உடனடிச்செய்திகள்

Friday, August 6, 2021

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! - ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!



உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை 
விடுதலை செய்ய வேண்டும்! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!


உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ள புதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநில அரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கிருக்கிறது.

“அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும் ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்பட கூறுகிறது. 

இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்து வடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம் ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம் காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாக செயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம் கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாக நீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும் மேற்கோள் காட்டுகிறார்கள்

அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்ற முருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்ச நீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமை எனத் தெளிவுப்படுத்துகிறார்கள்.

இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து புதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன் விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன் படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன் படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரே நேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபட கூறியிருக்கின்றன. 

எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாக கருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனை ஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையை ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்கு வலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுகொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT