உடனடிச்செய்திகள்

Tuesday, August 14, 2018

ஆரிய ஆதிக்கம் கார்ப்பரேட் கொள்ளைக்காக உயர் கல்வி ஆணையம். தோழர் கி. வெங்கட்ராமன்.


ஆரிய ஆதிக்கம் கார்ப்பரேட் கொள்ளைக்காக உயர் கல்வி ஆணையம். தோழர் கி. வெங்கட்ராமன் - பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

மோடி அரசு “வெள்ளை” என்று ஒரு பொருளைச் சொன்னால் அது “கருப்பு” என்று புரிந்து கொள்ள வேண்டும். “கூட்டுறவுக் கூட்டாட்சி” என்று சொன்னால் ஆதிக்க ஒற்றை ஆட்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த வரிசையில் இப்போது உயர்கல்வி நிர்வாகத்துக்கு “கூடுதல் தன்னாட்சி” என்ற முழக்கத் தோடு மாநில அரசுகளின் அதிகாரத்தையும், பல்கலைக் கழகங்களின் நிர்வாக உரிமையையும் பறிக்கும் உயர்கல்வி ஆணையத் தைத் திணிக்கிறது பா.ச.க. அரசு.

தமிழ்நாட்டு கல்வியாளர்கள், மாணவர்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றின் முனைப்பான எதிர்ப்பால் மோடி அரசு தான் முன்வைத்த “புதிய கல்விக் கொள்கை” ஆவணத்தை வலியுறுத்தாமல் நிறுத்தி வைத்தது. வந்த ஆபத்து நீங்கியதாக பலரும் நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், இக்கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்தும், மாநிலங்களுக்கு அனுப்பியும் ஒப்புதல் பெறாமலேயே, அதன் வெவ்வேறு கூறுகளை செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.

அச்சதியின் ஒரு பகுதியாக இப்போது நடப்பில் உள்ள பல்கலைக்கழக நல்கைக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு அதற்கு பதிலாக “உயர்கல்வி ஆணையம்” (Higher Education Commission) என்ற ஒன்றை நிறுவ முயல்கிறது.

இதற்காக “இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம், 2018 (பல்கலைக் கழக நல்கைக் குழுச் சட்டம் - 1956 நீக்கம்)” (Higher Education Commission of India Act - 2018, Repeal of University Grants Commission Act -1956) என்ற பெயரில் புதிய சட்ட வரைவை நாடாளுமன்ற மக்கள வையில் முன்வைத்துள்ளது.

இச்சட்ட வரைவை முன்வைத்த இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாசு சவ்டேகர் “குறைந்த அளவு அரசின் குறுக்கீடு நிறைந்த அளவு நிர்வாகச் செயல்பாடு” (Less Government, More Gover nance) என்ற நோக்கத்தில் இச்சட்டம் கொண்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் இச்சட்டத்தின் கூறுகளைக் கூர்ந்து கவனித்தால் இந்திய அரசின் மிகக் கடுமையான சர்வாதிகாரப் பிடி உயர்கல்வித் துறையில் இறுகுவதற்கே இது கொண்டுவரப்படுகிறது என்பது புரியும்.

நடப்பில் உள்ள பல்கலைக் கழக நல்கைக் குழு இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், உயர் கல்விக் கழகங்கள் ஆகியவற்றின் கல்வித் தரத்தை மதிப்பிட்டு, புதிய படிப்புகள், கல்வித் திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழிகாட்டுதல் வழங்குவதோடு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதி நல்கைகளை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டது. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி ஆணையம் நிதி வழங்குவது குறித்து எந்த முடிவும் மேற்கொள்ள முடியாது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை மட்டுமே செய்யலாம். அமைச்சரகம் தான் பல்கலைக் கழகங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் நிதி வழங்குவது குறித்து முடிவு செய்யும்.

யு.ஜி.சி. பெருமளவு தன்னாட்சி அதிகாரம் கொண்டது. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள உயர் கல்வி ஆணையம் முற்றிலும் இந்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சகத்தின் நிருவாகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. கூடுதல் தன்னாட்சி வழங்குவது என்று சொல்லிக் கொண்டே தனது அதிகாரப்பிடியை இந்திய அரசு இறுக்கியுள்ளது.

உயர்கல்வி ஆணையத்தை நிறுவும் முறையிலும், அந்த ஆணையத்தின் அன்றாட நிர்வாகத்திலும் இந்திய அரசின் கை மேலோங்கி இருக்கும் வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி ஆணையம் என்பது முழுக்க முழுக்க இந்திய அரசின் கைப்பொம்மையாக மாற்றப்படுகிறது.

உயர்கல்வி ஆணையத்திற்கு ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், பன்னிரெண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்களை அமர்த்துவதற்கு அமைச் சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு தேடுதல் மற்றும் அமர்த்துதல் குழு அமைக்கப்படும். இத்தேடுதல் குழுவில் உயர்கல்விச் செயலாளரும், மூன்று புகழ் வாய்ந்த கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது. (இச்சட்டத்தின் பிரிவு 3(6))

“புகழ்வாய்ந்த கல்வியாளர்கள்” என்ற பெயரில் ஆளுங் கட்சிக்கு நெருக்கமானவர்களே அமர்த்தப்படுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. இந்த வகையில் ஆணைய மானது முழுக்க முழுக்க இந்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் வகையில் இச்சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவராக சிறந்த கல்வியாளர் (Eminent Acadamician) அமர்த்தப்படுவார். அவர் இந்திய குடிமகன் - குடிமகளாகவோ அல்லது வெளி நாடு வாழ் இந்தியராகவோ இருக்கலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வகையிலும் தனது ஆட்களைக் கொண்டுவர பா.ச.க. திட்டமிடுகிறது.

ஆளும் பா.ச.க.விற்கு வேண்டிய ஆர்.எஸ்.எஸ்.காரரே ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என்பது திண்ணம். ஏற்கெனவே உயர்கல்வி நிறுவனங்களிலும், உயர் ஆய்வு நிறுவனங்களிலும் தலைவராக ஆர்.எஸ்.எஸ். ஆட்களே நிரப்பப்படுவதை காண்கிறோம்.

ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 3 பேர் இந்திய அரசின் துறைச் செயலாளர்களாக இருப்பர். ஒருவர் உயர்கல்வித் துறைச் செயலாளர், இன்னொருவர் திறன் மேம்பாட்டு அமைச்சகச் செயலாளர், மற்றொருவர் அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்.

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் (AICTE) தலைவர், தேசிய ஆசிரியர்க் கல்விக் கழகத் (NCTE) தலைவர் ஆகியோரும் உறுப்பினர்களாக இருப்பர்.

யு.ஜி.சி.க்கு அடுத்து ஏ.ஐ.சி.டி.இ, என்.சி.டி.இ, ஆகியவை கலைக்கப்பட போகின்றன என்பதற்கான அறிகுறி இது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரி களின் தரங்களை மதிப்பிடும் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்திலிருந்து (NAAC) இருவர் ஆணைய உறுப்பினர்களாக இருப்பர்.

இதுவரை கல்வி நிறுவனங்கள் தாங்களாக விரும்பி தேசிய தர நிர்ணயக் குழுவிடம் மனு அளித்து தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறுவார்கள். பல தனியார் நிகர் நிலை பல்கலைக் கழங்களும், கல்லூரிகளும் கையூட்டு செலவு செய்து இந்த மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை.

ஆணையத்தின் உறுப்பினர்களாகவே தர மதிப்பீட்டுக் கழகத்தினர் ஆக்கப்பட்டிருப்பதும் 8(1), தர மதிப்பீட்டை தொடர் செயல்பாடாக மாற்றியிருப்பதும் 15(3)(மீ) உயர் கல்வியைக் கார்ப்பரேட்மயம் ஆக்குவதற்கான மோடி அரசின் திட்டமிட்ட சதியாகும்.

பெரிய தொழில் அதிபர் ஒருவர் (Doyen of Industry) ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார் என இச் சட்ட விதி 8 (1) கூறுகிறது. இதுவும் கல்வியை பெருங்குழு மங்களிடம் கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.

கல்வி நிர்வாகம் தொடர்பான இந்த உயர்கல்வி ஆணையத்தில் இரண்டு பேர் மட்டுமே பல்கலைக் கழக பேராசிரியர்களாக இருப்பார்கள் என இச்சட்ட விதி கூறுவதிலிருந்தே இந்த ஆணையத்தின் தரம் தெளிவாகும்.

வெறும் கைப்பாவை அமைப்பாக உயர்கல்வி ஆணையத்தை அமைத்த பிறகும் பா.ச.க அரசின் அதிகாரப் பசி அடங்கவில்லை.

இந்த ஆணையத்திற்கு வழிகாட்டும் அமைப்பாக ஒரு மதியுரை மன்றம் (Advisory Council) இருக்கும் என்றும், இந்த மன்றம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் இயங்கும் என்றும், இம்மன்றத்தின் வழிகாட்டுதலின் படி தான் உயர்கல்வி ஆணையம் செயல்பட வேண்டும் என்றும் இச்சட்டவிதி 24 கூறுகிறது.

அது மட்டுமின்றி உயர்கல்வி தொடர்பான நடுவண் அரசின் கருத்துகளை ஆணையம் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், எது வொன்று குறித்தும் நடுவண் அரசின் கருத்தே இறுதியான தென்றும் இச்சட்டம் கட்டளையிடுகிறது. (விதி 25)

உயர் கல்வியை ஆரியமயமாக்குவதற்கும், இந்திய மயமாக்குவதற்கும், மாநில அரசுகளின் அரைகுறை உரிமைகளை முற்றிலும் துடைத்து அழிப்பதற்கும் இந்த சட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த ஆணையத்தின் தர மதிப்பீட்டை பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கே நிதி வழங்குவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று ஆணையத்தின் பணிகளை வரை யறுக்கும் விதி 15 வலியுறுத்துகிறது. இதன் மூலமும் பெருங்குழும கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதி நல்கைக் கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகிறது.

இன்னும் தொடங்கப்படாத அம்பானியின் ஜியோ உயர்கல்வி நிறுவனத்திற்கு “உயர் தகுதி நிறுவனம்” (Institute of Excellence) என்ற தகு நிலை அளித்து 1,000 கோடி ரூபாய் நிதி வழங்க முன்வந்த அரசுதான் மோடி அரசு என்பதைக் கவனத்தில் கொண்டால் உயர்கல்வி ஆணையச் சட்டம் எந்த நோக்கத்திற்காக பயன்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதற்கும் ஒரே வகை பாடத்திட்டம் இருக்க வேண்டும் என இச்சட்ட விதி 15 வரையறுக் கிறது. இதன் மூலம் பாடத்திட்ட வரையறுப்பிலிருந்து மாநில அரசுகள் முற்றிலும் வெளியே வைக்கப்படுகின்றன. பாடத்திட்டங்கள் மாநில மொழியிலோ, மாநிலத்தின் தனித் தன்மையைக் கருத்தில் கொண்டோ அமைய முடியாது என்று ஆக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் விதி 20 ஒழுங்குமுறை அதிகாரம் அனைத்தையும் உயர்கல்வி ஆணையத்திற்கு வழங்கு கிறது. இதன் மூலம் பல்கலைக்கழகங்களின் அரைகுறை தன்னாட்சியும் பறிக்கப்படுகிறது.

கல்வி என்பது அந்தந்த மாநிலத் தன்மையில் இருந்து பன்மையோடு விளங்குவதும், உயர்கல்வி நிறுவனங்கள் பல்வேறு கருத்துகளின் விவாதக் களமாக இருப்பதும் அவை கல்வி நிறுவனங்களாக இருப்பதற்கு அடிப்படைத் தேவையாகும். இச்சூழல் அமைந்தால் தான் சுதந்திர சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் முகிழ்த்து எழும் களமாக கல்வி நிறுவனங்கள் அமையும்.

யு.ஜி.சி.யின் அறிவிக்கப்பட்டக் கொள்கைக்கு ஏற்ப அந்த அமைப்பை சீர்திருத்தம் செய்தால் போதுமானது. அதன் குறைபாடுகளைக் காரணம் காட்டி அதனைக் கலைப்பது, நோயைக் காரணம் காட்டி நோயாளியைக் கொல்லும் செயலாகும். ஏனெனில் முன்மொழியப் பட்டுள்ளது. உயர் கல்வி ஆணையம் நோய் தீர்க்கும் மருந்தல்ல, நோயாளியைக் கொல்லும் நஞ்சு.

இந்த ஆணையச் சட்டம் செயலுக்கு வருமானால் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் நுட்பப் பணியாளர்களை உற்பத்தி செய்யும் தொழில் பட்டறையாக கல்வி நிறுவனங்கள் மாறிப்போய் விடும்.

ஆரியமயமான, ஒட்டுண்ணி முதலாளிய வலைப்பின்னலின் தலைமைப் பொருளியல் அடியாள் மோடி விரும்புவது அதுதான்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகத்து 1 - 15, 2018)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT