உடனடிச்செய்திகள்

Monday, February 22, 2016

பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!



பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்  தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஐந்தாவது கூட்டம், 2016 பிப்ரவரி 20 - 21 ஆகிய இரு நாட்கள் தர்மபுரியில் நடைபெற்றது. தர்மபுரி ரோட்டரி அரங்கில், பிப்ரவரி 20 அன்று காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்து, பொதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தர்மபுரி செயலாளர் தோழர் விசயன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கள் கோ. மாரிமுத்து, அ. ஆனந்தன், குழ. பால்ராசு, ரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் செம்பரிதி, கவித்துவன், இராசாரகுநாதன், ஈரோடு இராசையா, புளியங்குடி க. பாண்டியன், திருச்செந்தூர் தமிழ்மணி, சிதம்பரம் எல்லாளன், பெண்ணாடம் கனகசபை, மதுரை மேரி, கோவை இராசேந்திரன், குடந்தை தீந்தமிழன், தஞ்சை லெ. இராமசாமி, புதுக்குடி காமராசு, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் காலமான ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா, தமிழறிஞர் தமிழண்ணல், ஐயா. தேவாரம் மு. தனராசு, முனைவர் கரு.அழ. குணசேகரன், பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் காதாட்டிப்பட்டி கணேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் தாயார் திருவாட்டி வைரத்தம்மாள் ஆகியோர் மறைவுக்கு, கூட்டத்தின் தொடக்கத்தில் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1
============
பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது
ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் அரசியல் பிரிவான பாரதிய சனதா கட்சியும் தங்களின் அரசியலுக்கு இதுவரை முதன்மைப்படுத்தி வந்த “இந்துத்துவா” முழக்கத்தை இப்போது பின்னுக்குத் தள்ளி “இந்தியத் தேசியம்” என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்துகின்றன.

இந்துத்துவா முழக்கத்தை முன்வைத்து, உ.பி. முசாபர் நகரில் முசுலிம் குடும்பங்களைத் தாக்கி அகதிகளாக வெளியேற்றினார்கள். மராட்டியத்தில் தபோல்கர், பன்சாரே, கர்நாடகத்தில் கல்புர்கி போன்ற மதச்சார்பற்ற பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைக் கொலை செய்தனர். உ.பி. தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதாகச் சொல்லி ஒரு முசுலிம் பெரியவரைக் கொன்றார்கள். அக்குடும்பத்தினரையே தாக்கினார்கள்.

இப்படிப்பட்ட இந்துத்துவா வெறியாட்டப் படுகொலைகள் மற்றும் கலவரங்களுக்குப் பிறகு, பா.ச.க.வின் செல்வாக்கு வளர்வதற்கு மாறாக சரிந்து வருவதை தில்லி, பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விகள் மூலம் உணர்ந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை, இந்துத்துவா முழக்கத்தை சற்றுப் பின்னுக்குத் தள்ளி இந்தியத் தேசியம் - “தேசப்பற்று” என்ற முழக்கங்களை முன்னுக்கு வைத்து வருகிறது.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வைப் பயன்படுத்திக் கலகம் விளைவித்து, மாற்றுக் கருத்துகளை ஒடுக்கி, இந்தியாவில் தங்களின் ஒற்றை மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் விடுதலை கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. யார் எழுப்பினர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்காக சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீது தேசத்துரோகம் (124A) மற்றும் அரசியல் சதிக்குற்றம் (120B) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளனர். கண்ணையா குமார், தாம் இம்முழக்கங்களை எழுப்பவில்லை என்று மறுக்கிறார். தில்லி காவல்துறை ஆணையர் பாசி கூட கண்ணையா இம்முழக்கங்களை எழுப்பினார் என்பதற்குச் சான்றுகள் இல்லை என்கிறார்.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்ந்த அன்றே, ஏ.பி.வி.பி. மாணவர்கள் நடுவண் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில், பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதே சதி இருக்கிறது என்றார். கடும் நடவடிக்கைத் தேவை என்றார்.

ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்களே மேற்கண்ட முழக்கங்களை எழுப்பினர் என்று ஜே.என்.யு. மாணவர்களும் பேராசிரியர்களும் கூறுகிறார்கள்.

அடுத்து ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. கலகக்காரர்கள் நீதிமன்றத்தைக் கலவரக் களமாக மாற்றினர். வழக்கறிஞர்கள் - வழக்கறிஞர் சீருடையில் இருந்தோர் என ஒரு கும்பல், 15.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்குக் காவல்துறையினரால் கண்ணையா குமார் அழைத்து வரப்பட்டபோது அவரைத் தாக்கினர். அதனை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. மறுபடி 17.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றம் அழைத்துவரப்பட்டபோது முற்பகலில் நீதிமன்றத்திற்குள் வைத்து கண்ணையாவைத் தாக்கினர். உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்தியாவின் மிகுபுகழ் பெற்ற வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி கண்காணிக்கச் சொன்னது. அதன்பின்னர் - பிற்பகலில் பாட்டியாலா நீதிமன்றத்திற்குள் நேர் நிறுத்தப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. குற்றக் கும்பல் கண்ணையா குமாரை மீண்டும் அடித்து நொறுக்கியது.
இந்த வன்முறை வெறியாட்டம் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பேச்சாளர்கள் ஊடகங்களில் இந்தியத்தேசியம் - தேசப்பற்று என்ற சொற்களை உச்சரித்து ஞாயப்படுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் இந்த வன்முறைகளைக் கண்டிக்கவில்லை.

மேற்கண்ட நடப்புகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, நடுவண் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் இந்தியா முழுவதிலும் இந்தியத் தேசியம் - இந்துத்துவா முழக்கங்களை போதை போல் உருவாக்கிக் கிளப்பி மக்களிடையே அதனடிப்படையில் வன்முறைக் கலகங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திருப்பிக் கொள்வது என்றும் அவ்வாறு பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திரட்டிக் கொள்ள முடியவில்லை என்றால் ஓயாத கலவரங்களை நடத்தி மக்களவைத் தேர்தல் நடத்தாமல் தள்ளி வைப்பது என்றும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவர்கள் முன்வைக்கும் இந்துத்துவா - இந்து மக்களிடையே நிலவும் வர்ணாசிரம மேலாதிக்கத்தை - பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் சம உரிமை படைத்த சகோதரர்களாக மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக வர்ணாசிரம மேலாதிக்கத்தை இக்காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்வதாகும். மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமற்கிருதத்தைத் திணிப்பதிலிருந்தும் - நடுவண் அரசே சமற்கிருத வாரம் கடைபிடித்து, அதைப் பரப்புவதிலிருந்தும் அவர்களின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்துக் கோயில்கள் அனைத்திலும் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்கு மீட்டுத்தர ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அதிகார பீடங்கள் முன்வரவில்லை. முன்வரப் போவதில்லை.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லியும் பாடியும் அர்ச்சனை செய்யலாம் என்ற தமிழ் மொழி உரிமைக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் முன்முயற்சி எடுக்கப் போவதில்லை. மாறாக அவ்வாறான தமிழர் முயற்சிகளைத் தடுக்கவே அவை முன்வரும்.
ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் இப்போது முன்னுக்குத் தள்ளியுள்ள இந்தியத் தேசியம் - தேசபக்தி என்பவை சாரத்தில் அவர்களின் இந்துத்துவா முழக்கத்தின் அரசியல் வடிவங்களே! இந்துத்துவா மதவாதம் இல்லையெனில் இந்தியத்தேசியம் என்பதற்கான வேறு எந்தப் போலிக் காரணமும் இல்லை!

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியா ஒரு தேசம் - இந்தியன் என்ற தேசிய இனம் - இந்தியத் தேசியம் என்பனவற்றை ஏற்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 1 - “இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இந்தியா ஒரு தேசம் என்று எந்த இடத்திலும அது கூறவில்லை. அடுத்து, இந்தியக் குடியுரிமை பற்றி அது பேசுகிறதே தவிர, “இந்தியன்” என்ற தேசிய இனம் பற்றி பேசவில்லை! இந்தியன் என்றொரு தேசிய இனம்(Nationality) இருப்பதாக அது கூறவும் இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழிபடுவதாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறிக் கொள்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டம் கூறாத இந்தியத் தேசியத்தை ஒரு வெறி முழக்கமாக அவர் தலைமை உருவாக்குவது ஏன்?
“இந்தியத் தேசியம் - தேசபக்தி” என்பதை ஒரு போதைபோல் ஏற்றி, வெறி உண்டாக்குவோர், தமிழர் - தமிழ்மொழி, தெலுங்கர், கன்னடர், மலையாளி, மராத்தி, வங்காளி, பஞ்சாபி, காஷ்மீரி, அசாமி போன்ற பல்வேறு தேசிய இனங்களின் இருப்பையும் வரலாற்றையும் அழிக்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமையோ அல்லது வேறு எந்தத் தலைமையோ இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பக் கிளப்ப, மேலே குறிப்பிட்ட - பல்வேறு தேசிய இனங்களின் மக்கள் - தங்கள் இன மொழி அடையாளங்களையும் வரலாற்றுப் பெருமிதங்களையும் தக்க வைத்துக் கொள்ள வீதிக்கு வருவார்கள்!

இந்தியத்தேசியம் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? தமிழினப் பாதுகாப்பிற்கு என்ன செய்தது? காவிரி உரிமையைப் பாதுகாத்ததா? கடல் உரிமையை பாதுகாத்ததா? கச்சத்தீவை பாதுகாத்ததா? முல்லைப் பெரியாறு அணை உரிமைச் சிக்கலைத் தீர்த்து வைத்ததா? பாலாற்று உரிமையைப் பாதுகாத்ததா? அண்டை நாட்டில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தடுத்து நிறுத்தியதா? அந்த இனப்படுகொலையில் பங்கு கொண்டது.
கர்நாடகத்தில் கன்னட வெறியர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது - தாக்கப்பட்ட போது (1991), கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது (2011), இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியதா? பேருந்தில் பயணம் செய்த 20 தமிழர்களை இழுத்துக் கொண்டுபோய் ஆந்திராவில் கட்டிவைத்து சுட்டுக் கொன்ற போது, ஆந்திராவின் மீது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

தமிழ்நாட்டு பெட்ரோலியத்தை எரிவளியை நிலக்கரியை எடுத்து காலி செய்து, தனது கருவூலத்தை நிரப்பிக் கொள்கிறது இந்திய அரசு! வெள்ளைக்காரன் போட்ட வரிகளைவிட, ஆயிரம் மடங்கு கூடுதல் வரிகளைப் போட்டு, ஆண்டுக்கு 80,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டு வரிப்பணத்தை அள்ளிக் கொண்டு போகிறது இந்திய அரசு!

என்ன ஞாயத்திற்காக தமிழர்கள், வர்ணாசிரம இந்துத்துவா தேசியமான இந்தியத் தேசியத்தை ஏற்க வேண்டும்?

உலகில் முதலில் தோன்றிய செம்மொழியான தமிழ் நம் மொழி! முதலில் தோன்றிய நாகரிக இனம் தமிழினம்! அரப்பா - மொகஞ்சோதாரோ நாகரிகம் தமிழர் நாகரிகம்! இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழினம் இப்போது தமிழ்நாட்டிற்குள் என்று சுருங்கிப் போய் உள்ளது. தமிழ்நாட்டிற்குள்ளும் வந்து தமிழ் மொழியை - தமிழர் இன அடையாளங்களை அழித்திட, இந்துத்துவா என்ற பெயரிலும், இந்தியத் தேசியம் என்ற பெயரிலும் வரும் அதிகாரக் கருத்தியலைத் தடுத்து தமிழினம் காப்போம்.

தமிழ் மக்களிடம் இச்செய்திகளை எடுத்துச் சொல்ல, 2016 - பிப்ரவரி 25லிருந்து மார்ச் 2ஆம் நாள் வரை, ஒரு வாரம் பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் நடத்துவதென தர்மபுரியில் இன்று (21.02.2016) கூடியுள்ள இப்பொதுக்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.

தீர்மானம் - 2
============
கெயில் குழாய்களை விளை நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிடுக!

இந்திய எரிவளி ஆணையம் (கெயில்) கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு குழாய்கள் வழியாக எரிவளி (எரிவாயு) எடுத்துச் செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வேளாண் விளை நிலங்களில் குழாய் பதிக்க முனைந்துள்ளது.

இத்திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருட்டிணகிரி ஆகிய ஏழு மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஒன்றாகும். கொச்சியிலிருந்து கோவை வரை கேரளத்தில் இத்திட்டத்திற்கான கெயில் குழாய்கள் சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு, நெடுஞ்சாலை ஓரங்கள், தொடர்வண்டிப் பாதை ஓரங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்கள் வழியாக இக்குழாய்களை எடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய அரசின் கெயில் நிறுவனம் பிடிவாதம் பிடிப்பது இந்திய அரசின் தமிழினப்பகைப் போக்கையே எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்த வழக்கில், கடந்த 01.02.2016இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உழவர்களின் வாழ்வுரிமையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் அமைந்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அரசாங்க அதிகாரங்களை நடுவண் அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், பொதுப் பட்டியல் என வகைப் பிரித்து வழங்கியிருக்கிறது. இதில் விளை நிலம் தொடர்பான அதிகாரம் முழுவதும் மாநில அதிகாரப் பட்டியலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. மாநில அதிகாரப் பட்டியல் பிரிவு எண் 18இல், விளை நிலங்கள் குறித்த அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. வேளாண் நில உடைமையை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.

இந்நிலையில், கெயில் நிறுவனக் கோரிக்கையை ஏற்றும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்குப் போட்டத் தடையை நீக்கியும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார்.

இதனை ஏற்று, ஏழு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் எடுத்துச் செல்லும் திட்டத்தை கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய்களை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றி அமைக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும், ஏற்கெனவே விளை நிலங்களில் புதைக்கப்பட்டுள்ள கெயில் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு நடுவண் அரசை வலியுறுத்துகிறது.

உழவர்களின் கோரிக்கையை மதிக்காமல், கெயில் நிறுவனம் வேளாண் விளை நிலங்களில் குழாய்கள் பறிக்க முயன்றால், அதைத் தடுத்து நிறுத்த உழவர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் எச்சரிக்கிறது.

தீர்மானம் - 3
============
சனவரி 25-ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வலியுறுத்தி பரப்புரை இயக்கம் 1965ஆம் ஆண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் தமிழ்த் தேசிய எழுச்சியான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கடந்த 2016 சனவரி 24ஆம் நாள் மதுரையில், “மொழிப்போர்-50” மாநாட்டைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தியது.

எழுச்சியோடு நடைபெற்ற அம்மாநாட்டில், மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றி சனவரி 25 அன்று நடத்தப்படும் வீரவணக்க நாளை தமிழ் மொழி நாள் என அறிவித்து கடைபிடிக்குமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 தொடங்கி ஒரு வாரம் முழுவதும், தமிழ் மொழி வாரமாக தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும். ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமொழியாக தமிழ்மொழியை பயன்படுத்துவது குறித்து அவ்வாரம் முழுவதும் தொடர் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

சனவரி 25ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வேண்டும், மொழிப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், மொழிப்போர் ஈகியருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், தமிழைத் தமிழ்நாட்டின் முழு ஆட்சிமொழி ஆக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறைக்குக் குற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக வேண்டும், இந்திய ஒன்றிய அரசில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும், தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை தமிழக அரசு பள்ளிகளில் தொடங்கியதைக் கைவிட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும், போராடிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களை விளக்கி, 2016 சூன் 15லிருந்து 21ஆம் நாள் வரை, தமிழ்நாடெங்கும் பரப்புரை இயக்கங்கள் நடத்துவதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 




===================================== 






நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
===================================== 




Friday, January 29, 2016

தழல் ஈகி முத்துக்குமார்க்கு வீரவணக்கம்!




சிங்கள – இந்திய கூட்டுப் படைகளால், 2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரை எதிர்த்து, இந்திய அரசின் அலுவலகமான சென்னை சாஸ்திரி பவனில், சனவரி 29 – 2009 அன்று, கொளத்தூரைச் சேர்ந்த கு. முத்துக்குமார், தீக்குளித்து உயிரீகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும், இந்நாள் தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த ஈகியரின் வீரவணக்க நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

தழல் ஈகி முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடமான சென்னை கொளத்தூரில், ஒவ்வொரு ஆண்டும் ஈகியர் நினைவுத் தூண் ஏற்படுத்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தும் ஏற்பாட்டை, இயக்குநர் த. புகழேந்தி ஒருங்கிணைப்பில், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு செய்து வருகின்றது. இவ் ஆண்டும், ஈகியர் நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, இன்று(29.01.2016) காலை எழுச்சியுடன் நடைபெற்றது.

தழல் ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. குமரேசன், தங்கை திருமதி. தமிழரசி கருக்குவேல்ராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், ஈகியர் தூணுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், நடிகர் திரு. சத்தியராஜ், பேரறிவாளன் தாயார் திருவாட்டி. அற்புதம் அம்மையார், ஓவியர் வீரசந்தனம், பத்திரிக்கையாளர் திரு. டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்ட பலரும் வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், சென்னை த.இ.மு. செயலாளர் வெற்றித்தமிழன், பொழிச்சலூர் த.இ.மு. செயலாளர் தோழர் கவியரசன், பாவலர் முழுநிலவன், தோழர்கள் ஜீவாநந்தம், பிரபாகரன், வடிவேலன், நல்லசிவம், வினோத் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள், ஈகியர் நினைவுத் தூணுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

ஏழு தமிழர் விடுதலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கப் பதாகையில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கையெழுத்திட்டதோடு, எழுவர் விடுதலை குறித்து எழுதிய புத்தகத்தை திருவாட்டி. அற்புதம் அம்மையாரிடம் வழங்கினார்.


தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது!

தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம்! 







Monday, January 25, 2016

மொழிப் போர் 50 மாநாடு


“சனவரி 25-ஐ தமிழ்மொழி நாளாக அறிவிக்க வேண்டும்” மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் எழுச்சியுடன் நடத்திய மொழிப்போர்-50 மாநாடு!

1965ஆம் ஆண்டு மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய “மொழிப்போர்-50” மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.



ஈகச்சுடரேற்றம்

மதுரை தமுக்கம் கலையரங்கில், நேற்று (24.01.2016) காலை 9.45 மணியளவில், மதுரை தமிழர் பண்பாட்டு கலைக்குழு போர்ப்பறை அதிர பேரெழுச்சி முழக்கங்களுக்கிடையே “மொழிப்போர் 50“ - மாநாடு தொடங்கியது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளருமான தோழர் இரெ. இராசு வரவேற்றுப் பேச, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் முன்மொழிய, செந்தமிழ் அந்தனர் – முதுமுனைவர் இரா இளங்குமரனார் அவர்கள் மொழிப் போர் ஈகியர் வீரவணக்கச் சுடரை ஏற்றி வைத்தார்.

மையத்தில் சுடரை சூழ்ந்து மொழிப்போர் ஈகியர் குடும்பத்தினர், தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள் உடன் நிற்க, அவர்களை பேரியக்கத்தின் செஞ்சட்டைத் தோழர்கள் சூழ அதன்பின் பின் உணர்வாளர்கள், அணிவகுக்க செஞ்சுடர் மிளிர்ந்தது. தோழர் நா. வைகறை மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி - எழுச்சி முழக்கங்கள் எழுப்ப அதனை அனைவரும் எதிரொளித்து வீரவணக்கம் செலுத்தினர்.

ஒளிப்படக்காட்சி

இதனையடுத்து, மாநாட்டுத் திடலில் மொழிப்போர் வரலாற்றை காட்சிப்படுத்தும் அரிய ஆவணங்களுடன் அமைக்கப்பட்டிருந்த ஒளிப்படக்காட்சியை, கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களின் மனைவி திருவாட்டி கமலம் அவர்கள் திறந்து வைத்தார்.

ஐம்பது ஆண்டுகள் சென்ற பிறகும் தம்முடைய கணவர் தமிழ்ச் சான்றோர்கள், இனவுணர்வாளர்கள் முன்னிலையில் மொழிப்போர் மாநாட்டின் வாயிலாக நினைவுக் கூறப்படுவதை எண்ணி அப்பொழுது அவர் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தார். முது வயதிலும் ஓடிச்சென்று அரங்கில் இருந்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் புகைப்படத்தை பார்த்து கைகூப்பி வணங்கினார். அவரைத் தொடந்து மொழிப்போர் ஈகியரது வாரிசுகளும், குடும்பத்தினர்களும் மொழிப்போர் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட வரலாற்றை பார்ந்து நெகிழ்ச்சியுற்றனர். தொடர்ந்து அவ்விடத்தில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி இயக்கிய “மொழிப்போர்-1965” ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன் ஒளிப்பட அரங்கை நெறிப்படுத்தி, காலை முதல் மாலை வரை அங்கு வந்து பார்வையிட்ட பார்வையாளர்களிடம் கருத்துகள் பெற்றார். பலர் மொழிப்போர் ஈகியர் படங்களை தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்துச் சென்றனர்.

தொடக்க நிகழ்வு

இதனையடுத்து, மாநாட்டு அரங்கில் தமிழறிஞர் இரா.இளங்குமரனார், மாநாட்டுத் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், “பல்வேறு வகையிலும் தமிழ்மொழி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நடுவணரசாலும், பன்னாட்டு நிறுவனங்களின் வணிகப் படையெடுப்பினாலும் மொழியின் இருப்பிற்கு குந்தகம் நேர்ந்துள்ளது. இந்தியைத் திணிக்க நடுவணரசு முயற்சி மேற்கொண்ட பொழுதெல்லாம் அதைத் தடுக்கச் சமர் புரிந்தவர்கள் மாணவர்கள்தான். மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட தீவிர மொழிப்போரின் காரணமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிடக் கட்சிகள் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு பாராட்டிற்குரியதாக இல்லை. மொழி என்பது ஓரினத்தின் அடையாளம் என்பதால்தான் அண்டை மாநிலங்கள் அனைத்தும் தத்தமது மொழியின் மீது தீவிரமான பற்றும், பாசமும் கொண்டு இயங்குகின்றன. அந்த நிலை தமிழகத்திலும் தோன்ற வேண்டும்” எனத் தெரிவித்தார். ஐயா இளங்குமரனார் அவர்களுக்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.

“மொழிப்போர்“ – கருத்தரங்கு

இதனையடுத்து, பேரியக்கத்தின் மதுரை தோழர் மூ. கருப்பையா முன்னிலையில்,நடைபெற்ற “மொழிப்போர்” கருத்தரங்கில், முனைவர் ம.இலெ.தங்கப்பா, “மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்-1916” குறித்தும், முனைவர் த.செயராமன் “1938-மொழிப்போர்” குறித்தும், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ”1965ஆம் ஆண்டு மொழிப்போர்” குறித்தும் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினர்.


கண்கவர் கலை நிகழ்வு

இதனைத் தொடர்ந்து, மாநாட்டின் பிற்பகல் அரங்கின் துவக்கமாக மதுரை - தமிழர் பண்பாட்டுக் கலைக் குழுவினரின் கண்கவர் தமிழர் வீரக்கலைகள் அரங்கேறியது. முதலாவதாக அக்கலைக் குழுவினரின் பறை இசை முழங்க சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கயிறேற்றம், யோகக் கலைகளை காண்போரைக் கண்கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியினரின் சிலம்பக்கலை அரங்கேறியது. சிலம்பச்சண்டை, தீச்சிலம்பம் தமிழரின் வீரக் கலையை பறைசாற்றியது.

சூடேற்றிய “இளந்தளிர் அரங்கு”

கலை நிகழ்ச்சிகளுக்கு அடுத்து மாணவ மாணவியர் பங்கேற்ற இளந்தளிர் அரங்கம் நடைபெற்றது. அரங்கத்தை தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் குடந்தை இரா.அருள் தலைமையேற்று நடத்தினார். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நெறிப்படுத்தினார். ஓசூர் தமிழ்மாறன் ”தமிழரின் அடையாளம்” என்ற தலைப்பில் ஆற்றிய ஆற்றல் மிகு உணர்ச்சி உரை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவரைத் தொடர்ந்து, “தமிழன் எழவேண்டும்” என்ற தலைப்பில் ஓசூர் நிகரன், ”தமிழ் மொழிக்கு வீரவணக்கம்” என்ற தலைப்பில் சென்னை வெ.சரண்யா ஆகியோர் பேசினர். மழலை மு. இனியனின் மழலைப்பாடல் அரங்கேறியது. இளந்தளிர் அரங்கில் பங்கேற்ற இளந்தளிர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு செய்து வாழ்த்தினார்.

உணர்ச்சி கொள்ளச் செய்த பாவரங்கம்

அதன்பின், “இனத்தை செய்தது மொழிதான்” என்றத் தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது. பாவலர் இன்குலாப், காணொளி மூலம் பாவீச்சு நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து, பாவலர்கள் செம்பரிதி, இராசாரகுநாதன், கவிபாஸ்கர், முழுநிலவன் ஆகியோர் பாவீச்சால் அரங்கத்தை உணர்ச்சி கொள்ளச் செய்தனர். மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா நிகழ்வை நெறிப்படுத்தினார்.

“வளர்தமிழ்“ – கருத்தரங்கு

இதனையடுத்து, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை தலைமையில் “வளர்தமிழ்” அரங்கு நடைபெற்றது. தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சுப்பிரமணிய சிவா முன்னிலை வகித்தார். “கலைச் சொல்லாக்கம்” என்ற தலைப்பில் முனைவர் இராம. சுந்தரம், “கல்வித்தமிழ்” என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபா. கல்விமணி, “நாடகத்தமிழ்” என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் முனைவர் மு. இராமசாமி, “இசைத்தமிழ்” என்ற தலைப்பில் முனைவர் இராச. கலைவாணி, “இந்திய ஒன்றிய ஆட்சிமொழிகள்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஆழி. செந்தில்நாதன், “தொடர்பியல் தமிழ்” என்ற தலைப்பில் பொறியாளர் க. அருணபாரதி ஆகியோர் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து அவரவர் துறை சார்ந்த முன்னேற்றங்களையும், அதில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினர்.

பாராட்டரங்கம்

அடுத்ததாக, மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, மொழிப்போர் ஈகியர் குடும்பத்தினர் மற்றும் தமிழை வழக்கு மொழியாக்கப் போரடிய போராளிகள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுக்கு சிறப்பு செய்யும் “பாராட்டரங்கம்” நடைபெற்றது. அரங்கிற்கு, இயக்குநர் வ. கவுதமன் தலைமையேற்றார். பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

இந்தி எதிர்ப்புப் போரில் முதன் முதலில் தீக்குளித்து உயிரீகம் செய்த ஈகி கீழப்பழுவூர் சின்னச்சாமியின் மனைவி திருவாட்டி. கமலம், மகள் திராவிடச்செல்வி, விராலிமலை சண்முகத்தின் அண்ணன் திரு. மாணிக்கம் உள்ளிட்ட மொழிப்போர் ஈகியரின் குடும்பத்தினரும், மறைமலையடிகள் பெயரன் திரு. தி. தாயுமானவன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மகனார் திரு. கி.ஆ.பெ.வி. கதிரேசனார், ‘தூயதமிழ்க்காவலர்’ அண்ணல் தங்கோவின் பெயரர் திரு. செ. அருட்செல்வன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் புதல்வர் திரு. மா.பூங்குன்றன், தமிழறிஞர் சி. இலக்குவனாரின் புதல்வர் திரு. திருவள்ளுவன், இந்தி எதிர்ப்புப் போராளி - ‘சன்டே அப்ஸர்வர்’ திரு. பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரன் திரு. தியாகராசன் உள்ளிட்டோரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாகப் போராடி சிறைபட்ட வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட வழக்குரைஞர்களும் பாராட்டப்பட்டனர்.

தொழில் முனைவோர் திரு. சே.அண்ணாதுரை, பெங்களூர் திரு. த. விசயன், திருச்சி திரு. து,இரவி ஆகியோர் போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறப்புச் செய்தனர். திரு. மா.பூங்குன்றன், திரு. திருவள்ளுவன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

குறும்படப்போட்டியில் வென்றோருக்குப் பரிசு

மாநாட்டையொட்டி நடைபெற்ற குறும்படப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் பி.ஆர். சுதர்சன் (படம்: என் தமிழ்), இரண்டாம் பரிசு பெற்ற மதுரை அரசு இசைக்கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் பூ. பத்திரகாளி (படம்: அமுது), மூன்றாம் பரிசு பெற்ற திருச்சி இளைஞர் விவேக் நிவநேசா (படம்: மொழியின் முகங்கள்) ஆகியோருக்கு பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கவுதமன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

மேலும், சென்னை ஊரப்பாக்கம் உமா கார்க்கி (படம்: திவாகரின் கனவுகள்), விழுப்புரம் அருண் காமராஜ் (படம்: தமிழ் மக்கள் அடையாளம்), திருவாடூர் பள்ளி மாணவர் குறள்மகன் (படம்: திருக்குறள்), மதுரை அருளானந்தர் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவி எஸ். சோனியா (படம்: நிலவில் தோன்றிய இருள்), மாணவி எஸ். சுகன்யா (படம்: உதிரும் மொட்டுகள்), திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரி மாணவர் தமிழ்பாரதன் (படம்: மொழியின் முகங்கள்) ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆன்மிகம் வளர்த்த தமிழ்

இதனைத் தொடர்ந்து, மாநாட்டின் நான்காம் அமர்வாக “ஆன்மிகம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் ஆன்மிகப் பெரியோர் உரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இவ் அரங்கில், “சைவநெறி வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் ‘செந்தமிழ் வேள்விச் சதுரர்’ திரு. மு.பெ. சத்தியவேல் முருகனார், “கிறித்துவம் வளர்த்தத் தமிழ்” என்ற தலைப்பில் அருட்தந்தை அமுதன் அடிகள், “இஸ்லாம் வளர்த்தத் தமிழ்” என்ற தலைப்பில் முனைவர் மு. அப்துல் சமது ஆகியோர் அவரவர் சமயநெறி சார்ந்து தமிழ் மொழி வளர்ச்சி குறித்து சிறப்புரை நிகழ்த்தினர்.

மாநாட்டில், சனவரி 25 – தமிழ் மொழி நாளாகத் தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும், மொழிப்போர் வரலாறு, பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஈகியருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தித் தர வேண்டும், தமிழைத் தமிழ்நாட்டின் முழு ஆட்சிமொழி ஆக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறைக்குக் குற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக வேண்டும், இந்திய ஒன்றிய அரசில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும், தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை தமிழக அரசு பள்ளிகளில் தொடங்கியதைக் கைவிட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும், போராடிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் ஆகிய உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மூ.த. கவித்துவன், ம. இலட்சுமி, இரா. இளங்குமரன், மதுரை தோழர் கதிர்நிலவன் ஆகியோர் முன்மொழிய தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க. முருகன், க. விடுதலைச்சுடர், ப. சிவ வடிவேல், மு. தமிழ்மணி, க. பாண்டியன், இலெ. இராமசாமி, வெ. இளங்கோவன், விளவை இராசேந்திரன், ச. பிந்துசாரன், க. விசயன் ஆகியோர் வழிமொழிந்தனர்.

நிறைவாக நடைபெற்ற மாநாட்டின் நிறைவரங்கிற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் பே. மேரி முன்னிலை வகித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாநாட்டு நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில், “தாய்மொழிக்காக பல நூறு உயிர்களை ஈந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனங்கள் உலகில் வேறெங்கும் இல்லை. 1965ஆம் ஆண்டு மொழிப்போரில், பொள்ளாச்சியில் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவுச் சின்னம் இல்லை. தற்போது தமிழ்நாடெங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நினைவிடங்கள், மொழிப் போர் ஈகியரின் நண்பர்கள், குடும்பத்தினர் எழுப்பியவை. அவை அரசு எழுப்பியவை அல்ல என்பது வேதனை தரும் உண்மை.

அயல்மொழிகளான இந்தியும் சமற்கிருதமும் பல்வேறு வகையில் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மொழிக்காக உயிரீகம் செய்த முன்னோடிகளின் வரலாற்றை நம் இதயத்தில் ஏந்துவது இன்றைய இளைஞர்களின் கடமையாகும். எனவே, மொழிப்போர் குறித்த வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கர்நாடகத்தில் கன்னட மொழியைக் காப்பதற்கென்று கன்னட அதிகாரம் என்ற அமைப்பு செயல்படுவதைப் போன்று, தமிழ்நாட்டிலும் அதிகாரம் மிக்க தமிழ் வளர்ச்சி ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அனைத்து மட்டத்திலும் தமிழே ஆட்சி, அலுவல், கல்வி, வழிபாடு, பண்பாட்டு மொழியாகத் திகழ்வதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25ஆம் நாளை மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் என நாம் கடைபிடித்து வருகிறோம். இந்நாளை, இனி நாம் “தமிழ் மொழி நாள்“ என்று அறிவித்து கடைபிடிக்க வேண்டும். இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டத்தின் வரலாற்றை வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்வதோடு, தமிழின் பெருமையை உணர்ந்து கொள்ளும் வகையில் இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசே எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மாநாட்டின் நிறைவில் மதுரை தோழர் சிவா நன்றியுரையாற்றினார்.

மாநாட்டு நிகழ்வுகள் கண்ணோட்டம்.காம், அகரமுதல.இன் உள்ளிட்ட இணையதளங்களில் நேரலையில் ஒளிபரப்பாகின. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் பா. ஸ்டாலின், குடந்தை செழியன், பொன். மணிகண்டன் உள்ளிட்ட பேரியக்க இணையக்குழுவினர் இணைய ஒளிபரப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

நிகழ்வில், தமிழ்நாடெங்கிலுமிருந்து பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் வாகனங்கள் எடுத்து வந்து ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.



Friday, January 8, 2016

முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!


முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!
 
தஞ்சை மாவட்ட நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு! 
 

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தும், கேரளா சென்ற தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தாக்கியும் அடாவடித்தனம் புரிந்த கேரளாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “மலையாளிகளே வெளியேறுங்கள்’’ என 2011ஆம் ஆண்டு திசம்பர் 7ஆம் நாள், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) எழுச்சியுடன் நடத்தியது.

சென்னை, குடந்தை, ஒசூர், கோவை ஆகிய இடங்களில் மலையாள ஆலுக்காஸ் உள்ளிட்ட மலையாள நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டு, பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சையில் மலையாளக் கடைகளை முற்றுகையிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, தோழர்கள் ஆ. அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய தோழர்கள், திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் பிணையில் விடுதலையாகி, தஞ்சை மாவட்ட - கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணையில் பங்கேற்றனர். இன்று காலை வழங்கப்பட்டத் தீர்ப்பில், தோழர்கள் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கில் விடுதலையான தோழர்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று வாழ்த்தினார். தோழர்களுக்காக வழக்கில் நேர்நின்று வாதாடிய வழக்கறிஞர் மு. கரிகாலன், சிவராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Thursday, January 7, 2016

மதுரையில் மொழிப் போர் - 50 மாநாடு

மேலும்..

Monday, January 4, 2016

தமிழ்நாடு அரசே! 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


தமிழ்நாடு அரசே! 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


செய்தியாளர் சந்திப்பில் - தமிழர் எழுவர் கூட்டியக்கம் - கோரிக்கை முன்வைப்பு!


இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் கொல்லப்படக் காரணமாக விளங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் - சாந்தன் - முருகன் - நளினி - இராபர்ட் பயஸ் - இரவிச்சந்திரன் - ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களையும், சனவரி 17 அன்று தொடங்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு, இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161-இன்படி தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டுமென “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” கோரிக்கை வைத்துள்ளது.

அண்மையில் கடந்த 02.12.2015 அன்று வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு விதி 161ன் படி மாநில அரசு விடுதலை செய்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெளிவுபடுத்து விட்டது என்பதையும் கூட்டியக்கம் எடுத்துக் கூறியது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” சார்பில், இன்று (04.01.2015) காலை, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வை, திரு. வேல்முருகன் ஒருங்கிணைத்தார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் தோழர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. வியனரசு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு, இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசே!

24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக!


இதே போல் நீண்ட நாள் சிறையில் வாழும் சிறையாளிகளையும் விடுதலை செய்க!

Wednesday, December 30, 2015

தமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்! - தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

தமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில் அவரது இல்லத்தில் காலமான செய்தி வேதனைக்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது ஒரு துன்பச் செய்தி.

மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற தமிழண்ணல் அவர்கள், பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் ஆய்வில் ஏராளமான நூல்கள் எழுதியவர். தொல்காப்பியம் குறித்த அவரது ஆய்வுரை சிறப்புமிக்கது.

ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ்மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ஆராய்ச்சி என்ற பெயரில் ஓர் அவதூறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதற்குத் தக்க சான்றுகளுடன் ஒவ்வொன்றையும் மறுத்து ஆழமான ஆய்வு நூலை அய்யா தமிழண்ணல் அவர்கள் எழுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

பல்வேறு தமிழ் அமைப்புகளின் - தமிழ்த் தேசிய இயக்கங்களின் – தமிழறிஞர்களின் பொது அமைப்பாக விளங்கிய தமிழ்ச் சான்றோர் பேரவை, தமிழ்வழிக் கல்வியை சட்டமாக்கிட வலியுறுத்தி சாகும் வரையில் நூறு தமிழறிஞர்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் சென்னையில் உண்ணாப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த போது, ஓர் இக்கட்டான நிலையில் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க மன உறுதியோடு தமிழண்ணல் முன்வந்தார்; தலைமை தாங்கினார்.

ஒரு தமிழறிஞராய் - தமிழ் மொழிக்கு எதிரான கருத்துகளை முறியடிக்கும் ஆராய்ச்சிப் போராளியாய் – ஆட்சித்துறையிலும் கல்வித்துறையிலும் தமிழை அரங்கேற்றுவதற்கானக் களப் போராளியாய் செயல்பட்ட தமிழண்ணல் அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை (31.12.2015) பிற்பகல் 3 மணிக்கு, மதுரையில் தமிழண்ணல் ஐயா அவர்களது இல்லத்தில் நடைபெறும் அவரது இறுதி வணக்க நிகழ்ச்சியிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் கலந்து கொள்கிறேன் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Monday, December 7, 2015

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

நமது தலைமுறையும் இதற்கு முந்தியத் தலைமுறையும் கண்டிராத பெருமழையாலும், வெள்ளத்தாலும், சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் கடலூர் மாவட்டமும் தாக்கப்பட்டு பேரழிவைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இந்த உண்மையை இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளும் உணர வேண்டும்; மக்களாகிய நாமும் உணர வேண்டும். அனைவரும் சேர்ந்து இந்தப் பேரழிவுகளை எதிர் கொண்டு மீள வேண்டும். இன்னும் தொடர்மழையும் வெள்ளப் பெருக்கும் விட்டபாடில்லை. வானிலை எச்சரிக்கைகள் அவ்வாறு இருக்கின்றன.

வழக்கமான வெள்ளச் சேதமல்ல இப்பொழுது ஏற்பட்டிருப்பது! இந்தப் பேரழிவில் துயர் துடைப்பு நடவடிக்கைகளில் மக்கள் அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், கட்சிகள், தனி நபர்கள் ஆகியோரின் சமூக நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமெடுப்பில் நடந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் களத்தில் இறங்கிச் செயல்படுகின்றன.

தனித்தனியே, உதிரி உதிரியாகப் பிரம்மாண்டமான அளவில் துயர் நீக்கப் பணிகள் நடந்தாலும் அவற்றிடையே ஒருங்கிணைப்பு மிக மிகத் தேவை. தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒருங்கிணைப்புக் குறைவின் காரணமாக பல இடங்களில் உதவிகள் கிடைக்காமல் இன்னும் துடிக்கின்றனர்.

வெள்ளந்தாக்கி ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் வகை வகையாகப் பல தன்மை கொண்டவை. மழை நின்ற பின் சில நாட்களில் முடிந்துவிடக் கூடிய வேலைகள் அல்ல அவை. பெருங்குளிர் மற்றும் சுகாதாரக் கேடுகளால் புதிய புதியத் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தேவை.

மேற்கண்ட துயர்நீக்கப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வகைப் பிரித்து செயல்படுத்தவும் கண்காணிக்கவும் அடுக்குமுறையில் கட்டமைப்புகள் தேவை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிகள் மற்றும் தன்னார்வு நிறுவனங்கள், ஊடகத் துறையினர், தகுதிமிக்கத் தனிநபர்கள் கொண்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி, மேலிருந்து கீழ்வரை மேற்கண்ட பிரிவினர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட மக்கள் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவும் அந்தந்த மட்டத்தில் ஓர் அதிகாரியின் தலைமையில் இயங்க வேண்டும்.

இத்திசையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அரசின் உடனடிக் கடமைகள்

இந்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவுகளை அனைத்திந்தியப் பெரும் பேரிடராக ஏற்று அதற்குரிய நிதி உதவி மற்றும் துயர் நீக்க உதவிகளை வழங்க வேண்டும்.

பேரழிவில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் மீது குறைகள் காண நாம் விரும்பவில்லை. ஆனால் சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டிய அவசர அவசியம் உள்ளது.

இந்திய அரசு முதல் கட்டமாக அறிவித்த ரூ 940 கோடி நிதி உதவியில் தமிழ்நாடு அரசு 
தரவேண்டிய பழைய நிலுவைத் தொகைகளைப் பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. அது உண்மையானால் – அது மனித நேயமற்ற செயல்.

2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் கங்கை ஆற்றுக் கரையோரமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு 8346 கோடி ரூபாய் அளித்தது இந்திய அரசு. அதைவிடப் பன்மடங்கு கூடுதலாகப் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவிற்கு, இதுவரை 1940 கோடி ரூபாய் தான் அறிவித்துள்ளது. குறைந்தது இருபதாயிரம் கோடி ரூபாயாவது தேவைப்படும் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொண்டு தொகையை உடன் அனுப்ப வேண்டும்.

நிலக்கரிக் கழகம், பி.எச்.இ.எல். போன்ற இந்திய அரசின் ஒன்பது (நவரத்னா) நிறுவனங்கள் உத்திர காண்ட் பேரழிவுக்கு நிதி உதவி செய்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே 125 கோடி ரூபாய் நிதி அளித்தது. அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டு பேரழிவிற்கும் நிதி அளிக்க வேண்டும்.

தலைமுறை காணாத இந்த வெள்ளப் பேரழவில் துயர் நீக்கப் பணிகளில் எளிய இயக்கமாகிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் அனைவருக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Thursday, December 3, 2015

ஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே! - கி. வெங்கட்ராமன் கண்டனம்!


ஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட இராசீவ் காந்தி வழக்கு சிறையாளிகளுக்கு தமிழ்நாடு அரசு, விடுதலை வழங்கியது தொடர்பான வழக்கில், இன்று (திசம்பர் 2) தீர்ப்பு வழங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், அரசமைப்புச் சட்டத்தையும் இந்தியக் கூட்டாட்சி முறைமையையும் ஒரே அடியில் கவிழ்த்துவிட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிளோர் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், பெரும்பான்மை அடிப்படையில் அளித்துள்ள தீர்ப்பு, தண்டனைக்குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு எனக் கூறியிருப்பது, நீதிமன்றமே செய்யும் அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இங்கு அரசு என்று சொல்லப்பட்டிருப்பது, மாநிலத்தை அல்லது மாகாணத்தை(Province) குறிப்பது அல்ல.

இந்தியாவின் ஒட்டுமொத்த இறையாண்மை, இரண்டு தளங்களில் பகிரப்பட்டு அந்தந்த தளங்களில் அந்தந்த அரசு உறுப்புகள் செயல்படுகின்றன.

இதில், தண்டனைக்குறைப்பு அதிகாரம், மன்னிப்பு அதிகாரம் ஆகியவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 72-இன்படி இந்திய ஒன்றிய அரசுக்கும், உறுப்பு 161-இன்படி மாநில அரசுக்கும் உள்ளது.

மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில், நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 72 மற்றும் 161 ஆகியவை சம அதிகாரம் கொண்டவை, ஒரே நேரத்தில் இணையாக செயல்படக் கூடியவை என்று தெளிவுபடுத்திவிட்டது.

அதாவது, மாநில அரசின் மன்னிப்பு அதிகாரமும் இந்திய ஒன்றிய அரசின் மன்னிப்பு அதிகாரமும் இணையானவை என்றும் சம அதிகாரம் உடையவை என்றும் ஒரே சமயத்தில் செயல்படக் கூடியவை என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, திரிவேணி பென் வழக்கிலும் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏனெனில், உயிர் வாழும் உரிமை குறித்த மிக அடிப்படையான மனித உரிமையில் கூட்டாட்சி முறைமை தங்கு தடையின்றி செயல்பட வேண்டும் என்பதே, அரசமைப்புச் சட்டத்தின் சாரமான நிலைப்பாடாகும்.

இந்த நிலையில், தண்டனைக் குறைப்பு மற்றும் மன்னிப்பு அதிகாரத்தில், விதி 161-இன்படி உள்ள அதிகாரத்தையும் சேர்த்து, இத்தீர்ப்பு இரத்து செய்து கூட்டாட்சி முறைமைக்கே வேட்டு வைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

குற்றவியல் சட்ட விதி 435(1), இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு ஒரு வழக்கை விசாரித்திருந்தால், அது தொடர்பான தண்டனைக் குறைப்பு முடிவெடுப்பதற்கு முன் மாநில அரசு ஒன்றிய அரசுடன் “கலந்தாலோனை”(Consultation) செய்ய வேண்டுமெனக் கூறுகிறது.

இந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டப்படி, தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளில் ஒன்றிய அரசின், “ஒப்புதல்”(Consent or Concurrence) பெற வேண்டும் என்று விதி 435(2) கூறுகிறது.

குற்றவியல் சட்ட விதி 435(1)இல், “கலந்தாலோசனை” (Consultation) என்பதும் 435(2)இல் “ஒப்புதல்” (Consent or Concurrence) என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, வெவ்வேறு நிலைகளுக்குப் பொருந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம், இராசீவ் காந்தி கொலை வழக்கில், தமிழ்நாடு அரசு “கலந்தாலோசனை” (Consultation) செய்ய வேண்மெனக் கூறப்படுவது ஒப்புதல் (Concurrence) பெறுவது தான் என விளக்கம் அளிப்பது சட்ட வளைப்பாக இருக்கிறது.

435(1)இன்படி, கலந்தாலோசனை(Consultation) என்றாலும் ஒப்புதல்தான் (Consent or Concurrence); 435(2)இன்படி, ஒப்புதல் (Consent or Concurrence) என்றாலும் ஒப்புதல்தான் என விளக்கம் அளிப்பது, வினோதமான வேதனையாக இருக்கிறது.

அதேபோல், இத்தீர்ப்பு வாழ்நாள் தண்டனை என்றால் அச்சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதைத்தான் குறிக்கும் எனக் கூறுவது, குற்றவியல் சட்ட விதி 433(A) -வை தூக்கியெறிவதாக இருக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்படடு, அது கருணை மனுவின் வழியாக வாழ்நாள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களுக்கு 14 ஆண்டுகள் கழித்தபிறகு, அரசமைப்பு உறுப்பு 161-இன்படி அல்லது, குற்றவியல் சட்ட விதி 435(2)இன்படி, மேலும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் ஒரே அடியாக குப்பைக் கூடையில் வீசி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அரைகுறையாவாவது நிலவும் கூட்டாட்சி முறைமையையும் குலைப்பதாக உள்ளது.

அந்தவகையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த ஆயத்தின் தீர்ப்பு இதற்கு முன் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற முழு ஆயம் கேசவானந்த பாரதி வழக்கில் அளித்தத் தீர்ப்புக்கு முரணாக, அதாவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட முழு ஆயம் வழியாக விசாரிப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதுவரை இராசீவ் காந்தி வழக்கில் சிறையிலுள்ள வாழ்நாள் சிறையாளிகள் 7 பேரையும் நீண்டகால விடுப்பில் (Parole) இடைக்கால விடுதலை வழங்க வேண்டும் என்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT