உடனடிச்செய்திகள்

Saturday, August 7, 2021

வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு சூறையாடாதே! ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!



வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு  சூறையாடாதே!

தமிழ்நாடு அரசுக்குத்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியில், கேசவப்பிள்ளை பூங்கா (கே.பி. பார்க்) குடியிருப்பில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அடித்தட்டு மக்களை தமிழ்நாடு அரசு வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. இந்த கே.பி. பார்க் குடியிருப்பு என்பது, கேசவப்பிள்ளை என்ற நல்லெண்ணம் கொண்ட செல்வந்தர் அரசுக்குக் கொடையாக வழங்கிய மனையில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம், வீடற்ற மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்பாகும். இதில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் மிகப்பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கடந்த அ.தி.மு.க. அரசு, 2016 சூலையில் கே.பி. பார்க் மைதானத்தில் குடிசையமைத்துத் தங்கயிருந்த இம்மக்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப் போவதாகக் கூறி, அதிரடியாக காவல்துறையின் உதவியோடு அம்மக்களை காலி செய்தது. போராட்டம் நடத்திய மக்களிடம் 18 மாதங்களில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு வழங்குவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்தது. அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னும் அவர்களுக்கு வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு 2021 பிப்ரவரியில் யார் யாருக்கு எந்தெந்த வீடு என டோக்கன் கொடுப்பதாக அறிவித்தார்கள். 

டோக்கன் வாங்க முயலும்போது தான், இது இந்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் என்றும், ஒவ்வொரு குடும்பத்தினரும் 1.5 இலட்சம் ரூபாய் பங்குத் தொகை செலுத்தினால்தான் வீடு ஒப்படைக்கப்படும் என்றும் திடீர் நிபந்தனை விதித்தனர். 

அந்த நிபந்தனையின் கீழ் குடியேறிய மக்கள் அரசு கூறிய பங்குத் தொகையை செலுத்த முடியாததால், அந்த ஒன்பது மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டுக்கான இணைப்பையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்தனர். ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடிப்பதற்கும் பல மாடிகளிலிருந்து கீழறங்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட மக்களில் பெரும்பாலோர், அந்தப் பகுதிகளிலேயே தகரக் கொட்டைகளிலோ, வாய்ப்புள்ள சிலர் வேறு இடங்களில் வாடகை வீடுகளிலோ குடியேறினர். இவ்வாறு 864 குடும்பங்கள் அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டு தத்தளிக் கின்றனர். 

இதுபோதாதென்று, இப்போது கடந்த வாரம் அரும்பாக்கத்திலிருந்து அகற்றப்பட்ட குடிசைப்பகுதி மக்கள் ஏறத்தாழ 100 குடும்பத்தினர் இதே கே.பி. பார்க் குடியிருப்புப் பகுதிக்கு விரட்டப் பட்டுள்ளனர்.  
“சிங்காரச்சென்னை” என்ற பெயராலும், “எழில்மிகு சென்னை” என்ற பெயராலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு நகரின் அழகைக் கெடுப்பதாகக் கருதும் ஆட்சியாளர்கள், இவர்களை மட்டுமே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஊரறிய உலகறிய சென்னையின் முக்கிய நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் கட்டடங்களையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் கட்டியிருக்கிற பெரிய ஆக்கிரமிப்பாளர்களை கண்டு கொள்ளாமல் அந்த ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவதற்கு பல்வேறு விதித் தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். 

தாராளமய – உலகமயத்தின் இன்னொரு சூறையாடலாக இது நிகழ்ந்து வருகிறது. இதனை இனியும் அனுமதிக்க முடியாது! மார்வாடிகள், குசராத்திகள், பனியாக்கள் என தமிழ்நாட்டிற்கு வந்தவர்களெல்லாம் இதே சென்னையில் வளமாய் வாழ்ந்து கொண்டிருக்க, சொந்த மண்ணின் தமிழ் மக்களோ தமிழ்நாடு அரசாலேயே இப்படி அலைக்கழிக்கப்படுவது வேதனையானது!

எனவே, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே குடியிருப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள கே.பி. பார்க்கின் 864 குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இந்தியத் தலைமையமைச்சரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு மக்களிடமிருந்து தலா 1.5 இலட்சம் பங்குத் தொகை என்ற நிபந்தனையை இரத்து செய்ய வேண்டும். அதை வழங்கிய வேண்டிய சட்டநிலைமை இருந்தால், அந்தப் பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். துண்டிக்கப்பட்ட லிப்ட் மற்றும் குடி தண்ணீர் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை குடிசை மாற்று வாரியத் திட்டத்தோடு இணைக்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT