உடனடிச்செய்திகள்

Monday, August 6, 2018

வீட்டில் சுகப்பிரசவம் தண்டனைக்குரிய குற்றமா? தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

வீட்டில் சுகப்பிரசவம் தண்டனைக்குரிய குற்றமா? தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி - தென்றல் நகரில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான கண்ணன், கடந்த 03.08.2018 அன்றிரவு தனது மனைவி மகாலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இரவு 11.45 மணியளவில், அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து, தாயும் சேயும் நலமாக இருந்துள்ளனர். பிரசவம் முடிந்த மறுநாள், மகாலட்சுமி தனது இயல்பான வீட்டு வேலைகளைப் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ஆரம்ப நலத்துறை (சுகாதார) ஊழியர்கள் மூலம் தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், மாவட்ட பொது சுகாதாரம் இணை இயக்குநர் உள்ளிட்ட மொத்த மருத்துவக் குழுவும், பி.சி. பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், தேனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான காவலர்களும் “குற்றவாளி” வீட்டை முற்றுகையிடுவது போல், கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டு, தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் சேர்க்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தாயையும் குழந்தையையும் பரிசோதிக்க வந்த அலோபதி மருத்துவர்களுக்கு கண்ணன் – மகாலட்சுமி இணையர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அரசு சார்பில் சித்த மருத்துவர் குழு அங்கு வந்தது. தாயையும் குழந்தையும் பரிசோதித்த போடேந்திரபுரம் வட்டார துணை மருத்துவ அலுவலரும், சித்த மருத்துவருமான திலகவதி, கம்பம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சிராஜூதீன் ஆகியோர் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்றாலும், தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது, எனவே குழந்தையின் தொப்புள் கொடியை அகற்ற வேண்டுமெனக் கூறி அகற்றியுள்ளார். அரசு நலத்துறை துணை இயக்குநர் வரதராஜ், குழந்தை 3.50 கிலோ எடையுடன் நல்ல நிலையில் உள்ளது என்றார்.

இந்நிலையில், மருத்துவர்களை மிரட்டியதாக கூறி கண்ணன் மற்றும் அவரது தந்தை தனுஷ்கோடி, தாய் அழகம்மாள் ஆகியோர் மீது பி.சி.பட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததுடன், தனுஷ்கோடியை கைது செய்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்து, தேனியில் ஊடகங்களிடம் பேசியுள்ள தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்றும், சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு நலத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், வீட்டுப்பிரசவம் பார்ப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது, அந்தப் பிறப்பை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று மட்டுமே சட்டம் கூறுவதாக பி்.பி.சி. தமிழ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

நாடெங்கும் ஓடும் தொடர்வண்டிகளில், பேருந்துகளில், வீடுகளில் என பிரசவங்கள் இயல்பான முறையில் நடந்து கொண்டுள்ள நிலையில், அவற்றையெல்லாம் “குற்றச்செயலாக” சித்தரித்து, அதில் ஈடுபடுபவர்கள் மீது “குற்ற” நடவடிக்கை எடுக்கும் கார்ப்பரேட் ஆதரவுப் போக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொண்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையால் சூழப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தையும், மருத்துவ முறைகளையும் கட்டாயப்படுத்தித் திணிக்கும் தமிழ்நாடு அரசின் இப்போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும் அந்தரங்க உரிமை (Right to Privacy)-யை உறுதி செய்கின்றன. தாங்கள் விரும்பும் மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. இவை அனைத்தையும், தமிழ்நாடு அரசு மீறியுள்ளது, இங்கு கார்ப்பரேட் காட்டாட்சி நடக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசு, உடனடியாக தனுஷ்கோடியை விடுதலை செய்து, கண்ணன் உள்ளிட்டோர் மீது தொடர்ந்துள்ள வழக்கைத் திருபம்பப் பெற வேண்டும்! உரிய முறையில் நடைபெறும் இயற்கை முறை வீட்டுப்பிரசவங்களை தமிழ்நாடு அரசு தடுப்பதும், அதில் ஈடுபடுவோரை மிரட்டுவதும் கூடாது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT