இந்திப் பேயை விரட்டி - அன்னைத் தமிழ் காக்க
தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் இரங்கல்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில் தீவிரமாகிக் கொண்டு வரும் நிலையில், சென்னை பூங்கா தொடர்வண்டி நிலையத்தின் பெயர்ப் பலகையில் எழுதியிருந்த இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்தில் 11.03.2026 அன்று ஈடுபட்ட மே 17 இயக்கத் தம்பி சிவா திலீபன், இந்தித் திணிப்பை எதிர்த்து, அப்போது ஓடிவந்த தொடர்வண்டி முன் பாய்ந்தார். படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (18.03.2026) இரவு 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமாகிவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டை ஆக்கிரமித்து அலைக்கழித்து – தமிழை அழித்துக் கொண்டிருக்கும் இந்திப் பேயை எதிர்த்து, முதன் முதலாக 1964 சனவரி 25இல் கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து ஈகியானது முதல், 1965 சனவரி 27இல் மொழிப்போரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது – அன்றைய நாளில் கோடம்பாக்கத்தில் சிவலிங்கம் இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்து ஈகியானது – அடுத்தடுத்து தீக்குளித்தும், நஞ்சுண்டும் மடிந்தவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய வெகுமக்கள் 400 பேரை காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது என அடுத்தடுத்து நடந்த தமிழர் ஈகங்களை மாணவப் பருவத்திலிருந்து பார்த்து வருகிறேன். அச்சம காலங்களில் மாணவனாக நானும் போராடியுள்ளேன். எனக்கு இப்போது தம்பி சிவாதிலீபன் தொடர்வண்டி முன் பாய்ந்து உயிர்நீத்தது பேரதிர்ச்சியாய்ப் பெருந்துயரமாய் உள்ளது. தமிழர்களின் உயிரீகத்திற்கு முடிவே இல்லையா?
இந்திப் பேய் தமிழர்களின் எத்தனை தலைமுறைகளைத்தான் விழுங்கும்? இந்தித் திணிப்பை 1938லேயே காங்கிரசு ஆட்சி அரங்கேற்றியது. அத்திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் சிறை சென்ற தமிழர்கள் நடராசனும், தாளமுத்துவும் சிறையிலேயே மாண்டார்கள்.
இந்திய அரசில் இதற்கு முன் காங்கிரசு ஆண்டபோதும், இப்போது பா.ச.க. ஆளும்போதும் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பைத் தீவிரமாக அரங்கேற்றி வருகிறார்கள்.
கடந்த 11.3.2026 அன்று சென்னை பூங்கா தொடர்வண்டி நிலையத்தில் பெயர்ப் பலகைகளில் எழுதியிருந்த இந்தி எழுத்துகளை மே 17 இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் இயக்கத் தோழர்கள் தார்பூசி அழித்திருக்கிறார்கள். அவர்களில் சிவா திலீபனும் ஒருவர். அவர்தம் மனைவி மக்களோடு அப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அந்தத் தொடர்வண்டி நிலையத்தில் ஓடிவந்த தொடர்வண்டி முன்பாக, "தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழங்கிக் கொண்டே குதித்துள்ளார். படுகாயங்களுடன் சென்னை இராசீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தம்பி சிவா திலீபன் நேற்று (19.03.2026) இரவு 9.30 மணியளவில் ஈகியாகி யுள்ளார்.
எனக்குப் பேரதிர்ச்சி! பெருந்திகைப்பு! பாரதியாரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன:
"விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய்?".
குருதி கசியும் நெஞ்சுடன் கூறுகிறேன்:
ஆதிக்க இந்தியை விரட்டி அன்னைத் தமிழைக் காக்கப் போராடிய மே 17 இயக்கத் தம்பி சிவா திலீபன் அவர்கட்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
================================
Post a Comment