உடனடிச்செய்திகள்

Thursday, September 7, 2017

மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தோழர் அருணா கண்டன அறிக்கை!

மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா கண்டன அறிக்கை!
 
மாணவி அனிதா மரணம் என்பது அவரது தலையெழுத்து என்றும், ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் மொழிகளை வலியுறுத்தினால் “தேசம்” என்னாவது என்றும் கூறி அனிதாவின் மரணத்தை சிறுமைப்படுத்திய தேசிய மகளிர் உரிமை ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூற்றை மகளிர் ஆயம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
நேற்று (06.09.2016) பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் அம்மையார் படுகொலை குறித்து விசாரிப்பதற்காக பெங்களூர் சென்ற லலிதா குமாரமங்கலத்திடம் “நியூஸ்18” செய்தியாளர், அனிதா மரணம் குறித்து கருத்து கேட்டபோது, அவர் இவ்வாறு அலட்சியமாகக் கூறினார்.
நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அனிதா மரணமடைந்திருப்பதால், அது குறித்து மகளிர் ஆணையம் விசாரிக்க முடியாது என்று கூறிய லலிதா குமாரமங்கலம், “அவர் படித்திருந்தால் தேர்ச்சி பெற்றிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் தலையில் எழுதியிருக்கிறது இல்லையா? அதுபோல் அந்தப் பெண் இறந்துவிட்டார்” என்றும், “தெலுங்கு மாநிலத்தவர்கள் எனக்கு இந்தி தெரியாது என்று சொல்லலாம். அப்படியே போனால் தேசம் என்னாவது?” என்றும் கூறினார்.
 
“இந்தியத்தேசம்” என்ற பெயரால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த சோகத்தையும் “தலையெழுத்து” என்று எள்ளி நகையாடுகிறார். தமிழ்நாட்டு உரிமையை குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை இந்தியத்தேசியம் என்ற பெயரால், “பாரதமாதா” பலி கொண்டு விட்டாள் என்பதையே லலிதா குமாரமங்கலத்தின் பேச்சு உறுதி செய்கிறது.
 
கட்சி அரசியலுக்கும், அரசாங்கத்திற்கும் அப்பால் மகளிர் உரிமையைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக செயல்பட வேண்டிய “மகளிர் ஆணையம்” தமிழ்நாட்டு பெண்களின் உரிமை என்றால் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு லலிதா குமாரமங்கலத்தின் பேச்சு சான்றாக இருக்கிறது.
 
“நீட்” தேர்வை எதிர்த்து அழுத்தமாகப் போராடி உயிரீகம் செய்த மாணவி அனிதாவின் சாவை ஏளனம் செய்த, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்திய மகளிர் ஆணையத் தலைவி லலிதா குமாரமங்கலத்திற்கு மகளிர் ஆயத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  
இன்னணம்,
அருணா
ஒருங்கிணைப்பாளர், மகளிர் ஆயம்.
இடம்: மதுரை
 
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல்: fb.com/makaliraayam
 
 



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT