உடனடிச்செய்திகள்

Monday, January 26, 2009

செங்கல்பட்டில் தொடரும் சாகும் வரை உண்ணாப்போராட்டம் : த.தே.பொ.க.வினர் நேரில் ஆதரவு

செங்கல்பட்டில் தொடரும் மாணவர் உண்ணாப்போராட்டம் :
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நேரில் ஆதரவு
தமிழக அரசின் அலட்சியப் போக்கிற்கு கண்டனம்


தமிழீழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டிருக்கும் சிங்கள அரசை போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாப்போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றது.


இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள 14 மாணவர்களில் இரு மாணவர்கள் நேற்று மயக்க நிலை அடைந்து அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர். மேலும் தமிழகக் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அச்சுறுத்தும் போக்கிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆயினும், கைது செய்யப்பட்டால் சிறையிலும் உண்ணாப்போராட்டம் தொடரும் என அம்மாணவர்கள் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்நிலையிலும் கூட, தமிழக அரசு தனது அலட்சியப் போக்கை கைவிடாமல் கொண்டுதானிருக்கிறது.



இன்று(26-01-08) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெற்றித்தமிழன், தமிழ்க்கனல் உள்ளிட்ட தோழர்களும், கிளர்ச்சியாளன் இதழ் ஆசிரியர் வழக்கறிஞர் சேசுபாலன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ப.அமர்நாத் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும், இப்போராட்டத்திற்கு பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காத இந்திய அரசையும், மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத தமிழக அரசின் அலட்சியப் போக்கையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT