பெ. மணியரசன் பேச்சு!

“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை, வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!” கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு!
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் “தமிழ் மன்றம்” சார்பில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் நேற்றும்(17.02.2017) இன்றும்(18.02.2017) இருநாட்களாக நடந்து வந்த “தமிழ் அறிவுத் திருவிழா – 2017” இன்று நிறைவு பெற்றது.
கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், நேற்று கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான இன்று (18.02.2017), தமிழ்நாடு தழுவிய அளவில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற கவியரங்கம், பேச்சு, விவாதம், நாடகம், நடனம் உள்ளிட்ட திறனறிதல் போட்டிகள் நடந்தன. மாலை விழாவில் நிறைவரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நிறைவரங்கில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்துரையாற்றியதோடு, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். தமிழ் மன்றப் பொறுப்பாளர் பேராசிரியர் திரு. ப. சிவக்குமார், முன்னாள் மாணவரும், தொழில் முனைவோருமான திரு. சந்திப் நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்புரையாற்றிய தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு பேசினார்:
“தமிழ் மன்றம் நடத்தும் இவ்வாண்டு விழாவிற்குத் “தமிழ் அறிவுத் திருவிழா” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள். பாராட்டிற்குரிய தலைப்பு! விழா தொடங்கும் முன் போட்ட காணொலிக் காட்சியில், முத்தமிழ் நிகழ்ச்சி எனப் போட்டிருந்தீர்கள்.
தமிழ் மொழி என்றாலே அறிவு மொழி என்றுதான் பொருள். தமிழினம் ஒர் அறிவியல் சமூகம்! இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும் வகையில் முத்தமிழ் என்று நாம் சொல்கிறோம்.
இயல், இசை, நாடகம் என்ற இம்மூன்றும் உலகத்தின் பல மொழிகளிலும் இருக்கின்றன. ஆனாலும், அவை மூன்று ஆங்கிலம், மூன்று பிரஞ்சு, மூன்று டச்சு என்று போட்டுக் கொள்வதில்லை! தமிழர்கள் மட்டும் ஏன் முத்தமிழ் எனப் போட்டார்கள்? எதையும் நுணுகி ஆராய்ந்து வகுத்துத் தொகுக்கின்ற அறிவியல் முறை நம் முன்னோர்களிடம் இருந்தது.
இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் மூன்று வகை இலக்கணங்களைச் சொன்னார்கள். அதற்குள்ளும் இரண்டு வாழ்வியல் பிரிவுகள் பிரித்தார்கள். ஒன்று, அக இலக்கியம். இன்னொன்று, புற இலக்கியம்.
உலகில் பல மொழிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அக இலக்கியம் என்ற தனிப் பிரிவு கிடையாது. இந்தியத் துணைக் கண்டத்தில், காவியங்களும் பல்வேறு இலக்கியங்களும் நிறைந்த மொழி என சமற்கிருதத்தைச் சொல்கிறார்கள். அந்த சமற்கிருதத்தில் நம்முடைய அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை போன்ற அக இலக்கியம் கிடையாது. ஒரு அகத்துறையும் கிடையாது.
தமிழர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து தொகுக்கக்கூடியவர்கள். ஒரு கருத்தோ ஒரு கோட்பாடோ சொன்னால், அதற்கு வரைவிலக்கணம் சொல்லக்கூடிய தருக்கவியல் பாங்கு தமிழர்களிடமே இருந்தது. மாணவர்களாகிய நீங்கள்கூட, யாராவது ஒரு கோட்பாட்டையோ புதிய கருத்தையோ சொன்னால் அதற்கு வரைவிலக்கணம் சொல்லுங்கள் என்று கேளுங்கள்.
இரண்டாயித்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனுக்கு குட புலவியனார் என்ற புலவர் அறிவுரை கூறினார். மன்னவர்களைப் பொய்யாகப் புகழ்ந்து பாடுபவர்கள் அல்லர் நம் சங்கப்புலவர்கள்! இப்பொழுது உள்ளது போல் கவிஞர்கள், தமிழறிஞர்கள் அந்த காலத்தில், ஆட்சியாளர்களின் முதுகு சொரிந்து வாழவில்லை!
அந்த வகையில்தான் குடபுலவியனார் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்த்து சொன்னார்: “உன் போர்க்கள வெற்றிகள், உனக்கு நிலைத்த புகழைத் தராது. மக்கள் உயிரைப் பாதுகாக்கும் செயல்கள்தான், உனக்குப் புகழைத் தரும். இறந்த பின்னும் உன் புகழை நிலை நிறுத்தும்” என்று சொல்ல வந்த குடபுலவியனார், சில வரையறுப்புகளைச் சொன்னார்.
“உயிர் என்பது உணவின் பிண்டம். அதாவது, உணவினால் இயங்குவது. உணவு என்பது நீரும் நிலமும் சேர்ந்தது. நிலத்தோடு நீரை இணைத்தவர்தான் உணவைக் கொடுத்து, உயிரைக் காத்தவர் ஆவார். எனவே, நீ ஏரி, குளங்களைப் பெருக்கி மக்களைக் காப்பாற்றினால், இம்மண்ணில் உன் புகழ் தங்கும். இல்லையேல் தங்காது” என்றார். இந்தப் பாட்டில், உயிர் என்றால் என்ன, உணவு என்றால் என்ன என்று வரைவிலக்கணம் தருகிறார்.
மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்கள் பேச்சை, பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் இல்லை! வழிகாட்டுவதற்குரிய உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் நீங்கள்! (கைதட்டல்) எனவே சீரழிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத் தலை நிமிர்த்த, வழிகாட்ட வாருங்கள்!
உங்களிடம் புதிதாகத் தோன்றும் கருத்துகளை கூச்சப்படாமல், தயங்காமல், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வெளிப்படுத்துங்கள். தவறாகச் சொல்லி விடுவோமோ என்று அச்சப்படாதீர்கள். ஒருவேளை, தவறாகப் போய்விட்டால், திருத்திக் கொள்ளலாம். அடுத்த தடவை சரியான கருத்தை வெளியிட முடியும்!
ஆங்கில அறிஞர் எமர்சன் “தன்னம்பிக்கை” என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், “உங்கள் சிந்தனையில் தோன்றும் புதிய கருத்துகளை தயங்காமல் வெளிப்படுத்துங்கள். தாழ்வு மனப்பான்மை காரணமாக அல்லது கூச்சம் – வெட்கம் ஆகியவற்றின் காரணமாக அதை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒரு சில ஆண்டுகள் கழித்து அதே கருத்தை இன்னொருவர் சொல்வார். அப்போது உங்கள் நிலை என்ன? இக்கருத்தை முதலில் சிந்தித்த நீங்கள், இன்னொருவர் சொன்ன பிறகு அதை ஏற்க வேண்டிய நிலைக்கு உள்ளாவீர்கள். அந்தக் கருத்து, அவருடையதாக இருக்கும்! எனவே, உங்களிடம் தோன்றும் சிந்தனைகளை அச்சப்படாமல் வெளிப்படுத்துங்கள்” என்றார். அதையேதான், உங்களிடத்தில் நான் சொல்கிறேன்.
முன்முயற்சி (Initiative) எடுப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள முக்கியமான சிக்கலே முன்முயற்சி எடுப்போர் மிகமிகக் குறைவாக இருப்பதுதான்! சாலையில் ஒருவர் விழுந்து கிடந்தால், “அய்யோ விழுந்து கிடக்கிறாரே” என்று சொல்லிக் கொண்டே பலர் போய்க் கொண்டிருப்பர். அவர்களுக்கு இரக்க குணம் இல்லாமல் இல்லை! முன்முயற்சி எடுப்பதில் தயக்கம் இருக்கிறது. சிலருக்கு வெட்கம் அல்லது கூச்சம்கூட இருக்கும். பத்து நிமிடம் கழித்து அதே சாலையில் இருசக்கர வண்டியில் வந்த ஒருவர், வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்து கிடப்பவரைத் தூக்குவார். உடனடியாகப் பலரும் அங்கே ஓடி வந்துவிடுவார்கள். ஒருவர் சோடா வாங்கிக் கொடுப்பார். இன்னொருவர் தண்ணீரை முகத்தில் தெளிப்பார். மற்றொருவர் விழுந்து கிடக்கும் அவரது இரு சக்கர வண்டியைத் தூக்கி நிறுத்துவார். இந்தச் செயல்கள் பத்து நிமிடங்களாக அவர் விழுந்து கிடந்தபோது, ஏன் நடக்கவில்லை? முன்முயற்சி எடுப்பதில் உள்ள குறைபாடுதான்! முன்முயற்சி எடுப்பவர் வந்தவுடன் மக்கள் கூடிக் கொண்டார்கள்.
நீங்கள் முன்முயற்சி எடுப்பவராக இருங்கள்! புதிய வரலாற்றை உங்களால் உருவாக்க முடியும்! நீங்கள் முன்முயற்சி எடுத்தால், தமிழ்ச்சமூகம் உங்களோடு சேர்ந்து கொள்ளும்! (கைதட்டல்)
அந்தக் காலத்தில், ஒற்றையடிப் பாதையில் பயணம் போன ஒருவர், அப்பாதையில் கிடந்த முள் கொத்தைக் கவனிக்காமல் மிதித்துவிட்டார். அது குத்தி விட்டது! அவர் உடனே நின்று காலிலிருந்த முள்ளை நீக்கிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், அந்த முள் கொத்து பாதையில் அதே இடத்தில் கிடந்தது. அரைமணி நேரம் கழித்து, இன்னொருவர் அந்தப் பாதையில் வந்தார். அவர் முள் கொத்தைக் கவனித்துவிட்டார். காலில் குத்திக் கொள்ளாமல் ஒதுங்கிப் போய்விட்டார். அரைமணி நேரம் கழித்து, மூன்றாவதாக ஒரு நபர் வந்தார். அவர் முள் கொத்தைப் பார்த்தார். அவர் அதை எடுத்து அருகிலிருந்த வேலியில் போட்டு விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த மூன்றாவது நபராக நீங்கள் இருங்கள்! (கைதட்டல்)”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். நிறைவில், தமிழ் மன்றப் பொருளாளர் மாணவர் கௌரி சங்கர் நன்றி நவின்றார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT