உடனடிச்செய்திகள்

Sunday, August 26, 2018

வெள்ளப் பேரழிவு : தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால் கேரளத்தின் பொய் அம்பலம்! தோழர் பெ. மணியரசன்.

வெள்ளப் பேரழிவு : தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால் கேரளத்தின் பொய் அம்பலம்! தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி திடீரென்று ஆகத்து 15, 16 நாட்களில் அதிக அளவில் திறந்து விட்டதுதான் கேரளத்தின் வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம் என்று அம்மாநில அரசு வெளியிலும் உச்ச நீதிமன்றத்திலும் அறிக்கைகள் கொடுத்து வருகிறது. இவ்வாறு தனது தவற்றை மூடி மறைத்து வருகிறது.

தமிழ்நாட்டின் மீது பழிபோடும் கேரளத்தின் பொய்க் கூற்றை தமிழ்நாடு அரசு சரியான புள்ளி விவரங்களுடன் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எதிர் உறுதி மனு (Counter Affidavit) தகர்த்துள்ளது.

வெள்ளப் பெருக்கும் பேரழிவும் உச்சத்திற்குப் போன ஆகத்து 14 முதல் 19 வரையிலான ஆறு நாட்களில் கேரளம் தனது இடுக்கி அணையிலிருந்தும், இடமலையாறு அணையிலிருந்தும் திறந்துவிட்ட மொத்த நீர் 36 ஆ.மி.க. (டி.எம்.சி.). இதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இதே காலத்தில் திறந்துவிட்ட நீரின் பங்கு 6.65 ஆ.மி.க. மட்டுமே!

இடுக்கி – இடமலையாறு நீர் 29.35 ஆ.மி.க. மிகக் குறைவாக 6 நாட்களில் திறந்துவிட்ட 6.65 ஆ.மி.க. தண்ணீர்தான் இவ்வளவு பெரிய வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்று கேரள அரசு சொல்வது எவ்வளவு பெரிய பொய்!

ஆகத்து 15 அன்று 12 ஆயிரம் கன அடிதான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. திடீரென்று பெருவெள்ளம் திறக்கப்படவில்லை. அடுத்து, 16.08.2018 அன்று 24 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த நாட்களில் திறந்துவிடும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமென்ற கேரளத்தின் சதித்திட்டம் தான் மேற்படிப் பொய்க் கூற்றில் பல் இளிக்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT