உடனடிச்செய்திகள்

Friday, December 25, 2020

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்! - ஐயா பெ.மணியரசன் இரங்கல் செய்தி!


தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

தமிழறிஞர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் 24.12.2020 அன்று பிற்பகல் திருநெல்வேலி மருத்துவமனையில் காலமான செய்தி மிகவும் துயரம் அளிக்கிறது. சமகாலத் தமிழ்ச் சமூக ஆய்வில் தமிழர் பண்பாட்டில் நிலவும் பல்வேறு கூறுகளைத் துல்லியப்படுத்தி அவற்றின் சிறப்புகளையும் தேவைகளையும் விளக்கியவர் ஐயா தொ.ப. அவர்கள். வட்டாரத் தெய்வ வழிபாடுகளில் உள்ள தனித்தன்மை, அவற்றின் ஆரிய ஆன்மிக எதிர்ப்பு, தமிழர் வீரம், தமிழர் பெருமிதம் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். 

தமிழ்த்தேசியச் சிந்தனைகளைத் பல்வேறு நூல்களில் எடுத்துரைத்தார். தமிழ்வழிக் கல்விக்கான போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத வெறியர்கள் நடத்திய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து கண்டித்து வந்ததுடன், ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தார். அதற்காகத் தமிழ்நாட்டில் நடந்த சனநாயக இயக்கங்களில் பங்கு கொண்டார்.

மிகச் சிறந்த ஆய்வாளராகவும், பேராசிரியராகவும் விளங்கிய தொ.ப. அவர்கள் மிகச் சாதாரணமான மனிதர்களோடும், இளைஞர்களிடமும் அன்புடனும் சமத்துவ மனநிலையுடனும் பழகி வந்த பண்பாளர். தொ.ப அவர்கள் கடந்த சில நாட்களாகவே நலக்குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் திடீரென இயற்கை எய்தியது பேரதிர்ச்சியைத் தருகிறது. 

அவர் மறைந்துவிட்டாலும் அவர் தந்திருக்கும் ஆய்வு நூல்கள் தமிழர்களுக்குத் தொடர்ந்து வெளிச்சம் தரும், ஊக்கம் தரும்.  தொ.ப. அவர்களின் மறைவிற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT