உடனடிச்செய்திகள்

Monday, August 15, 2016

.“திரைப்பாடல் இலக்கியத்தில் தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

.

.“திரைப்பாடல் இலக்கியத்தில் 
தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார்”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியைத் தருகிறது. இளம் அகவையில் இலக்கிய நாட்டத்துடன் கவிஞராக அரங்குகளிலும், பின்னர் திரைப்படத் துறையில் இலக்கியத் தரமும் புதிய உத்திகளும் கொண்ட பல பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர்.
இக்காலத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் – திரைத்துறைக்கு முகாமையான பங்களிப்புச் செய்தவர். அந்த வகையில் திரைப்பாடலில் தமிழின் சமகால வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் முத்துக்குமார். அவருடைய மாணவர் பருவத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த எமது “தமிழ்க் கலை இலக்கியப் பேரவை” கூட்டங்களில் வந்து ஆர்வத்தோடு கலந்து கொண்டவர் முத்துக்குமார்.
தமிழ் மொழி உணர்வு - தமிழ் இன உணர்வு ஆகியவற்றிலும் அக்கறை கொண்டவர். சிறந்தத் திரைப்பாடலுக்காக அனைத்திந்திய அரசு விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் இலக்கிய மற்றும் சமூகவியல் துறையில், இன்னும் எவ்வளவோ சாதனைகள் படைக்க வேண்டிய நிலையில், அவர் காலமானது பேரிழப்பாகும். அதேவேளை, அவருடைய கவிதைகள் – திரைப்பாடல்கள் – கட்டுரைகள் வழியாக கவிஞர் நா. முத்துக்குமார் நிரந்தரமாகத் தமிழுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
கவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT