உடனடிச்செய்திகள்

Tuesday, March 7, 2017

இராமேசுவரம் மீனவர் பிரிட்சோ படுகொலை : தருமபுரியில் மோடி – சிறீசேனா படங்கள் எரிப்பு!

இராமேசுவரம் மீனவர் பிரிட்சோ படுகொலை : தருமபுரியில் மோடி – சிறீசேனா படங்கள் எரிப்பு!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் நேற்றிரவு (07.03.2017) நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, இன்று (07.03.2017) காலை, தருமபுரி – இந்திய அரசுத் தொலைத்தொடர்பு அலுவலகம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க தருமபுரி செயலாளர் தோழர் க. விசயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரமோடி, சிங்கள அதிபர் சிறீசேனா ஆகியோரது உருவப்படங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
“கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம், மீனவர் படுகொலையைக் கண்டிக்கின்றோம்”, “இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா? இந்திய அரசே முடிவு செய்!”, “பாதுகாப்பு வழங்கு பாதுகாப்பு வழங்கு, தமிழக மீனவருக்குப் பாதுகாப்பு வழங்கு!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. அய்யா தங்கவேலு, முருகேசன், பாவணகுமார், அன்பழகன் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT