உடனடிச்செய்திகள்

Thursday, September 28, 2017

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம்

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், நரிமணம், பனங்குடி, வெள்ளக்குடி, குத்தாலம், எண்ணூர் முதலிய இடங்களில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவளி ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைப்பேசித்துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்டுத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, எண்பது விழுக்காடு அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.
இதுதவிர, தமிழ்நாட்டில் வசிப்போர் என்று போலிச் சான்றிதழ் பெற்று அயல் மாநிலத்தவர் பலர் தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் வேலையிலும் கல்வியிலும் சேர்க்கிறார்கள். இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டு “நீட்” தேர்வின் மூலம் தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் அயல் மாநில மாணவர்கள் பலர் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
எட்டுக்கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் படித்து வேலையில்லாமல் துன்புறுவோர் ஏராளம்! தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ள மண்ணின் மகன்கள், மண்ணின் மகள்கள் எண்ணிக்கை ஒரு கோடி! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாகப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து பட்டம் பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் - மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகித் தவிக்கிறார்கள். அவர்களில் பலர் தொழிலகங்களின் வாயில் காப்போர்களாக வேலை பார்க்கிறார்கள். அவ்வேலையிலும் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு மிக அதிகமாகிப் போட்டி கடுமையாக உள்ளது.
இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள் அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தமிழ்நாடு தமிழர்களின் தேசிய இனத் தாயகம் என்ற சட்ட ஏற்பாகும். தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை மண்ணின் மக்களாகியத் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிவழி ஆட்சி மாநிலமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்திற்கு எதிராக, இந்திய அரசு “அனைத்திந்தியத் தேர்வு”  என்பதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நடுவண் அரசுத் தொழிலகங்கள், அலுவலகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே எண்பது விழுக்காடு அளவிற்குச் சேர்த்து வருகிறது.
அண்மையில் தமிழ்நாட்டு அஞ்சலகப் பணிகளுக்காக அனைத்திந்தியத் தேர்வெழுதியோரில் அரியானா மாநிலத்தவர் 25க்கு 25 என்ற அளவில் தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண் வாங்கிய மோசடி அம்பலமானது. ஆவடி எச்.வி.எப் - ஆயுதத் தொழிற்சாலையில் வடநாட்டவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் பி.எச்.இ.எல்., நெய்வேலி, ஆவடித் தொழிலகங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தமிழர்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள்.
மண்ணின் மக்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பதற்காக 1980களில் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்றது. அப்பரிந்துரையின்படி மாநில அரசுத் தொழிலகங்களில் 100க்கு 100 கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் 90 விழுக்காடும், உயர் அதிகாரிகள் 80 விழுக்காடு - 70 விழுக்காடு என்றும் படிநிலையில் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார் துறையிரும் கன்னடர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அப்பரிந்துரை கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரசு, பா.ச.க. ஆட்சிகளால் அப்பரிந்துரை செயல்படுத்தப்படுகிறது.
இந்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் - 10 விழுக்காட்டுக்கு மேல் இவ் அலுவலகங்களில் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும்!
தமிழ்நாடு அரசு, கர்நாடகத்தில் இருப்பது போல் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு - மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வேலை ஒதுக்கீடு வழங்கி சட்டமியற்ற வேண்டும்!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை ஒருவார காலம் நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்கள் முன் - தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளோம்!
மண்ணின் மக்கள் வாழ்வுரிமைக்காக நடைபெறும் இக்காத்திருப்புப் போராட்டத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடின்றி அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT