உடனடிச்செய்திகள்

Saturday, January 5, 2013

த.இ.மு. தோழர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை வேண்டும் - தோழர் பெ.மணியரசன் அறிக்கை



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை
 
குடும்பங்களைக் குலைத்து, இளைஞர்களைக் கெடுத்து ஒட்டு மொத்தமாகத் தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடித் தமிழக அரசு முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் சென்னை, சிதம்பரம், முருகன்குடி(கடலூர் மாவட்டம்), கும்பகோணம் - சாமிமலை, தஞ்சாவூர், திருச்சி, கிள்ளுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டணப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று(4.1.2013) மறியல் போராட்டம் நடத்தியுள்ளார்கள். 

சிதம்பரம், முருகன்குடி, கும்பகோணம் - சாமிமலை ஆகிய இடங்களில் காவல்துறையினர் வன்முறையின்றிப் போராடிய பெண்களையும், இளைஞர்களையும் கடுமையாகத் தடியால் அடித்துக் காயப்படுத்தியுள்ளனர். 

சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி முனை அருகில் உள்ள தமிழக அரசு மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்த, ஊர்வலமாகச் சென்ற தோழர்களை காவல்துறையினர் வழிமறித்துத் தடுத்து, தடியடி நடத்தி, காயப்படுத்தி உள்ளனர். 

அறவழிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழக இளைஞர் முன்னணியின் தமிழகத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் மற்றும் தோழர்கள் சுப்பிரமணிய சிவா, சுகன், சதீசு ஆகியோர் காவல்துறையினரின் தடியடியால் காயம்பட்டுள்ளனர். 

மேலும், 15 பேர் மேல், பிணை மறுப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்து, கடலூர் நடுவண் சிறையில் அடைத்துள்ளனர். 

மதுக்கடைகளை மூடி, தமிழக மக்களின் ஒழுக்கத்தையும் பண்பையும் காக்குமாறு வலியுறுத்தி, அறவழிப் போராட்டம் நடத்திய இளைஞர்களைத் தடியால் அடித்துத் காயப்படுத்தி, சிறையில் தள்ளும் அளவுக்கு அங்கு எந்த வன்முறையிலும் இளைஞர்கள் ஈடுபடவில்லை. 

சிதம்பரம் காவல்துறையினரின் அத்துமீறிய வன்முறைத் தாக்குதலையும், மதுவிலக்கு கோரிய இளைஞர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்கு சோடித்துச் சிறையில தள்ளியதையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தடியடி நடத்தக் காரணமாக இருந்த சிதம்பரம் உதவி கண்காணிப்பாளர் துரை, ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மீதும், பெண்ணாடம் (முருகன்குடி), சாமிமலை ஆகிய ஊர்களில், தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழிவாங்கும் நோக்கில் போட்டுள்ள சிதம்பரம் வழக்கைக் கைவிட்டு, சிறையில் உள்ள தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன், 
தலைவர், 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை
நாள்: 04.01.2013
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT