உடனடிச்செய்திகள்

Monday, June 17, 2019

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!
மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் 'தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் "தமிழக அரசே தமிழக அரசே, இரத்து செய் இரத்து செய் வேதகால பிராமண முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பது இரத்து செய்!", "தமிழன்னை சிலையா சமற்கிருத மாதா சிலையா?" என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை எழுப்பிய தோழர்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

நாம் தமிழர் கட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. வெற்றிக்குமரன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மருது மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு இராஜ்குமார், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் திரு. சி. பேரறிவாளன், தமிழ் உரிமை கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழில் வழக்காட உரிமை கோரும் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், ஏழு தமிழர் விடுதலை கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. காந்தி, வீரகுல அமரன் இயக்கம் நிறுவனர் திரு. இரா. முருகன், மக்கள் சட்ட உரிமை இயக்க மாநிலத் தலைவர் திரு. அண்ணாதுரை, புரட்சிகர இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் குமரன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசிர்வாதம், மதுரை ஸ்டார் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் பழ. இராஜேந்திரன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி தோழர்கள் பாண்டியம்மாள், ரேவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் என 200 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களும் ஆண்களும் தங்கள் கைக்குழந்தையோடு போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகினர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது மதுரை காவல் படை மைதானத்தில் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சிலை அமைக்கக் கோரும் ஏல ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்றும், இது போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்றும் ஐயா பெ. மணியரசன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு நிற்காமல் தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களையும், தமிழ்நாட்டு வல்லுனர்களையும் கொண்ட புதிய குழு அமைத்து கல்லிலோ அல்லது வெங்கலத்திலோ, தமிழர் மரபுப்படி தமிழன்னை சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் ஐயா பெ. மணியரசன் அவர்கள் வலியுறுத்தினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT