உடனடிச்செய்திகள்

Tuesday, October 31, 2017

“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு!” காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தோழர்கள் கைது!

“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு!” திருச்சி – சென்னையில் இந்திய அரசு நிறுவனங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கைது!
 
 
 
 
 
 
 
 
 
 
 
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு – தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்கக் கோரியும், 10% மேலுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்றக் கோரியும், அரசுத்துறையில் 100% தமிழர்களுக்கு வழங்கக் கோரியும், திருச்சி பெல் தொழிற்சாலை முன்பும், சென்னை வருமான வரி அலுவலகம் முன்பும், இன்று (31.10.2017) காலை - வேலை கேட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
திருச்சி

பொறியியல் படித்த தமிழ் மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பிக்கும் அவலம் நிலவும் தமிழ்நாட்டில், தொடர்ந்து வெளி மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் திருச்சி திருவெறும்பூரிலுள்ள இந்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பெல் நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலை கேட்டு, இன்று காலை திருவெறும்பூர் பெல் நிறுவன வாயிலில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் பேரியக்கத் தோழர்கள் திரண்டனர். பெல் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் காவல்துறையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
நுழைவு வாயிலை நோக்கிச் சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திட, அங்கேயே விரிப்புகளை விரித்து அமர தோழர்கள் முயன்றனர். காவல்துறையினர் ஓடி வந்து, விரிப்புகளைப் பிடுங்கிக் கிழித்தெறிந்த நிலையில், அங்கு வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் குழ. பால்ராசு, குடந்தை விடுதலைச்சுடர், மதுரை இரெ. இராசு, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் நா. இராசாரகுநாதன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, புளியங்குடி க. பாண்டியன், கதிர்நிலவன், ப. சிவவடிவேலு, சாமிமலை க. தீந்தமிழன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார், பாபநாசம் செயலாளர் தோழர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பேரியக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களுமாக 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
சென்னை

சென்னையில், வடமாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ள நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில், காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற பேரியக்கத தோழர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
வருமான வரித்துறை அலுவலகம அருகில் கூடி நின்ற தோழர்கள், “தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை கொடு! வேலை கொடு!”, “வெளியேற்று வெளியேற்று! வெளி மாநிலத்தவரை வெளியேற்று!” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு வருமான வரி அலுவலகம் நோக்கிச் சென்ற தோழர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, ஈரோடு செயலாளர் தோழர் வெ. இளங்கோவன், பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், அ.ரா. கனகசபை, ஓசூர் செம்பரிதி, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில்குமரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன் போராட்டத்தின் ஞாயத்தை விளக்கிப் பேசினார்.
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

ஊடகம்: www.kannotam.com 

இணையம்: www.tamizhthesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT