உடனடிச்செய்திகள்

Thursday, October 27, 2016

“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் திரு. எஸ்.ஆர். நாதன் நினைவேந்தலில் - பெ. மணியரசன் உரை!

“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் திரு. எஸ்.ஆர். நாதன் நினைவேந்தலில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் உரை!


சிங்கப்பூரின் மேனாள்  குடியரசுத் தலைவரான -_ தமிழர் திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள், கடந்த 22.08.2016 அன்று தமது 92ஆவது அகவையில், சிங்கப்பூரில் காலமானார். தஞ்சைத் தமிழ்ச் சங்கம் சார்பில், அவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 26.09.2016 மாலை தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, “புதிய பார்வை” இதழ் ஆசிரியர் முனைவர் ம. நடராசன் தலைமை தாங்கினார். தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிரீகம் செய்த சங்கர், உண்ணாப்போர் நடத்தி உயிரீகம் செய்த திலீபன் ஆகியோரின் படங்களுக்கு, தலைவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி, மெழுகு திரி ஏற்றி நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன் வரவேற்றார். 
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள், திரு. எஸ்.ஆர். நாதன் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைத் தலைவர் தோழர் சி. மகேந்திரன், நாம் தமிழர் கட்சி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, ம.தி.மு.க. பொறியாளர் வி. விடுதலைவேந்தன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்ச்சியை, பேராசிரியர் வி. பாரி ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பேசியதாவது:
“1999ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகள், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக பணியாற்றிய எஸ்.ஆர். நாதன் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு. செல்லப்பன் இராமநாதன் அவர்களின் பன்முக ஆளுமை குறித்து, அவர் மறைந்த பிறகே நான் அறிந்து கொண்டேன். சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றதும் அவரே என்று இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் நாடான சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக இருந்த ஒரு தமிழர், கல்வியில் சிறந்து விளங்கி, மொழிபெயர்ப்பாளர் பணியாற்றி, பல்வேறு நாடுகளில் தூதராகப் பணியாற்றி பல்கலைக்கழகத் துணை வேந்தராக விளங்கி பன்முக ஆளுமை கொண்ட மனிதராக வாழ்ந்திருக்கிறார். பள்ளிக்கல்வியில் தோல்வியுற்று, பின்னர் சொந்த முயற்சியில் தொலைக்கல்வி கற்று அரசியல் வித்தகராக, ஆய்வாளராக உயர்ந்திருக்கிறார். அவரது இந்தத் தன்முயற்சி நம் இளைஞர்களுக்கு உந்து விசை அளிக்கும்.
அவரது இறுதி ஊர்வலத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டதையும், சிங்கப்பூர் அரசு சிறப்பாக அவருக்கு நன்றி தெரிவித்ததையும் இங்கு, இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் காட்டிய ஆவணப்படம் விளக்கியது.
தமிழ் மக்கள் சிங்கப்பூர், மலேசியா, தென்னாப் பிரிக்கா என பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் தாய்த்தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையே குருதி ஓட்டம் போன்ற உயிரோட்டமுள்ள தொடர்பு இல்லை!
உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு ஒரு காப்பகம் போல் தாய்த்தமிழ்நாடு விளங்க வேண்டும். இவ்வாறான தமிழர் பன்னாட்டு உறவு உருவாகிட, வளர்ந்திட தமிழர் சர்வதேசியம் தேவை.
இவ்வாறு உலகத் தமிழர்கள் அனைவரும், எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒரு சர்வதேசியத்தை _- தமிழர் சர்வதேசியத்தைக் கட்டி வளர்க்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். 2011ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்ட போது, அந்த நிகழ்வில் இதை நான் கூறினேன். மீண்டும் அதை வலியுறுத்துகிறேன். 
அப்படி, நமக்குள் ஒரு சர்வதேசியம் இருந்தால்தான், நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு _- ஒருவருக்கொருவர் உந்து விசையாகப் பணியாற்ற முடியும். இல்லையெனில், நாம் துண்டு துண்டாகத்தான் சிதறிக் கிடப்போம்.

தமிழீழத்தில் நம் இன மக்கள் இனப்படுகொலை செய்த போது, அதை உலகமே வேடிக்கைப் பார்த்தது. சர்வதேச சமூகம் வேடிக்கைப் பார்த்தது.
எனவே, இனி நமக்கு அப்படியொரு நிலை வரக்கூடாது. சர்வதேச சமூகம் நம்மை திரும்பிப் பார்ப்பதற்கு, நாமொரு சர்வதேசியமாக அதாவது,- தமிழர் சர்வதேசியமாக செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
சீனர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆதிக்க மனப் பான்மை உண்டு. அவர்கள் பழம்பெருமையில் திளைப்பவர்கள். தங்கள் பண்பாடுதான் சிறந்தது, தங்கள் மொழி தான் சிறந்தது, உலகில் சிறந்த இனம் _- தங்கள் ஹன் தேசிய இனம்தான் என்ற உளவியலை அவர்கள் எப்பொழுதும் பெற்றிருப்பார்கள்.

அப்படிப்பட்ட சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால், இந்தியாவில் தமிழுக்கு என்ன நிலை என்று எண்ணிப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. ஆதிக்க மனப்பான்மை கொண்ட சீனர்கள்கூட, தமிழ் மொழியை அங்கீகரிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஏன் இந்த நிலை இல்லை?
உலகத்தில் சீனர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் சீன நாடு அதில் தலையிட்டு, அங்கு சீனர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், உலகத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அந்தத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டுத் தமிழர்களால் தலையிட முடியவில்லை. ஏனெனில், தமிழ்நாடு இறையாண்மையுள்ள ஒரு தேசமாக இல்லை. தமிழ்நாடு ஐ.நா. மன்றத்தில் குரலெழுப்ப முடியாது. தமிழர்கள் தங்களுடைய மக்கள் வலிமையை வைத்துத் தமிழ் நாட்டில் போராடினால்தான், உலகின் கவனத்தை ஈர்க்க முடியும்.
150 கோடி மக்கள் பேசும் மொழி சீன மொழி. அந்த இனம் பெரும்பான்மையாக உள்ள சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாருமே பேசாத ஆரியர்களின் சமற்கிருத மொழியைத் தமிழ்நாட்டில் திணிக்கிறார்கள். சமற்கிருதம் படி அல்லது அதன் குட்டி மொழியான இந்தியைப் படி என்கிறார்கள். சமற்கிருதம் யாருடைய தாய்மொழி? யாருடைய பேச்சு மொழி? எல்லா துறைகளிலும் அந்த மொழியின் மேலாண்மையை நிறுவ இந்திய அரசு ஏன் துடிக்கிறது?
சீனர்கள் தமிழ் மீது அச்சப்படாமல், தமிழை ஆட்சி மொழியாக - கல்வி மொழியாகத் தொடர வாய்ப் பளித்தனர். ஆனால், இந்தியாவோ தமிழைக் கண்டு அச்சம் கொள்கிறது. தமிழை ஒடுக்கியே -_ நசுக்கியே வைத்திருக்க வேண்டுமெனக் கருதுகிறது. அதனால்தான் தஞ்சாவூரின் பள்ளிகளில்கூட, சமற்கிருதத்தைத் திணிக்க _- இந்தியைத் திணிக்க இந்திய அரசு திணிக்கிறது. ஆரியம் எப்பொழுதும் சனநாயகத்தை மதிக்காது; சனநாயகத்தை விரும்பாது. அது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவே முனையும்.

இங்கே தஞ்சையிலும் - சென்னையிலும் உள்ள பள்ளி _- கல்லூரிகளில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம் இருக்கிறது. மக்களின் அறியாமைப் பயன் படுத்தி, மக்களிடம் உள்ள அண்டிப்பிழைக்கும் கோழைத்தனத்தைப் பயன்படுத்தி, தமிழை சொந்த மண்ணிலேயே அழிக்கத் துடிக்கின்றனர். இந்த ஆதிக்க நிலையை முறியடிக்க வேண்டும்.
இந்தியாவின் ஆட்சியாளர்கள், தாங்கள் மட்டுமே வாழ வேண்டும் -_ தங்கள் மொழி மட்டுமே வாழ வேண்டும் என்று, சிறிதளவுகூட சனநாயகம் உணர்வு இல்லாத ஆரியச் சிந்தனையோடுதான் இருக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். அதனால்தான், கடைக்கோடி கிராமங்களில்கூட இந்தியைத் திணிக்கிறார்கள். இதனை நாம் ஒன்றுபட்டு எதிர் கொள்ள வேண்டும்.
திரு. செல்லப்பன் இராமநாதன் அவர்களுக்க வணக்கம் செலுத்தும் வேளையில், நம் சொந்த மண்ணில் தமிழ் மொழி உரிமை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்! திரு. எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். நிறைவில், உலகத் தமிழர் பேரமைப்பு திரு. குபேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT