உடனடிச்செய்திகள்

Saturday, February 18, 2017

"பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையெனில், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்ட மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” கேரள தடுப்பணையை பார்வையிட்ட பின் கோவையில் - பெ. மணியரசன் பேட்டி!

 "பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையெனில், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்ட மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” கேரள தடுப்பணையை பார்வையிட்ட பின் கோவையில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேட்டி!

“பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையென்றால், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்டங்களில் வாழும் மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரக்கூடாது என்ற முடிவோடு, பவானி ஆற்றில் கேரள அரசு கட்டி ஆறு தடுப்பணைகள் கட்டி வருகிறது. கேரள மாநிலம் – தேக்குவட்டையில் கட்டப்பட்டு வந்த தடுப்பணையை, இன்று (17.02.2017) காலை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்த்து வந்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்க கோவை மாநகர்ச் செயலாளர் தோழர் விளவை இராசேந்தின், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, எழுத்தாளர் வான்முகில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன் உள்ளிட்ட தோழர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அதன்பின் கோவை செய்தியாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார்:

“இன்று காலை கேரள மாநிலம் – அட்டப்பாடி அருகில் தேக்குவட்டையில் கேரள அரசால் தடுப்பணை கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டோம். அங்கு தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்த ஊர் மக்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்களை கேட்டபோது, பவானி ஆற்றில் இன்னும் ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே அங்கு பொறிக்காரி மடுவு என்ற 100 அடி ஆழமான இயற்கையான நீர்த்தேக்கம் இருப்பதாகவும், அதை வைத்து அம்மக்கள் தங்கள் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து கொள்வதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கேரள அரசு, இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பாசன நீருக்காகவே தடுப்பணைகள் கட்டுகிறோம் என்று கூறுகிறது. உண்மையில், பல கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள கேரளப் பகுதிகளுக்கு பவானி நீரைக் கொண்டு செல்லும் முயற்சியாகவே, இந்தத் தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இந்தத் தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரை பெரிய அளவிலான பம்புகள் வைத்து கொண்டு செல்லத் திட்டமிடுகிறது.
ஆற்று நீரைக் கொண்டு பாரம்பர்யமாக வேளாண்மை நடைபெற்று வந்த பகுதிகளுக்குத்தான் Riparian Right என்ற பாசன உரிமை பொருந்துமே தவிர, புதிதாகப் பாசன விரிவாக்கம் நடைபெறும் பகுதிகளுக்கு இது பொருந்தாது.

ஏற்கெனவே காவிரித் தீர்ப்பாயம், காவிரி ஆற்றில் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு முன், அத்தண்ணீரைப் பாரம்பர்யமாக பாசன நீராகப் பயன்படுத்தி வரும் கடைமடை மாநிலத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறுகிறது. இதை மீறும் வகையில்தான் ஏற்கெனவே ஆந்திர அரசு, பாலாற்றில் பல தடுப்பணைகளைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒருசொட்டு நீர் கூட வரவிடாமல் தடுத்துள்ளது. கடைசி அணையையும் புல்லூரில் கட்டிவிட்டது.
தற்போது, கேரள அரசு அதேபோல் பவானி ஆற்றில் சட்ட விரோதத் தடுப்பணைகள் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவிடாமல் தடுக்க முற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சற்றொப்ப 3 இலட்சம் ஏக்கர் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்படும். இம்மூன்று மாவட்டங்களிலுள்ள 1 கோடி மக்களின் குடிநீர் பறிக்கப்படும். ஒட்டுமொத்தமாக இம்மூன்று மாவட்ட மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் அபாயமுள்ளது.
கேரளத்திற்குத் தண்ணீர் வளம் ஏராளமாக உள்ளது. கேரளத்தில் அரபிக்கடலில் ஆண்டுக்கு 2,000 ஆ.மி.க. தண்ணீர் கடலில் கலக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் முயன்றால் பவானி நீரைத் தடுக்காமல், பிற பகுதி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், தமிழ்நாட்டுக்கு அந்த வாய்ப்பில்லை.

எனவே, கேரள அரசு பவானியின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், கேரள அரசுக்கும் – இந்திய அரசுக்கும் அரசியல் அழுத்தம் கொடுத்து, இத்தடுப்பணைகள் கட்டும் பணியை நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், இக்கோரிக்கைக்காக கேரள முதல்வரையும், இந்தியத் தலைமை அமைச்சரையும் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறி கர்நாடக அரசு காவிரியில் அணைகள் கட்டுவதையும், ஆந்திர அரசு பாலாற்றில் அணைகள் கட்டுவதையும் இந்திய அரசு இதுவரை தடுக்கவில்லை. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளை செயல்படுத்தும் சட்டக்கடமையையும் இந்திய அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து, தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டு அணுகுமுறையை இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்தச் சிக்கலிலும் இது தொடர்கிறது.
இந்திய அரசும், கேரள அரசும் நடவடிக்கை எடுத்து பவானி ஆற்றில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடச் செய்யவில்லையென்றால், தங்கள் வாழ்வுரிமையைக் காப்பாற்றிக் கொள்ள அறப்போர் நடத்துவரைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மலையாளிகள் பல இலட்சம் பேர் வாழ்கிறார்கள்; தொழில் செய்கிறார்கள்; வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கும் குடிநீர், குடும்ப நீர், தொழில் துறைக்கான நீர் பவானியிலிருந்துதான் கிடைக்கிறது.
காவிரி உரிமைச் சிக்கலில் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் ஆணைகளை செயல்படுத்தக் கர்நாடகம் மறுத்து வருவதன் மூலம், தமிழ்நாட்டில் 25 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருபது மாவட்டங்களுக்குக் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், இந்திய அரசு இனப்பாகுபாடு பார்த்து, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை நிற்கிறது; தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தித் தமிழ்நாட்டு வாழ்வுரிமையைக் காக்க அது முன்வரவில்லை.
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் சிற்றணையைச் செப்பனிட்டு முழுக் கொள்ளளவான 152 அடி தண்ணீரைத் தமிழ்நாடு தேக்கிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், சிற்றணைக்குக் கட்டுமானப் பொருள் எதையும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அணைக்கு அன்றாடம் நம் அதிகாரிகள் உரிமையுடன் சென்று வர முடியவில்லை. இதில், இந்திய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முன்வரவில்லை. இதிலும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு அரசியல் நடத்துகிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இந்த இனப்பாகுபாடு பா.ச.க. ஆட்சியில் மட்டுமில்லை, காங்கிரசு ஆட்சியிலும் செயல்பட்டது.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழியாகத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படும்போது, வாழ்வுரிமை பறிக்கப்படும்போது, தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தோம்.
பவானியில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தைக் கேரள அரசு கைவிடவில்லையென்றால், பவானித் தண்ணீரைப் பயன்படுத்தும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலையாளிகளைக் கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு அழைத்துக் கொள்ள கேரள அரசு மறுத்தால், தமிழர்கள் இம்மூன்று மாவட்டங்களில் வாழும் மலையாளிகளின் வீட்டு வாசலுக்குச் சென்று கேரளாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு அறவழியில் அவர்களைக் கேட்டுக் கொள்ளும் மக்கள் இயக்கத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தோழர்கள் திருவள்ளுவன், ஸ்டீபன்ராஜ், இராசேசுக்குமார், திருப்பூர் சிவக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT