உடனடிச்செய்திகள்

Tuesday, August 16, 2016

“போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி!” தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!



போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை
உருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி!”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி அவர்கள் 14.08.2016 அன்று காலமான செய்தி, துயரமளிக்கிறது.

அவர், உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் இணைந்து களப் போராட்டங்கள் நடத்தியவர். 1970கள் மற்றும் 80களில் உழவர் உரிமைகளுக்காகவும் உழவர் துயர் துடைப்பதற்காகவும் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களின் தளபதியாக விளங்கியவர்.


அவர்கள் அப்போது நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் உழவர்களை அவமானப்படுத்தி கடன் வசூலிக்கும் முறை பெருமளவில் ஒழிந்தது. வேளாண்மைக்கு இலவச மின்சாரம் கிடைத்தது.
போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை தமிழ்நாடு முழுவதும் உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் மருத்துவர் சிவசாமி. அவர் இறுதி மூச்சு வரை உழவர் உரிமைகளுக்காகவே போராடினார். வாழ்ந்தார்.

காவிரி உரிமைச் சிக்கலில் 1998-இல் அதிகாரமில்லாத போலித்தனமான ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்ட போது, அதை எதிர்த்து தமிழ்த் தேசியப் பேரியக்கம், மருத்துவர் சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் ஆகியவை கூட்டாகப் பல போராட்டங்கள் நடத்தின. காவிரிச் சிக்கலில் அண்மைக்காலம் வரை மருத்துவரும், தமிழக விவசாயிகள் சங்கமும், தமிழ்த் தேசியப் பேரியக்கமும் கூட்டாக இயங்கிப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் மருத்துவர் சிவசாமி அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் இல்லத்தாருக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT