உடனடிச்செய்திகள்

Wednesday, August 24, 2016

நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்!” எண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!



நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்!”

எண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில் 
தமிழகத் தொழிற்சங்க முன்னணித் 
தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


 எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை வாயிலில், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற வாயிற் கூட்டத்தில், பேரியக்கத்தின் தலைவரும் தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவருமான தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

ஓசூர் அசோக் லேலண்ட் அலகு – இரண்டு தொழிற்சாலைக்கானத் தொழிற்சங்கத் தேர்தலில், கடந்த 19.08.2016 அன்று வெற்றி பெற்ற தோழர் கி. வெங்கட்ராமன், அதன்பிறகு சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை – தொழிற்சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். வரும் 26.08.2016 அன்று இதற்கானத் தேர்தல் நடைபெறுகின்றது.

இதற்கான பரப்புரையாக, நேற்று (23.08.2016), தொழிற்சாலை வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில், தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :

“அன்பான தொழிலாளத் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பேசும்போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல, இங்கு – தொழிற்சங்க இயக்கத்தில் பதவிக்கானப் போட்டி நடக்கவில்லை. தொழிலாளர்களுக்குப் பணியாற்றுவதற்கான பொறுப்புக்கானப் போட்டியே நடக்கிறது. எனவே, இது பணிக்கான போட்டியே தவிர, பதவிக்கானப் போட்டி அல்ல என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? இருக்கின்ற உரிமைகள் பறிபோய்விடாமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழி முறைகள் என்ன? என்பதையெல்லாம் வழிகாட்டுவதற்கான போட்டியே இங்கு நடைபெறுகின்றது.
இதை வெறும் பேச்சாக நாங்கள் கூறவில்லை. நேற்று (22.08.2016) ஓசூரில், அசோக் லேலண்ட் – அலகு ஒன்றில் நடைபெற்றத் தொழிற்சங்கத் தேர்தலில் நாங்கள் வென்ற பிறகு, அங்கு பதவியேற்பு விழா நடத்தவில்லை. “பொறுப்பு ஏற்பு விழா” என்று அதை மாற்றி நடத்தினோம்.

எண்ணூர் அசோக் லேலண்ட்டில் நடக்கும் இந்த தொழிற்சங்கத் தேர்தல், இந்த முறை வழக்கமாக நடைபெறப் போவதில்லை. இந்தத் தேர்தல், புதிய ஒப்பந்தத்திற்கானத் தேர்தல் – புதிய ஒப்பந்தத்திற்கானக் கருத்து வாக்கெடுப்பு என்ற அளவில் நடக்கவுள்ளது.

ஓசூரில் தொழிலாளர் முன்னணியின் தலைவர் திரு. மைக்கேல் பெர்ணான்டசு அவர்கள், தனது தலைமையைவிட்டுக் கொடுத்து, ஒரே கூட்டணி அமைத்து, எங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் வென்றோம்.

எனினும், நாங்கள் யாருக்கும் வளைந்து நெளிந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. பணிக்கான வாய்ப்பே நமக்குக் கிடைத்துள்ளது. அதைச் சரியாகச் செய்வோம்.

இதற்கு முன்பு, திரு. மைக்கேல் அவர்கள் காலத்தில் போட்ட ஒப்பந்தம் குறித்த எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இப்போது புதிய ஒப்பந்தத்திற்காக செயலாற்ற இணைந்துள்ளோம்.

திரு. மைக்கேல் அவர்களையும், தொழிலாளர் நல மன்றத் தலைவர் திரு. குசேலன் அவர்களையும் நாங்கள் சம தூரத்தில் வைத்தும் எதிர்க்கவில்லை.

இங்கு போடப்படும் ஒப்பந்தங்கள், தொழிலாளர்களை வாழ வைக்கும் ஒப்பந்தங்களாக இல்லை. தொழிலாளர்களை வெளியேற்றச் செய்யும் ஒப்பந்தமாகவே இருக்கிறது. இந்நிலையை மாற்றுவோம்.

அதே போல், இவர் தவறு - அவர் தவறு என்று சொல்வதன் மூலம் நாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று சொல்ல வரவில்லை. நாங்கள் எது சரி என்பதையும், அதற்கான சூத்திரத்தையும் சொல்கிறோம். நீங்கள் எது சரி எனத் தேர்ந்தெடுங்கள்!

தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில், ஒப்பந்தம் முடிந்த அடுத்த நாளிலிருந்து தொழிலாளிக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருவது நடைமுறையாக இருக்கின்றது. ஆனால், அசோக் லேலண்டிலோ தொழிற்சங்கத் தலைவர்கள் எப்பொழுது கையெழுத்திடுகிறார்களோ அப்போதிலிருந்துதான் புதிய ஒப்பந்தம் செயலுக்கு வரும் எனச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறான நடைமுறை! அதை முதலில் மாற்றுவோம்.

ஒப்பந்தம் முடித்த அடுத்த நாளே புதிய ஒப்பந்தம் செயலுக்கு வர வேண்டும். அதற்கான நிலுவைத் தொகையைக் பெற்றுத் தருவதுதான் தொழிற்சங்கத்தின் பணியே தவிர, அதை விட்டுக் கொடுப்பதற்கு எதற்குத் தொழிற்சங்கம்?

எனவே, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு நாங்கள் தனி நபரை முன் வைக்கவில்லை. கோரிக்கைதான் கதா நாயகனாக முன் வைக்கிறோம். அந்தக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக, உங்களுக்கு முன் நான் ஓடுகிறேன். நீங்கள் பின்னோக்கி வாருங்கள். எல்லோரும் சேர்ந்தால் அது நம் வெற்றி!
தொழிற்சங்க இயக்கத்தில், தொழிலாளர்கள் பார்வையாளர்களாக மட்டும் இருக்கக் கூடாது, அவர்கள் பங்கேற்பாளர்களாகவும் இருக்க வேண்டுமென நான் அடிக்கடி சொல்வேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்காமல் யாரும் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது.

தொழிற்சங்கத்தைக் கண்காணிக்க வேண்டும். அப்படி தொழிலாளர்கள் சரியாகக் கண்காணித்திருந்தால், கடந்த ஆண்டு, நம் தொழிலாளிகளுக்கு சேர வேண்டிய இன்சுரன்சு பணப் பலன்களை இன்னொரு நபர் – யாருக்கும் தெரியாமல் சுருட்டிக் கொண்டு சென்றிருக்க முடியாது. அந்த நிகழ்வை நினைவூட்டி, உங்கள் எல்லோரையும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

எண்ணூரில் ஒவ்வொரு ஒப்பந்தம் போடப்படும் போதெல்லாம், தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. தற்போது, 2387 தொழிலாளர்கள் உள்ளனர். இதை அப்படியே நிலைநிறுத்த வேண்டும். இனி, அதில் ஒரு தொழிலாளிகூட குறையக் கூடாது என்பது நம் முதல் கோரிக்கை!

மூன்றாண்டுக்கு மேல் யாரும் ஸ்டேண்ட் பைத்(பதிலி) தொழிலாளியாக இருக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

செர்மனியில் பாதிரியார் ஒருவர் வாசித்ததாக ஒரு கவிதைச் சொல்லப்படுவதுண்டு. முதலில், இட்லர் கம்யூனிஸ்டுகளை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர் யூதர்களை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர் தொழிற்சங்கங்களை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர், எங்களை அழிக்க வந்தான், எங்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை என்றது அக்கவிதை! எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு அசோக் லேலண்டின் உற்பத்திப் பெருகிக் கொண்டுள்ளது. புதிய நாடுகளைக் கைப்பற்றுவது போல் பல இடங்களில் புதிய தொழிற்சாலைகள், உலகச் சந்தையில் போட்டிகள் என அசோக் லேலண்ட் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த வளர்ச்சிக்குப் பணியாற்ற – மூளை உழைப்பு செலுத்திய அதிகாரிகளுக்கு அறிவார்ந்த பணிகளுக்கு மதிப்பளிப்பதில் தவறில்லை. ஆனால், அதே அளவிற்கு உடலுழைப்பு செய்த தொழிலாளர்களும் பலன் பெற வேண்டும். அவர்கள் எண்ணிக்கையும் விரிவடைய வேண்டும்.

கடந்த காலாண்டில், அசோக் லேலண்ட் நிறுவனம் 101 விழுக்காடு இலாபம் பெற்று வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. ஆனால், தொழிலாளர்களுக்கு உருப்படியான ஊதிய உயர்வு இல்லை. இதை அவலத்தை மாற்ற வேண்டும்.

தொழிலாளிகள் இறந்து போனால், அவர்களது வாரிசுகளுக்கு வேலை அளிப்பது சலுகையல்ல. அவர்களது பணிக்கான நன்றிக் கடன் அது. Ethical Management கோட்பாட்டின்படி, அது இயல்பாக நடக்க வேண்டும். நிர்வாகத்திற்கு அதுதான் கவுரவத்தைப் பெற்றுத் தரும். ஆனால், அதைக்கூட போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலைமைக்கு ஆளாக்காதீர்கள்.

நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
கூட்டத்தில், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் தோழர் நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திரளான தொழிலாளர் தோழர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT