உடனடிச்செய்திகள்

Wednesday, September 18, 2019

நீலகிரியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் நீரை தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான திட்டம் வரையறுக்க நீலகிரியில் நேரில் கள ஆய்வு! பெ. மணியரசன்



நீலகிரியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் நீரை
தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான திட்டம் வரையறுக்க
நீலகிரியில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேரில் கள ஆய்வு!


தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரளா வழியாகச் சென்று கடலில் கலக்கும் பாண்டியாற்றின் நீரை, தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கும் பணிக்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் நீலகிரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரியில் கடந்த ஆகத்து மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துயர் துடைப்புப் பணிகள் வழங்கும் நிகழ்வில் 16.09.2019 அன்று மாலை பங்கேற்ற ஐயா மணியரசன் அவர்கள், நேற்று (17.09.2019) நீலகிரி மாவட்டத்தின் முகாமையான சிக்கல்கள் குறித்து ஆய்ந்தறிய பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மகளிர் ஆயம் தலைவர் திரு. ம. இலட்சுமி அம்மாள், தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, கூடலூர் த.தே.பே. தோழர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் வந்தனர்.
ஓய்வு பெற்ற மின்துறை கண்காணிப்பாளர் திரு. சி.ஆர். கிருஷ்ணன் மற்றும் மங்குலி கிராமம் திரு. எம்.எஸ். ஆண்டி ஆகியோர் தேவர்சோலையிலுள்ள பாடாந்துறை, வேடன் வயல் - செளுக்காடி, மங்குலி, கொங்கம்வயல், புத்தூர் வயல், மறுப்பமுடி மலை ஆகிய பகுதிகளுக்கு ஐயா மணியரசன் அவர்களை நேரில் அழைத்துச் சென்று அங்குள்ள நீர்நிலைகள் குறித்து விளக்கினர். மகிழுந்து பயணிக்க முடியாத பல மலைப் பகுதிகளுக்கு ஜீப்பில் சென்றனர்.
கூடலூரில் ஐயா பெ. மணியரசன் அவர்கள வரவேற்ற நாம் தமிழர் கட்சி கூடலூர் செயலாளர் திரு. கேத்தீசுவரன் தலைமையிலான தோழர்கள், ஓவேலி – சூண்டி பகுதி வழியாக சந்தனமலை சென்று எல்லமலையிலிருந்து பாண்டியாறு உருவாகும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஐயா பெ. மணியரசன் அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தனர். கூடலூர் எழுத்தாளர் சி. கந்தையா அவர்கள் தாம் எழுதிய நூலை ஐயா பெ. மணியரசன் அவர்களிடம் நேரில் வழங்கிப் பேசினார்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் மற்றும் அவர்களது தோழர்கள், நீலகிரி மாவட்டத்தின் சிக்கல்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டங்களையும், அரசுக் குறிப்பு ஆவணங்களையும் ஐயா பெ. மணியரசன் அவர்களிடம் நேரில் வழங்கிக் கலந்துரையாடினார்.
பாண்டியாற்றின் நீரை தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்தும் வகையிலான விரிவான திட்டம் குறித்த ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT