உடனடிச்செய்திகள்

Friday, September 14, 2018

"கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது" - ஆரியத்துவாவாதிகள் அச்சுறுத்துல்! தோழர் பெ. மணியரசன்.

"கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது" - ஆரியத்துவாவாதிகள் அச்சுறுத்துல்! தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டு இசை விழாக்களில் தெலுங்குக் கீர்த்தனமா - தமிழிசை பாடக் கூடாதா என்று தமிழுணர்வாளர்கள் கேட்டால், பிராமண இரசிகர்களும் சபாக்காரர்களும் இசைக்கு மொழி ஏது? அதில் போய் மொழி வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கில் பாட வேண்டும், தமிழில் பாடக் கூடாது என்ற மொழி இன வேறுபாட்டுக் கொள்கையாளர்கள் என்பது நாடறிந்த செய்தி!
 
இசைக்கு மொழி இல்லை என்ற அவர்களில் ஒரு சாரார் இசைக்கு மதம் உண்டு என்று கச்சைகட்டிக் கிளம்பியுள்ளார்கள்.
 
கடந்த 25.08.2018 அன்று சென்னை சேத்துப்பட்டில் “இயேசுவின் சங்கம சங்கீதம்” என்ற தலைப்பில் கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ். அருண் பாடுவதாக ஏற்பாடாகி இருந்தது. அது பற்றிய விளம்பரம் முகநூல் போன்ற வற்றில் வெளியானது. உடனே, இந்து இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டு செயல்படும் ஆரிய ஆதிக்க - சமற்கிருத விசுவாசிகளின் அமைப்புகள் கலகக்குரல் எழுப்பின.
 
இந்து மதத்தில் இறைவனை வணங்குவதற்கு எழுதப் பட்ட கர்நாடக இசைப் பாடல்களைக் கிறித்துவ விழாவில் பாடுவது தியாகராசருக்குச் செய்யும் துரோகம் என்று கண்டனம் முழங்கினர். வெளி நாடுகளில் இருந்தும் ஆரியத்துவா ஆதரவாளர்கள் பாடகர் அருணுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தரக்குறைவாகத் திட்டியுள்ளனர்.
 
மனப்பாதிப்பு ஏற்பட்டு, “நான் அந்நிகழ்ச்சிக்குப் போகவில்லை” என்கிறார் ஓ.எஸ். அருண். (குமுதம் ரிப்போர்ட்டர், 24.08.2018).
 
ஓ.எஸ். அருண் கூறுவது போலவே பிரபல பாடகி நித்திய ஸ்ரீ மகாதேவனும் - இசை அனைவர்க்கும் பொது வானது, எந்த மதக் கடவுளையும் இசையில் பாடலாம் என்கிறார்.
 
கர்நாடக இசையில் மட்டுமின்றி இசைத் துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் டி.எம். கிருஷ்ணா வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
 
“கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்கள் மீதான திட்டுகளையும் மிரட்டல்களையும் பார்த்து நான் முடிவெடுத்திருக்கிறேன்.
 
“இனி ஒவ்வொரு மாதமும் அல்லாவைப் பற்றியோ ஏசுவைப் பற்றியோ ஒரு பாடல் பாடப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
 
டி.எம். கிருஷ்ணாவுக்கு நம் பாராட்டுகள்! பிராமண வகுப்பில் பிறந்து, கர்நாடக இசையில் ஆட்சி செய்யும் அக்ரகார வர்ணாசிரமப் பார்வையை உதறி எறிந்துவிட்டு, தலித் மக்கள் தெருக்களில் போய் பாடியவர் டி.எம். கிருஷ்ணா. இசைத்துறையில் சமத்துவக் குரல் கொடுத்து வருகிறார். கானாப் பாடல்களும் இசையே என்கிறார்.
 
“இந்துக் கடவுள்களுக்காக இயற்றப்பட்ட சங்கீதக் கீர்த்தனங்களைத் திருடிப் பாடுவதைத் தான் எதிர்க்கிறோம்” என்கிறார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பால கவுதமன். (மேற்படி ரிப்போர்ட்டர் இதழ்).
 
இதில் திருட்டு எங்கிருந்து வந்தது? உலகம் முழுக்க ஏழு சுரங்களுக்குள் மாற்றி மாற்றி அவரவர் இரசனைக் கேற்ப மெட்டமைத்துக் கொள்கிறார்கள். தியாகராச கீர்த்தனையில் கூறப்பட்ட இராமர் பற்றிய வர்ணனையை - அதாவது சாகித்தியத்தை அப்படியே நகலெடுத்து இயேசுவுக்குப் பொருத்திப் பாடினால் அது “காப்பி” அல்லது அவர்கள் “மொழியில்” திருட்டு!
 
கர்நாடக இசை என்றாலே இந்துமத இசை என்று புதுக்கரடி விடுகிறார்கள் இவர்கள்!
 
கர்நாடக இசையில் ஏசுவையும், அல்லாவையும் பாடுவதைத் தடுக்க இவர்கள் யார்? ஆரியர்கள் ஆப்கானிஸ்தானம் வழியாக - கைபர் போலன் கணவாய் களைக் கடந்து இந்தியத் துணைக் கண்டத்துள் நுழையும் போது கொண்டு வந்ததா கர்நாடக இசை! கர்நாடக இசை என்பது தமிழிசை!
 
தமிழிசைக்கு முதல் முதலாக அறிவார்ந்த இலக்கண நூல் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதர் என்ற தமிழர்! மதத்தால் இவர் கிறித்துவர்! கர்நாடக இசையில் தமிழில் பாடுவதற்கென்று சமரசக் கீர்த்தனைகள் 19ஆம் நூற்றாண்டில் எழுதியவர். கிறித்தவரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை! இப்பொழுது கர்நாடக இசையில் ஆழமான ஆய்வுகள் வழங்கி வருபவர் ஐயா மம்மது அவர்கள்!
 
இசை வேந்தர் சின்ன மௌலானா சாகிப் அவர்கள் நாதஸ்வரத்தில் கர்நாடக இசை மழை பொழிந்தவர். இவர் இசுலாமியர்! கிறித்தவரான ஏசுதாஸ் இந்துக் கடவுள்களைப் போற்றிப்பாடலாம்; ஆனால் பிராமண இசைக் கலைஞர்கள் ஏசுவைப் பற்றியும் அல்லாவைப் பற்றியும் பாடக் கூடாது என்பதுதான் அவர்கள் விதிக்கும் விதி!
 
வர்ணாசிரம ஆதிக்கம் இந்துப் போர்வையைப் போத்திக் கொண்டு வருகிறது. முக்காட்டை நீக்கிப் பார்த்தால் உள்ளே தெரிவது ஆரியப் பிராமண முகம்! வர்ணாசிரமப் பாகுபாட்டு முகம்! அதற்கு இந்நிகழ்ச்சியும் ஒரு சான்று!
 
பா.ச.க. ஆட்சி வந்தபின் ஆரியத்துவா அட்டூழியங்கள் பெருகி விட்டன.
 
வடநாட்டில் நடப்பதுபோல் தமிழ்நாட்டிலும் தமிழர்களிடையே இந்துமத வெறியைக் கிளப்பி, கலகங்கள் செய்ய ஆரியத்துவாவாதிகள் தூண்டுகின்றனர். இந்து மதத்தில் உள்ள தமிழர்களே ஆரியத்துவா சதிக்குப் பலியாகி விடாதீர்கள்.
 
இந்த ஆரிய பிராமண ஆதிக்கவாதிகள் தாம் நம் சைவ, வைணக் கோயில்களிலும் திருமூலர் பாடல்கள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற ஆன்மிகப் பாடல்களைப் பாட விடாமல் தடுத்தவர்கள். தமிழ் வழிபாட்டு முறையை (அர்ச் சனையை) நீக்கி சமற்கிருத வழிபாட்டு முறையை கொண்டு வந்தவர்கள்! சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் பாடத் தீட்சிதர்கள் போட்ட தடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் நீக்கப்பட்டது.
 
“கணையாழி” - 2018 செப்டம்பர் இதழில் கடைசிப் பக்கம் பகுதியில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மேற்படி இந்துத்துவா வெறியர்களின் மிரட்டல்களைக் கண்டித்ததுடன் டி.எம். கிருஷ்ணாவுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்திரா பார்த்த சாரதி அவர்களுக்கு நம் பாராட்டுகள்!
 
இந்து மதத்தில் உள்ள தமிழர்களே ஆரியப் பிராமணியத்தின் முகமூடியான இந்துத்துவா ஒப்பனையில் ஏமாந்து போகாதீர்கள்! ஆரியத்துவாவைச் சுமந்து வரும் அரசியல் குதிரை இந்தியத்தேசியம் என்பதை இனங் காணுங்கள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, September 13, 2018

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
நீண்டகாலக் காத்திருப்புக்குப்பிறகு தமிழ்நாடு அமைச்சரவை, இராசீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தீர்மானித்து, அதனைப் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் அதனை இன்று (13.09.2018) இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.
 
உறுப்பு 161-இன்படி முன் விடுதலை குறித்து மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் தகவலாகவோ, கருத்துக் கேட்டோ அனுப்புவது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்!
 
உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது; எந்த நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது! உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு என்பது ஆளுநரின் ஆணையாக வெளியிடப்படுகிறதே அன்றி, இதில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு அதிகாரம் (Personal Discretion) எதுவும் இல்லை! ஆளுநர் 163 (1)-இன்படி அமைச்சரவை முடிவை செயல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பு மட்டுமே கொண்டவர் ஆவார்.
 
தண்டனைக் குறைப்பு தொடர்பான மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை சாம்ஷேர்சிங் - எதிர் - பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் (1974 AIR 2192) நீதிபதி ஏ.என். ரே தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் தெளிவுபட கூறியிருக்கிறது.
 
இதன்பிறகு, மாரூராம் வழக்கில் (1981) நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் இன்னும் விரிவாகவும் - தெளிவாகவும் கூறிவிட்டது.
 
“ஒரு மாநில ஆளுநர் விரும்புகிறாரோ இல்லையோ உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரைக்கு அவர் கட்டுப்பட்டவர் ஆவார். முன் விடுதலை அளிப்பதில் ஆளுநர் சுயேச்சையான எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆளுநர் என்பவர் உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவம் ஆகும்” என்று உறுதிபடக் கூறியிருக்கிறது.
 
இதை அடியொற்றி நளினி - எதிர் - தமிழ்நாடு ஆளுநர் என்ற வழக்கில் (25.11.1999), சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவையின் முடிவின்படியே ஆளுநர் செயல்பட்டாக வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது.
 
நளினி மற்றும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தங்களுக்கு மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கி விடுதலை அளிக்க வேண்டும் எனக் கோரி அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா பீவிக்கு மனு அனுப்பியிருந்தனர். மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் காத்திராமல், ஆளுநர் பாத்திமா பீவி, நளினி உள்ளிட்ட நால்வரின் மனுவை தன்னிச்சையாக நிராகரித்தார்.
 
அதனை எதிர்த்து நளினி மற்றும் மூவர் தொடுத்த மேற்கண்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவை பரிந்துரைப்படிதான் ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும் எனத் தீர்ப்புரைத்தது.
 
எனவே, உறுப்பு 161-இன்படியான தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை எந்தவித குறுக்கீட்டுக்கும் இடம் தராமல் செயல்படுத்த வேண்டும் என்பதே சட்டநெறியாகும்!
 
ஆளுநர் புரோகித் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து அறிக்கை அனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டத்தை ஆளுநரே கவிழ்க்க முயல்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
ஒருபுறம் தமிழ்நாட்டுக்கு வந்து சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் இராசீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை மன்னித்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இப்போது காங்கிரசுக் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுரஜ்வாலா வழியாக ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக அறிக்கை கொடுப்பது காங்கிரசுக் கட்சியின் தமிழினப் பகைப் போக்கையும், நயவஞ்சக இரட்டை வேடத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
 
வழக்கம் போல் பா.ச.க. சுப்பிரமணியசாமி போன்றவர்கள் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக நஞ்சு கக்கி வருகிறார்கள். இப்போது ஆளுநர் இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவது, வடநாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படுகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஆணையாக வெளியிட வேண்டும் என்பதில் உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். சட்டநெறிப்படியும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்திற்கு மதிப்பளித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
 
தமிழின உணர்வாளர்கள் விழிப்போடு இருந்து, ஏழு தமிழர் விடுதலையில் உறுதியாக செயலாற்ற வேண்டும்!
 
#7தமிழர்விடுதலை
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, September 11, 2018

ஏழு தமிழர் விடுதலையில் காங்கிரசின் நயவஞ்சக இரட்டை வேடம்! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

ஏழு தமிழர் விடுதலையில் காங்கிரசின் நயவஞ்சக இரட்டை வேடம்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமை நஞ்சு கக்கியிருக்கிறது. காங்கிரசுக் கட்சியின் அனைந்திந்தியத் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்திப் சுரேஜ்வாலா நேற்று தில்லியில் வெளியிட்ட அறிக்கை, இன்று (11.09.2018) அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது.
 
“பா.ச.க.வின் கூட்டாளிக் கட்சியான அ.இ.அ.தி.மு.க. அரசும், பா.ச.க. அரசு அமர்த்திய தமிழ்நாடு ஆளுநரும் சேர்ந்து கொண்டு முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு விடுதலை வழங்கப் போகிறார்களா? பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதி -களுக்கும் பா.ச.க. அரசு துணை போகிறதா?” என்று கேள்வி எழுப்பி, ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.
 
இராசீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களும், காங்கிரசுக் கட்சித் தலைவர்களுமான சோனியா காந்தியும், இராகுல் காந்தியும், இராகுல் காந்தி தமக்கை பிரியங்கா காந்தியும், “இவர்களை மன்னித்துவிட்டோம்” என்று கூறியிருப்பது குறித்து, செய்தியாளர்கள் கேட்டபோது, “அது அவர்களது தனிக் கருத்து. பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஒதுக்கி வைக்கும் கடமையிலிருந்து அரசு தவறிவிடக் கூடாது என்பதே காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாடு!” என்று சுரேஜ்வாலா கூறினார்.
 
காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தியின் கருத்துக்கு மாறாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர், ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக இவ்வாறு கூறியிருக்க வாய்ப்பே இல்லை!
 
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக நமது ஏழு தமிழர்களை மன்னித்து விட்டதாகக் கூறிவிட்டு, மறுபுறம் நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு பல கொடிய தடைகளைத் தாண்டி ஏழு தமிழர் விடுதலைக்கான சட்ட வழிப்பட்ட செயல்முறை - அதன் நிறைவு நிலையை அடைந்திருக்கும் சூழலில், அவ்விடுதலையைத் தட்டிப் பறிக்கும் இனப்பகை நோக்கோடு காங்கிரசுக் கட்சி இவ்வாறு கூறுவது நயவஞ்சக இரட்டை வேட நாடகமாகும்!
 
காங்கிரசுக் கட்சி தனது தமிழினப் பகை நிலையிலிருந்து ஒருபோதும் மாறாது என்பதையே இது உறுதி செய்கிறது!
 
வழக்கம்போல் பா.ச.க.வின் சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்ற தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து, காய் நகர்த்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில், தமிழினத்தின் ஒட்டுமொத்த உணர்வுக்கு எதிரான தமிழினப் பகை அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், தமிழ்நாடு அமைச்சரவைப் பரிந்துரையை எந்தத் தாமதமும் இன்றி ஏற்றுக் கொண்டு – தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
 
சட்ட நெறிப்படியும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தக் கருத்துக்கு இணங்கவும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்று தமது அமைச்சரவை எடுத்த முடிவு – எந்தக் குழுப்பமும் இல்லாமல் உடனடியாக நிறைவேறுவதற்கு ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த வேண்டும்.
 
தமிழ்நாட்டு மக்கள், காங்கிரசுக் கட்சி – தமிழினப் பகைக் கட்சி என்பதைப் புரிந்து கொண்டு, ஏழு தமிழர் விடுதலையில் விழிப்போடு செயலாற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, September 10, 2018

தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் விடுதலை - தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்று தமிழ்நாடு அமைச்சரவை நேற்று (09.09.2018) முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்பது பாராட்டிற்குரிய செயல்!
 
தமிழ்நாடு ஆளுநர் சட்ட வல்லுநர் கருத்துகளைக் கேட்பது ஒரு பக்கம்; இருந்தாலும், காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை பதினான்கு ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த நிலையில், அன்றைய மகாராட்டிர காங்கிரசு ஆட்சி விடுதலை செய்தது என்ற முன்னெடுத்துக்காட்டை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனெனில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்தவர்!
 
இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு – 161 இன்படி, சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்பதை தொடர்ச்சியாக பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.
 
மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில், 1981இல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆயம், இரண்டு செய்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒன்று, மாநில அரசுக்கு 161இன்படி உள்ள அதிகாரம் தங்குதடையற்றது, அது நடுவண் அரசின் அனுமதிக்கோ ஆய்வுக்கோ உட்பட்டதல்ல என்பது. இரண்டு, அந்த 161-ஐப் பயன்படுத்தி ஒரு தடவை தண்டனைக் குறைப்பு செய்தால், இரண்டாம் தடவை தண்டனைக் குறைப்போ விடுதலையோ செய்யக்கூடாது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து, அரசமைப்புச் சட்டம் ஒரு தடவைதான் தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டுமென வரம்பு விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. மாரூராம் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனைக் குறைக்கப்பட்டு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரமிருக்கிறது என்று தீர்ப்பளித்தது.
 
இப்பொழுது பேரறிவாளன் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனை நீக்கப்பட்ட நிலையில், மறுபடியும் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியுமா என்றால், முடியும் என்பதைத்தான் மேற்படி கிருஷ்ணய்யர் தீர்ப்பு உறுதி செய்கிறது.
 
2014இல், அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு மாநில அரசுக்கு 161இன் கீழ் உள்ள அதிகாரத்தை பாதிக்கும் வகையில் எந்தக் கருத்தும் கூறவில்லை; தீர்ப்பும் வழங்கவில்லை! நீதிபதி சதாசிவம் அமர்வின் பரிந்துரைப்படி இவ்வழக்கிற்காக அமைக்கப்பட்ட நீதிபதி கலிபுல்லா தலைமையிலான அரசமைப்பு ஆயம் 2015 திசம்பர் 2இல் வழங்கிய தீர்ப்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடுவண் அரசின் காவல் துறை போட்ட வழக்கில் மாநில அரசு தண்டனைக் குறைப்போ விடுதலையோ செய்ய வேண்டுமானால் நடுவண் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டுமெனக் கூறியது. அதேவேளை, மாநில அரசுக்கு தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலை செய்யும் அதிகாரம் 161இன்கீழ் உள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்று கூறியது.
 
இப்பொழுது, நீதிபதி இரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு, பேரறிவாளன் மனு மீது அளித்த தீர்ப்பில், மாநில அரசு 161இன் கீழ் முடிவெடுக்க (அதாவது விடுதலை செய்ய) தடை ஏதுமில்லை என்று 07.09.2018 அன்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் மேற்படி ஏழு தமிழர்கள் மீதான குற்றச்சாட்டு ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை என்பது இவ்வழக்கில் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய கே.டி. தாமஸ் அவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம்.
 
தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின் மீது ஒன்றிய அரசின் கருத்துக் கேட்க வேண்டிய நிலை இல்லை! ஆளுநர் இந்திய அரசின் கருத்துக்கேட்பு நடைமுறையில் இறங்கக் கூடாது.
 
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள கோபால் கோட்சே விடுதலை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் கணக்கில் எடுத்தும், தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள், இராசீவ் கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை எந்தக் காலத்தாழ்வுமின்றி உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, September 6, 2018

உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது : ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது : ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
நாம் நீண்ட நாளாக வலியுறுத்தி வருவதை உறுதி செய்வதுபோல், ஏழு தமிழர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
 
இராசீவ் கொலையில் தண்டனை வழங்கப்பட்டு கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக - சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (06.09.2018) தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் மாநில அரசின் அதிகாரம் கட்டற்றது; எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் செயல்படக்கூடியது என்று மாரூராம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடங்கி, இறுதியில் இதே வழக்கில் (இந்திய ஒன்றிய அரசு - எதிர் - முருகன் (எ) சிறீகரன் மற்றும் பிறர்) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரை தெளிவுபடுத்தியுள்ளது.
 
இதனடிப்படையில், தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து உறுப்பு 161இன்படி ஆளுநர் வழியாக ஆணையிட்டு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து நாமும் பல்வேறு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் அறிவுறுத்தி வந்தோம். இப்போது, நீதிபதி இரஞ்சன் கோகாய் அமர்வு இன்னும் உறுதியாக தெளிவுபடுத்திவிட்டது!
 
ஏழு தமிழரையும் விடுதலை செய்ய 2014 – பிப்ரவரி 18இல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, செயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சரவை முடிவாக ஆளுநருக்கு அனுப்பி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, September 5, 2018

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீரவணக்கம்!

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்!
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய வீரத்தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சியில் இன்று (05.09.2018) வ.உ.சி. திருவுருவச் சிலைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் இனியன், வெள்ளம்மாள், பொறியாளர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
வீரத்தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீரவணக்கங்கள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
நடுவண் அரசின் ஐட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கூட்டம் நாளைக்கு (06.09.2018) பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் புதுதில்லியில் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பெட்ரோலியம், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலமெடுத்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
அதன்படி முதல் கட்டமாக, மரக்காணத்திலிருந்து கடலூர் வரை உள்ள வட்டாரத்தையும், பரங்கிப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணி வரையுள்ள இன்னொரு வட்டாரத்தையும் வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கிறார்கள். குள்ளஞ்சாவடியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள வட்டாரத்தை ஓ.என்.ஜி.சி.க்குக் கொடுக்கிறார்கள். இங்கு குறிப்பிடப்படும் ஒரு வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான குழாய்களை இறக்கி அவர்கள் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ளலாம்.
 
மேலே குறிப்பிட்ட பகுதிகள் அனைத்தும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள வேளாண் மண்டலமாகும். இந்த ஐட்ரோகார்பன் திட்டம் செயல்பட்டால், முழுமையாக வேளாண்மை அழிந்துவிடும். கிராமங்கள் காலி செய்யப்படும். நிலத்தடி நீர் மாசுபடும். ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நீரோட்டங்கள் தடுக்கப்படும் அல்லது திசைமாற்றப்படும். மக்கள் வேறு வழியின்றி வெளியேற வேண்டிய நிலை உருவாகும். ஒட்டுமொத்தத்தில், பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் தாய் மண்ணும் வாழ்வுரிமையும் பறிக்கப்படும்!
 
நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் தகர்ந்து வீழ்ந்துவிட்டது. ரூபாய் மதிப்பு படு வீழ்ச்சி அடைந்து, பாதாளம் நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் நசிந்து, மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஈடுகட்ட, தமிழர் வாழ்வைச் சூறையாடி, தமிழ்நாட்டுக் கனிமங்களை எடுத்து, அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வெளிநாட்டு செலாவணி ஈட்ட மோடி அரசு முயல்கிறது.
 
தூத்துக்குடி வட்டாரத்தில் மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி – 13 மனித உயிர்களைப் பலி கொண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழ்நாட்டின் காவிரி மண்டலத்தை மோடி அரசு காவு கொடுக்கிறது!
 
ஏற்கெனவே, வரிகள் மற்றும் கட்டணங்கள் வழியாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிகமாக இந்திய அரசுக்கு பணம் கொடுக்கும் மாநிலமாக இருக்கிறது. ஓராண்டுக்கு 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிலிருந்து வரிப்பணமும், இதரக் கட்டணங்களும் தில்லிக்குப் போகிறது. அதற்குரிய முறையில், தில்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பணம் வருவதில்லை; திட்டங்களும் வருவதில்லை! நாம் அனுப்பும் பணத்திற்கும், அங்கிருந்து வரும் தொகைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது!
 
தமிழ்நாட்டு மண்ணின் வளத்தை அழித்து – மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஐட்ரோகார்பன் திட்டம் பற்றி, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும்.
 
பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மட்டும் போராடுவார்கள் என்ற நிலையை மாற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இத்திட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும். கணக்குப் பார்த்தால், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் இந்திய அரசு விட்டுவைக்கவில்லை. தூத்துக்குடியில் போராட்டம், சேலம் பகுதியில் எட்டுவழிச்சாலை பாதிப்பால் போராட்டம் என்று தமிழ்நாடு முழுக்க நடுவண் அரசு கை வைத்து மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணுரிமையையும் பறித்து வருகிறது. எனவே, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் போராட வேண்டிய தேவை உள்ளது! நாம் நடத்தும் போராட்டம், மக்கள் திரள் நடத்தும் அறப்போராட்டம் - வன்முறையற்ற போராட்டம்!
 
இந்திய அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, ஐட்ரோ கார்பன் திட்டங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு, மேற்படி திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று நடுவண் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையெனில், நாம் போராட்டக் களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அனைத்து மக்களும் வர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, September 4, 2018

மாணவி சோபியா சிறையிலடைப்பு : தமிழிசையின் அதிகார வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

மாணவி சோபியா சிறையிலடைப்பு : தமிழிசையின் அதிகார வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
முனைவர் பட்ட ஆய்வை கனடாவில் முடித்துவிட்டு, சொந்த ஊர் தூத்துக்குடிக்கு திரும்பிய மாணவி சோபியா சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த வானூர்தியில் பயணம் செய்திருக்கிறார். அதே வானூர்தியில் பயணம் செய்த பா.ச.க. தலைவர் தமிழிசை சௌந்தரராசன் அவர்களைப் பார்த்ததும், மனம் கொதித்து “பாசிச பா.ச.க. ஆட்சி ஒழிக!” என்று முழக்கமிட்டிருக்கிறார்.
 
இதற்காக வானூர்தியிலிருந்து இறங்கி கீழே வந்தவுடன் வரவேற்பறையில் அம்மாணவியிடம் சண்டைக்குப் போயிருக்கிறார் தமிழிசை! அந்தக் காட்சி காணொலியாக ஓடிக் கொண்டுள்ளது. காவல்துறையினரும் மற்றவர்களும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், தடுத்தும் தமிழிசை அவர்கள், நிற்காமல் மேலும் மேலும் அந்த மாணவியை நோக்கி வலிந்து செல்கிறார். ஆனால், மற்றவர்கள் அவரை தடுத்து விட்டார்கள். அப்போது, அவர் காவல்துறையினரிடம் தன்னை தாக்க வந்ததாகவும், தன் உயிருக்கே ஆபத்து என்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் புகார் கொடுக்கிறார். இந்த மாணவிக்குப் பின்னால் ஏதோ ஒரு “தீவிரவாத” அமைப்பு இருக்கிறது என்றும் ஆதாரமில்லாமல் கூறுகிறார்.
 
இந்தப் பொய்ப் புகாரை ஏற்று காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு – 290 (பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்யும் வகையில் பேசுதல்), 505 (1)(b) – காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் 75 (1)(c) (மாநகரக் காவல் சட்டம்) – அரசதிகாரியின் கேள்விக்கு விடை கூறாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சோபியாவை சிறையில் அடைத்துள்ளார்கள். இவற்றில் 505 - பிணை மறுப்புப் பிரிவாகும்.
 
அதேவேளை, அம்மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை இழிவுபடுத்திப் பேசி அவமானப்படுத்தியதுடன் தாக்க முயன்ற பா.ச.க.வினர் மீது, அம்மாணவியின் தந்தை காவல்துறையிடம் கொடுத்த புகாரை பதிவு செய்யாதது கண்டனத்திற்குரியது.
 
விமானத்தில் பயணம் செய்யும்போது, ஓர் அரசியல் தலைவருக்கு எதிராக முழக்கம் போட வேண்டியதில்லை என்பது சரிதான்! ஆனால், தூத்துக்குடியில் 13 உயிர்கள் பலியாவதற்குக் காரணமான பா.ச.க. ஆட்சி, அதன் மாநிலத் தலைவர் தமிழிசை என்ற முறையில், அந்த மண்ணின் மகளுக்கு அடக்க முடியாத சீற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
 
பா.ச.க.வின் பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளின் உச்சமாக மனித உரிமை இயக்கங்களின் தலைவர்களாக விளங்கும் மக்கள் செல்வாக்கு பெற்ற பாவலர் வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்த கொடுமை – உலகெங்கும் வாழும் மனித உரிமை ஆர்வலர்களின் நெஞ்சத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்துள்ளது.
 
இச்சூழ்நிலையில், அம்மாணவி தமிழிசையைப் பார்த்தவுடன் பொங்கியெழுந்த ஆவேசத்தில் முழக்கமிட்டிருக்கலாம். காந்தியத்தில் நம்பிக்கையும், அரசியலில் பக்குவமும் தமிழிசைக்கு இருந்திருந்தால், வானூர்தியை விட்டு இறங்கியவுடன் அப்பெண்ணை அன்பாக அருகே அழைத்து, “என்னம்மா உனக்குக் கோபம்?” என்று கேட்டு, அம்மாணவியை ஆற்றுப் படுத்துவதற்கு முயன்றிருக்கலாம்.
 
இரண்டாவதாக பா.ச.க.வின் எதேச்சாதிகார நடவடிக்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பின் அடையாளம் என்று இதைப் புரிந்து கொண்டு, தன் கட்சியின் தலைமைக்கு இதை எடுத்துரைத்து, தன் கட்சி தற்சோதனை செய்து கொள்ள கேட்டுக் கொண்டிருக்கலாம்!
 
அந்த அறவழியை விடுத்து, அதிகார வெறியோடு அந்த இளம்பெண் மீது பாய்வதும், அவர் மீது பொய் வழக்குப் போட வைப்பதும் நாகரிகச் சமூகம் செரித்துக் கொள்ள முடியாத செயலாகும்!
 
கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொய்ப் புகாரை பதிவு செய்து, அப்பெண்ணை சிறையில் அடைக்க காவல்துறைக்கு ஆணையிட்ட மேலதிகாரி யார், அரசியல் தலைவர் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்கள் மீது தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழிசை சௌந்தரராசன் அவர்களுடைய அதிகார ஆணவத்தையும், பழிவாங்கும் சினத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
#பாசிசபாஜகஒழிக
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக
#IsupportSophia
#ReleaseSophia
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, September 3, 2018

தடை நீங்கி - மதுரை உயர் நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் சனநாயகம் காத்திடும் ஒன்றுகூடல்!

தடை நீங்கி - மதுரை உயர் நீதிமன்ற அனுமதியுடன் திருச்சியில் சனநாயகம் காத்திட தமிழர் ஒன்றுகூடல்!!
தமிழ்நாட்டில் சனநாயக மறுப்புச் சூழல் நிலவி வரும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “சனநாயகம் காத்திட தமிழர் ஒன்று கூடல்” என்ற தலைப்பில், வரும் 09.09.2018 - ஞாயிறு அன்று மாலை திருச்சியில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
 
கடந்த சூலை மாதம் நடத்தப்படவிருந்த இப்பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுகுறித்து முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, உயர் நீதிமன்றம் கூட்டத்திற்கான தடையை நீக்கி அனுமதி வழங்கி ஆணையிட்டது.
 
இதனையடுத்து, தடை நீங்கி - வரும் 09.09.2018 - ஞாயிறு மாலை 6 மணியளவில் திருச்சி உறையூர் குறத்தெருவில் இப்பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகர் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை தாங்குகிறார். தோழர் வே.க. இலட்சுமணன் வரவேற்கிறார். பெண்ணாடம் திருவள்ளுவர் தப்பாட்டக் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
 
தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் பெரியார் சரவணன், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரா. பிரபு, சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் அ. இரவிக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். தோழர் வே.பூ. இராமராசு நன்றி கூறுகிறார்.
 
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, September 1, 2018

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
பேரூர் மூத்த ஆதினகர்த்தர் தவத்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். தமிழ்ச் சைவ சமயத்தில் நின்று தெய்வத்தொண்டு, செந்தமிழ்த் தொண்டு, கல்வித் தொண்டு மற்றும் பல மக்கள் தொண்டுகள் ஆற்றிய மாத்தமிழர் ஐயா அவர்கள். ஆன்மிகத்திலும் தமிழர் வாழ்வியலிலும் ஆக்கிரமித்துள்ள ஆரிய மொழி மற்றும் பண்பாட்டு ஆதிக்கங்களை நீக்கி மரபுவழிபட்ட தமிழர் பண்பாட்டை மீட்க அரும்பாடு பட்டவர் ஆவார்கள்.
 
ஆதினத்தின் பொறுப்பில் அருந்தமிழ் கல்லூரி நடந்து வருகிறது. கொங்குச் சீமையில் ஏரளாமாகத் தமிழ் வழிக் குடமுழுக்குகள் நடத்தினார்கள். நம்முடைய தமிழ் மக்களும் அடிகளாரின் ஆன்மிக வழிப்பட்ட தமிழ்த்தொண்டுக்கு வரவேற்பும் வாய்ப்பும் கொடுத்தார்கள்.
 
ஐயா அவர்களுடைய சிறந்த சாதனைகளில் ஒன்று தகுதியான இளையபட்டம் அவர்களைத் தேர்வு செய்தது ஆகும். இளையபட்டம் அவர்கள் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் ஆன்மிக மற்றும் தமிழ்ப் பணிகளை விரிவடைய செய்து வளர்த்தவருகிறார்கள்.
 
மூத்த ஆதினகர்த்தர் ஐயா அவர்களை பேரூர் ஆதினத்தில் ஒரு முறை நேரில் சந்தித்து அவர்களுடைய பணிகளைப் பாராட்டும் வாய்ப்பு பெற்றேன். ஐயா அவர்கள் இயல்பாக கலந்துரையாடி எமது தமிழ்த்தேசிய பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். நாங்கள் உணவு அருந்தி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவ்வாறே உணவு அருந்தி வந்தோம். இளையபட்டம் அவர்களுடன் அப்போதுதான் அறிமுகமானேன். இளையபட்டம் அவர்கள் தமிழ்மொழிக்காக எடுத்து வரும் எல்லாச் செயல்பாடுகளையும் தொடர்ந்து பாராட்டி வருவதுடன் அச்செயல்பாடுகளுக்கு இயன்ற வரை ஆதரவு அளித்துவருகிறேன்.
 
பேரூர் மூத்த ஆதினகர்த்தர் பெருமைமிகு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தவத்திரு இளையபட்டம் அவர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Sunday, August 26, 2018

வெள்ளப் பேரழிவு : தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால் கேரளத்தின் பொய் அம்பலம்! தோழர் பெ. மணியரசன்.

வெள்ளப் பேரழிவு : தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால் கேரளத்தின் பொய் அம்பலம்! தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி திடீரென்று ஆகத்து 15, 16 நாட்களில் அதிக அளவில் திறந்து விட்டதுதான் கேரளத்தின் வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம் என்று அம்மாநில அரசு வெளியிலும் உச்ச நீதிமன்றத்திலும் அறிக்கைகள் கொடுத்து வருகிறது. இவ்வாறு தனது தவற்றை மூடி மறைத்து வருகிறது.

தமிழ்நாட்டின் மீது பழிபோடும் கேரளத்தின் பொய்க் கூற்றை தமிழ்நாடு அரசு சரியான புள்ளி விவரங்களுடன் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எதிர் உறுதி மனு (Counter Affidavit) தகர்த்துள்ளது.

வெள்ளப் பெருக்கும் பேரழிவும் உச்சத்திற்குப் போன ஆகத்து 14 முதல் 19 வரையிலான ஆறு நாட்களில் கேரளம் தனது இடுக்கி அணையிலிருந்தும், இடமலையாறு அணையிலிருந்தும் திறந்துவிட்ட மொத்த நீர் 36 ஆ.மி.க. (டி.எம்.சி.). இதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இதே காலத்தில் திறந்துவிட்ட நீரின் பங்கு 6.65 ஆ.மி.க. மட்டுமே!

இடுக்கி – இடமலையாறு நீர் 29.35 ஆ.மி.க. மிகக் குறைவாக 6 நாட்களில் திறந்துவிட்ட 6.65 ஆ.மி.க. தண்ணீர்தான் இவ்வளவு பெரிய வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்று கேரள அரசு சொல்வது எவ்வளவு பெரிய பொய்!

ஆகத்து 15 அன்று 12 ஆயிரம் கன அடிதான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. திடீரென்று பெருவெள்ளம் திறக்கப்படவில்லை. அடுத்து, 16.08.2018 அன்று 24 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த நாட்களில் திறந்துவிடும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமென்ற கேரளத்தின் சதித்திட்டம் தான் மேற்படிப் பொய்க் கூற்றில் பல் இளிக்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT