உடனடிச்செய்திகள்

Thursday, March 9, 2017

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் கடந்த 07.03.2017 அன்றிரவு நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் சரோன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, நேற்று (08.03.2017) மாலை, திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் முகிலினியன் தலைமை தாங்கினார். மீனவர் துயரத்தை உருவகப்படுத்தும் வகையில் அருட்திரு. மனுவேல் அவர்கள் உணர்ச்சிமிகுப் பாடலைப் பாடி எழுச்சியூட்டினார். மீனவர் பிரட்சோ படுகொலையைக் கண்டித்தும், சிங்கள - இந்திய அரசுகளின் தமிழர் விரோதச் செயல்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் கண்டன உரையாற்றினார். மகளிர் ஆயம் தோழர் வெள்ளம்மாள், வேலுநாச்சியாரின் ஆட்சியின் போது பெண் போராளியாகச் செயல்பட்ட தற்கொடைப் போராளி குயிலியையும் இன்றைய மகளிர் நாளையும் ஒப்பிட்டு, இப்படிப்பட்ட தமிழ் இனத்திற்கு நேர்ந்துள்ள துயரங்களை வெளிப்படுத்தி உரையாற்றினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி அமைப்பாளர் பாவலர் நா. இராசாரகுநாதன், பைந்தமிழ் இயக்க இயக்குநர் புலவர் தமிழாளன், தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, பொறியாளர் முத்துக்குமாரசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மு. தியாகராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT