உடனடிச்செய்திகள்

Friday, June 22, 2012

“ஈழத்தமிழர்களை விடுதலை செய்!” – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்!


“ஈழத்தமிழர்களை விடுதலை செய்! செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்!

செங்கல்பட்டு - பூந்தமல்லி பகுதிகளில் 'சிறப்பு முகாம்' என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட சிறைபடுத்தி வைத்திருக்கும் தமிழீழத் தமிழர்களை, தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டில் இன்று(22.06.2012) காலை பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்த மாதம் தங்களை விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகளான ஈழத்தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த தமிழக அரசு, இம்மாதம் 15.06.2012  அன்று சிறைவாசிகளை படிப்படியாக விடுதலை செய்வதாக ஒத்துக் கொண்டது. ஆனால், 15.06.2012 அன்று கடந்த பின்னரும் கூட யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

தமது வாக்குறுதியைக் கைவிட்ட தமிழக அரசைக் கண்டித்து, தற்போது மீண்டும் செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகள் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தற்போது,  சாகும் வரையிலான உண்ணாப்போராட்டம் நடத்திய ஐவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்களை இம்முகாமிலிருந்து விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், தமிழக அரசு தமது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் சென்னையில் தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் ஒன்று கூடி தமிழக முதல்வருக்கு 19.06.2012 அன்று பல நூற்றுக்கணக்கில் அவசரத் தந்திகளை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை செய்! விடுதலை செய்! ஈழத்தமிழ் அகதிகளை வாக்குறுதிக்கேற்ப விடுதலை செய்! தமிழக அரசே விடுதலை செய் என்பன உள்ளிட்ட முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தலைமையேற்றார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சி காஞ்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஷாஜகான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழகத்தில் செயல்படுகின்ற ஈழத்தமிழர் சிறப்பு முகாம்கள் தமிழினத்தின் அவமானச் சின்னமாக கருதப்பட வேண்டும். எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகள் எல்லாம் ஈழத்தமிழர்களை சக மனிதனாக அங்கீகரித்து அவர்களுக்கு குடியுரிமை அளித்து வாழ்க்கை அளிக்கிறது. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வடநாட்டுக்காரர்களுக்கும் மலையாளிகளுக்கும் குடியுரிமை அளிக்கும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு இங்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறது? தமிழ்நாட்டுத்  தமிழர்கள் இனஉணர்வுடன் ஒன்று சேர்ந்து போராடாமல் இருந்ததும் இதற்குக் காரணம். உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், ஈழஅகதிகளின் உயிருக்கு ஏதேனும் கேடு நேர்ந்தால் அதன்பின் சடங்குப் போராட்டங்கள் நடைபெறாது. தமிழ்த் தேசிய விடுதலைக்கானப் போராட்டத்தின் தொடக்கமாக அது அமையும் என்று தெரிவித்தார்.

நிறைவில், தீர்மானம் முன்மொழிந்து பேசிய இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இப்போராட்டம் முதலில் முற்றுகைப் போராட்டமாகத் தான் அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழக முதல்வருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்ப்போம் என்ற அடிப்படையில் தற்போது ஆர்ப்பாட்டமாக நடக்கிறது. இவ்வாய்ப்பையும் அவர் தவற விட்டால்,  நாங்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமை கூட்டம் கூட்டமாகச் சென்று முற்றுகையிடுவோம். அப்போது எங்கள் உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாதுஎன ஆவேசமாகப் பேசினார். பெ.தி.க. இளைஞரணிச் செயலாளர் தோழர் டேவிட் பெரியார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனையில், உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ அகதிகள் திரு. செல்வராஜ், சதீஷ்குமார், மதன், பராபரன், செல்வம் ஆகியோரை தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.





(செய்தி – த.தே.பொ.க. செய்திப் பிரிவு, புகைப்படங்கள்: அருணபாரதி)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT