உடனடிச்செய்திகள்

Saturday, August 13, 2016

தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வீரவணக்கம்..! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன்
அவர்களுக்கு வீரவணக்கம்..!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தமிழர் தன்மானப் பேரவை நிறுவனத் தலைவர் தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்கள் கடந்த 10.08.2016 அன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
கடந்த மாதம் தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் அங்கு சென்று தோழர் அ.கோ.க. அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம்.
சரியாகப் பேச முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஒரு சில சொற்கள் பேசினார். ஓரளவு நலம் பெற்று ஊர் திரும்பிய அ.கோ.க. மறுபடியும் உடல்நலம் குன்றி நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குதான் அவர் காலமாகியுள்ளார்.
பெரியாரியவாதியாக, மார்க்சியவாதியாகக் கீழத்தஞ்சை மாவட்டத்தில் மக்களைத் திரட்டி உரிமைப் போராட்டங்கள் பல நடத்தியவர் அ.கோ.க.
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தலைமையில் அவர் செயல்பட்ட போது, உழவுத் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகவும் களம் பல கண்ட வீரர் அவர்.
ஒரு வழக்கில் சிறைப்பட்ட போது அங்கேயும் சிறைவாசிகளுக்குக் கமுக்கமாக சங்கம் ஏற்படுத்தி, அவர்களின் போராட்டங்களை நடத்தியவர்களில் அ.கோ.க. தலைமையானவர்!
சிறந்த நுண்ணறிவு படைத்த அ.கோ.க. எந்தச் சிக்கலையும் உடனடியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். நான்கு அமைப்புகள் சேர்ந்து தமிழ்த் தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பு உருவாக்கியதில் தோழர் அ.கோ.க. அவர்களுக்குக் காத்திரமான பங்குண்டு. இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவர்.
தோழர் அ.கோ.க. அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அ.கோ.க. அவர்களின் இயக்கத் தோழர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT