உடனடிச்செய்திகள்

Thursday, July 4, 2013

சாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கண்டனம்




சாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கண்டனம்


வன்னிய சமூகப் பெண் திவ்யாவை மணந்த தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞன் இளவரசன் திவ்யா தன்னோடு சேர்ந்து வாழ முடியாது என நீதிமன்றத்தில் அறிவித்து செய்தியாளர்களிடமும் தெரிவித்து விட்டதால் மனமுடைந்து போய் தொடர்வண்டி முன் பாய்ந்து 4.7.2013 மாலை தர்மபுரியில் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வாழ வேண்டிய ஒரு இளைஞன் சாதி ஆதிக்க வெறி அரசியலால் உயிர்பலி ஆகியுள்ளார்.

மரணமடைந்த இளவரசன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இளவரசனின் மரணத்திற்குக் காரணமான சாதி வெறி அரசியலையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இளவரசனின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற ஐயமும் எழுப்பப்படுகிறது. அவ்வாறு இருந்தால் உடனடியாக கொலைகாரர்களையும் அவர்களுக்கு பின்னணியாக இருப்பவர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சாதி மறுப்புத் திருமணங்கள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட சாதி ஆணுக்கும் திருமணம் நடப்பது புதிதல்ல. பல்வேறு கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்து வருவதுதான். அந்த வகையில் வன்னிய சாதியில் பிறந்த திவ்யாவும், பறையர் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ்நாட்டில் நடந்திறாத அதிசயமும் அல்ல.

ஆனால் மருத்துவர் இராமதாசு தலைமையில் இயங்கும் வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும், தங்களது சொந்த பதவி அரசியலுக்காக இதனை சாதி வெறி அரசியலாக பெரிதுபடுத்தி எதிர்த்தனர். மருத்துவர் இராமதாசு இந்த வகை காதலை நாடகக் காதல் என்று திரித்துப் பரப்புரை செய்தார்.

இத்திருமணத்தை சாட்டாக வைத்து தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய், நத்தம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் திட்டமிட்ட முறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு எதிரான கொடிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்தக் கலவர அரசியலை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தும் முயற்சியில் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டது.

இந்நிலையில் ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், திவ்யா முதல் நாள் தான் இளவரசனை நேசிப்பதாகவும் அதே நேரத்தில் தனது தந்தையின் சாவும், தனது தாய் மற்றும் சகோதரனின் நிலையும் பெரிய மனக் குழப்பதை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால் தான் தன் தாயாருடன் செல்வதாகவும், தாயார் ஏற்றுக்கொண்ட பிறகு இளவரசனுடன் இணைந்து வாழ விரும்பதாகவும் நீதிபதியிடம் கூறியதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அடுத்த நாள் (3.7.2013) அன்று நீதிமன்றம் வந்த திவ்யா முதல் நாள் தாம் அவ்வாறு கூறவில்லை என்றும், இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையென்றும் தனது தந்தையார் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தில் அந்த இடத்தில் நிரப்பும் முயற்சியில் ஈடுபட போவதாகவும் கூறினார்.

வெளி அழுத்தம் காரணமாக திவ்யாவிடம் ஏற்பட்ட இந்த மனமாற்றம் இளவரசனை பாதித்திருக்கக் கூடும். அதன் காரணமாகவே இந்த கொடிய முடிவை அவர் எடுத்திருக்கக்கூடும். (இளவரசனின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புண்டு என்ற கருத்தில் இதனை கூறுகிறேன்)

சாதி ஆதிக்க வெறி அரசியல் கடைசியில் ஒரு எளிய இளைஞனை பலி வாங்கி விட்டது.

இந்த மரணத்திற்குப் பிறகாவது பாட்டாளி மக்கள் கட்சி தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் திட்டமிட்டு நாடகக் காதலில் ஈடுபடுவதாக செய்த பரப்புரை உண்மை நிலைக்கு மாறானது என்பதை உணர வேண்டும். ஏனெனில் இளவரசனின் காதல் நாடகமென்றால் அவனுக்கு இந்த முடிவு நேர்ந்திருக்காது.

இன்னொன்று, இந்தச் சிக்கலில் இந்த காதல் திருமணத்தை ஆதரித்தும் சாதி ஆதிக்க அரசியலை எதிர்த்தும் பரப்புரையிலும் போராட்டங்களிலும் ஈடுபட்ட சனநாயக அமைப்புகள் அனைத்தும் இளவரசன் -திவ்யா இணையரை பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு உறுதியான ஏற்பாடுகள் எதையும் செய்ய தவறிவிட்டோம் என்பதை தன்னாய்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும். “வீடு இடிக்கப்பட்டு தங்குவதற்கு பாதுகாப்பான இடமின்றி ஊர்ஊராக அலைந்தோம்” என இளவரசன் கூறியிருந்தது நிலைமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

இனி எதிர்காலங்களில் இவ்வாறான தவறு ஏற்பட்டுவிடக் கூடாதென சாதி ஆதிக்கத்திற்கெதிரான சனநாயக இயக்கங்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாதி வெறி அரசியலுக்கு பலியான இளைஞன் இளவரசன் குடும்பத்திற்கு மீண்டும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



Wednesday, July 3, 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதைக் கைவிட வலியுறுத்தி கோட்டையை நோக்கிக் கோரிக்கைப் பேரணி



தமிழ்வழி அரசுப் பள்ளிகளை அகற்றிவிட்டு, ஆங்கில வழிப் பள்ளிகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஆகத்து 8 அன்று சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்தப்படும் என தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அறிவித்தார்.

பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அங்கம் வகிக்கும் தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில், தமிழ்வழிப் பள்ளிகளை அகற்றும் தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைத் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் 01.07.2013 திங்கள் அன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா,   தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சைதை திரு. கே.வி.சிவராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனிபா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.


கூட்டத்தின் முடிவில், பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.


1.   தமிழக அரசு தமிழ்நாடெங்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கண்டித்தும் அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கடந்த 28.05.2013 அன்று சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் வாயிலில் எழுச்சியோடு முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டப்போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து அதன்படி 17.06.2013 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருட்டிணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை, மதுரை, இராசப்பாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 இடங்களில் எழுச்சியோடு ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.


2.   மூன்றாவது கட்டப் போராட்டமாக 08.08.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கோட்டையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.


அதற்குமுன் ஒருமாத காலத்தில் தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் உட்பட பரப்புரை கூட்டங்கள் நடத்த வேண்டும். வீடு வீடாக கோரிக்கை விளக்கத் துண்டறிக்கை வழங்க வேண்டும். இப்பணிகளை அந்தந்த மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் உள்ள நமது தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உள்ள அமைப்பினரையும் மற்றும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளையும், இன, மொழி உணர்வாளர்களையும், சனநாயக ஆற்றல்களையும் இணைத்துக் கொண்டு இப்பணிகளைச் செய்ய வேண்டும். கோட்டைப் பேரணிக்கு முன்பாக இப்பணிகளை சிறப்பாகச் செய்து பேரணிக்குப் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்ட வேண்டும்.


3.   தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தோழர் பெ.மணியரசன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக ஓர் இயக்கத்திற்கு ஒருவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்

இதனைத் தொடர்ந்து, 02.07.2013 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு. தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.  

Monday, July 1, 2013

“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்கள் பக்கம் இருக்க வேண்டும்”- தோழர் பெ.மணியரசன் பேச்சு!

“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்கள் பக்கம் இருக்க வேண்டும்” என இயக்குநர் மணிவண்ணன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசினார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் தமிழ்த் தேசியப் பற்றாளர் இயக்குநர் தோழர் மணிவண்ணன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 29.6.2013 அன்று மாலை சென்னை, வடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் வெ.சேகர், ஓவியர் கு.புகழேந்தி, இயக்குநர் .கெளதமன், இயக்குநர் .செந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசிய உணர்ச்சிப்பாவலர் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் மணிவண்ணன் அவர்களது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

முன்னதாக, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழக அமைப்பாளர் தோழர் உதயன் வரவேற்புரையாற்றிய பின், இயக்குநர் மணிவண்ணன் அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை உள்ளடக்கி கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய குறுநூல் வெளியிடப்பட்டது. நூலை தோழர் பெ.மணியரசன் வெளியிட, இயக்குநர் மணிவண்ணன் அவர்களது மகன் திரு. இரகுவண்ணன், மகள் திருமதி ஜோதி ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில், தலைமையுரையாற்றிய தோழர் பெ.மணியரசன் பேசியதாவது:

“தமிழ்த் தேசியப் பற்றாளரும் இயக்குநருமான தோழர் மணிவண்ணன் அவர்களது இறப்பைப் பற்றி பேசும் துர்பாக்கிய நிலையில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஒரு குறுநூலாக்கி இங்கு வெளியிட்டுள்ளார் கவிஞர் கவிபாஸ்கர். இயக்குநர் செந்தமிழன் நம் சமகால ஆளுமைகளை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என்று பேசினார். அப்பணியை இந்நிகழ்வை முன்னிட்டு கவிஞர் கவிபாஸ்கர் செய்துள்ளார்.

கலைத்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட துறை என்று இங்கு சிலர் பேசி வருகின்றனர். அது உண்மையல்ல. பணம் சம்பாதித்துக் குவிப்பதே தமது இலட்சியம் என்று செயல்படுகின்ற சிலர், தான் சார்ந்துள்ள இனத்துக்கு, தேசத்துக்கு எதையும் செய்ய விரும்பாத நிலையில், அந்த போலித்தனத்தை மறைப்பதற்காக ‘கலைத்துறையில் அரசியல் கூடாது’ என்று பேசுகின்றனர். அந்த போலித்தனத்தைத் திரை கிழித்தவர் இயக்குநர் மணிவண்ணன் ஆவார்.

கலைப்படைப்பாளிகள் தான் ஒடுக்குமுறைக்கு எதிராக, கொடுமைகளுக்கு எதிராக கொதித்து எழக்கூடிய சமூகப்பணியை முன்னின்று செய்ய வேண்டியவர்கள். புகழ் பெற்ற கலைஞரான சார்லி சாப்ளின், ஹிட்லரின் பாசிசத்தை எதிர்த்து, அதை அம்பலப்படுத்தி ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்றொரு படத்தை தந்தார். முதலாளியத் தொழில் வளர்ச்சி மனிதர்களை இயந்திரமயமாக்குகின்றது என்பதை அம்பலப்படுத்தி ‘தி மார்டன் டைம்ஸ்’ என்றொரு கலைப் படைப்பைத் தந்தார். நடுநிலை என்று நாடகமாடாமல், பாசிச எதிர்ப்பின் பக்கம் உறுதியாக நின்றார் சார்லி சாப்ளின்.

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து நாடு தனியாகப் பிரிய 2014ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. அந்த வாக்கெடுப்பு குறித்த செய்தி வரும்போதெல்லாம், புகழ்பெற்ற “ஜேம்ஸ் பாண்ட்” பட நடிகர் சீன் கானரி, அந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க வருவாரா என்று தனியே செய்தி வெளியிடுவார்கள். ஸ்காட்லாந்து நாட்டுக்காரரான சீன் கானரி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஸ்காட்லாந்து நாடு எப்போது விடுதலை பெற்றுத் தனிநாடாக மலர்கிறதோ அப்போது தான் நான் தாய்நாடு திரும்புவேன் என்று அறிவித்து அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

இப்படி உலகெங்கும் கலைப் படைப்பாளிகள் சமூக உணர்வோடு, தான் சார்ந்துள்ள தேசத்தின், இனத்தின் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இது போன்ற நிலை இன்னும் பெரிய அளவில் வரவில்லை.

தமிழ்நாட்டில் கொள்கை, இலட்சியம் எதுவுமில்லாமல் திரைத்துறையில் பெற்ற பிரபலத்தை வைத்து யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தேர்தல்களில் பங்கெடுக்கலாம். ஆனால், அவர்கள் இலட்சிய அரசியல் மட்டும் செய்யக்கூடாதென்பர். இயக்குநர் மணிவண்ணன் அவர்கள், மக்களுக்கான இலட்சியத்தை முன் வைத்து நின்றவர். மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக அமைப்பு ஆகிய இலட்சியங்களுக்காக நம்மோடு நின்றவர். இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக, தமிழ்நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என அவர் மனம் கொதித்தது. சிங்கள இனவெறியர்கள் தமிழீழத்தை ஆக்கிரமித்து, இனப்படுகொலை செய்ததை எதிர்த்து அவர் மனம் கொதித்தது.

இங்கு பேசிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள், ஒருவன் முற்போக்கானவன் என்றால் அவன் சார்ந்துள்ள இனம், தேசம் அடிமைப்பட்டுக் கிடப்பதை எதிர்த்து அவன் குரல் கொடுக்க வேண்டும் என்றார். அது உண்மையே! அவரவர் சார்ந்துள்ள இனத்தின் விடுதலையை, தேசத்தின் விடுதலையை எவர் ஆதரிக்கின்றாரோ, அதுவே அவரது சமூக உணர்வின் அடிப்படையாகும். முற்போக்கானவர் என்பதற்கான முதற்படியாகும்.

அதன்வழியாகத் தான் சமூக சமத்துவத்திற்கான மார்க்சியக் கருத்தை ஏற்க முடியும். மார்க்சியம், பெரியாரியம் எதுவானாலும் தமிழ்நாட்டின் இன்றையத் தேவைக்கு – அவற்றிலிருந்து எவற்றை எடுத்துக் கொள்ளலாமோ அவற்றை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்காகத் தத்துவமே தவிர, தத்துவத்திற்காக மக்கள் அல்ல.

தமிழீழம் மட்டுமின்றி, இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்து தமிழ்நாடு விடுதலையடைவதையும் இயக்குநர் மணிவண்ணன் ஆதரித்தார். அதற்காக நம்முடன் இணைந்தும் இயங்கினார். கடவுள் மறுப்புக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ‘கடவுள்’ என்றொரு படத்தைப் பற்றி இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சிலோகித்துப் பேசியிருக்கிறார். மனம் ஒவ்வாத பாத்திரத்தை சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறிய அவர், கடவுள் படத்தில் நடித்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரது இயக்கத்தில் வெளியான ‘இனி ஒரு சுதந்திரம்’ என்ற படம் என்னை மிகவும் கவர்ந்த படைப்பாகும். அவரது குடும்பத்திலும் அவர் சமூகம் சார்ந்த கருத்துகளைப் பேசினார். 

2008ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக இயக்குநர் சீமானும், தோழர் கொளத்தூர் மணியும், நானும் கைது செய்யப்பட்டோம். அப்போது, மாவட்ட நீதிமன்றம் பிணை மறுத்துவிட, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அடிக்கடி கோவை சிறைக்கு வந்து சந்தித்தார் மணிவண்ணன். எங்களைப் பிணையில் கொணரப் பெரும்பாடுபட்டார்.

அதன்பிறகு, இயக்குநர் சீமானை மட்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போது, அதனை எதிர்த்து நாங்கள் இயக்கம் நடத்தினோம். அதற்கு நிதியுதவி செய்து அதற்காக பாடுபட்டவர் இயக்குநர் மணிவண்ணன். எங்களது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் வளர்ச்சியிலும் அக்கறையுடன் பங்கெடுத்து அவ்வப்போது நிதியுதவிகள் செய்தார்.

இயக்குநர் மணிவண்ணன் என்னிடம் அடிக்கடி, எப்படி கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு இங்கிருப்பவர்கள் இனவிடுதலையை எதிர்க்கின்றனர் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், தேச விடுதலையின் பக்கம், இன விடுதலையின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால், இங்கிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம்.

1970களில் நானும் அவர்களோடு(சி.பி.எம்.) இயக்கத்தில் அங்கமாக இருந்த போது, இதே வீதிகளில் ‘வியத்நாம் யுத்தம் எங்கள் யுத்தம் வியத்நாம் இரத்தம் எங்கள் இரத்தம்’ என முழக்கம் எழுப்பினோம். அது தவறில்லை. வங்க தேசத்தை விடுவிக்க இந்திய இராணுவம் கொண்டு போரிட்ட போது, அதை அவர்கள் வரவேற்றனர். அது தவறில்லை. ஆனால், தமிழீழ விடுதலை என்று வரும்போது, இன்னொரு நாடான இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினைக்கு நாம் போராடலாமா என்று கேட்கின்றனர். ஈழ யுத்தம் எங்கள் யுத்தம் ஈழ இரத்தம் எங்கள் இரத்தம் என்று நாம் முழக்கமிட்டால் அந்த இடதுசாரிகளின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் அலறுகிறார்கள். இதற்குப் பெயர் கம்யூனிசமா அல்லது பார்ப்பனியமா? பார்ப்பனியம் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும். அதை கம்யூனிசத்தின் பேரில் இவர்கள் செய்கிறார்கள்.

புரட்சியாளர் லெனின், ஒவ்வொரு கருத்துக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் இருக்கிறது என்றார். பின்னாளில், மாவோ ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் முத்திரை இருக்கிறது என்று சொன்னார். அதை நாம், இந்திய சூழலில், இங்கு ஒவ்வொரு கருத்துக்குப் பின்னாலும் வர்ணாசிர தர்ம முத்திரை இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அதற்கேற்பவே, கம்யூனிஸ்ட்டுகள் என சொல்லிக் கொண்டு இங்கு இனவிடுதலையை எதிர்த்து, இனத்துரோகம் புரிந்து கொண்டுள்ளனர். தேச விடுதலையை ஏற்காத அவர்கள், உண்மையில் கம்யூனிஸ்ட்டுகளே அல்ல.

கர்நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதிய முதல்வர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள கலைப் படைப்பாளிகளை, கன்னட மொழி அறிஞர்களைச் சந்தித்து ஆசி பெறுகின்றனர். பொதுவான கலைப் படைப்பாளிகளாக அங்கு பலர் இன உணர்வுடன் இருக்கின்றனர். தமிழகத்தில் அவ்வாறான நிலைமை இல்லை. அப்படியொரு பொதுவான தமிழ் உணர்வுமிக்கப் படைப்பாளிகளை நாம் உருவாக்க வேண்டும். படைப்பாளிகள், சரியை சரி என்றும் தவறை தவறென்றும் எதற்கும் அஞ்சாமல் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ்த் திரைத்துறையில் தமிழ் உணர்வுடன் செயல்படுபவர்கள் மிகவும் குறைவு. அதற்கு இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் அந்த முன்னோடிகளில் ஒருவர். இயக்குநர் வி.சேகர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, திரைத்துறையிலுள்ள உணர்வாளர்களுக்கும், தமிழ்த் தேசிய இன அமைப்புகளுக்கும் ஓர் உறுதியான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அதுவே இன விடுதலைக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் பயன்படும்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களது இழப்பு தமிழ்த் திரைத்துறைக்கு மட்டுமின்றி, தமிழ்த் தேசியத்திற்கும் பேரிழப்பாகும். அவருக்கு மீண்டும் எனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார். நிறைவில், கவிஞர் கவிபாஸ்கர் நன்றி கூறினார். இந்நிகழ்வில், திரளான தமிழ் உணர்வாளர்களும், திரைத்துறையினரும் கலந்து கொண்டனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சரவணன்)

Monday, June 17, 2013

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாடடம்!

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் இன்று(17.06.2013) தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில், காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் திரு. மு.பூமிநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்க மாநில பொருளாளர் திரு. மு.ரெ.மாணிக்கம், தோழர் பரிதி(தமிழ் தமிழர் இயக்கம்), திரு. கோ.செய்யது இப்ராகிம்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் கதிர்நிலவன்(தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கம்), திரு. வெற்றிச்செல்வன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் குமரசன் (த.பெ.தி.க), தோழர் முகில் அரசன்(தமிழ்ப்புலிகள்), தோழர் மணி தாபா (தமிழ்நாடு மக்கள் கட்சி), தோழர் மில்ட்டன் (தமிழ்நாடு மாணவர் இயக்கம்), திரு. பொன்மாறன்(தமிழ்க் காப்புக் கழகம்), தமிழியம் இதழாசிரியர் திரு. தமிழ்மகன், மக்கள் உரிமைப் பேரவை வழக்குரைஞர் சு.அருணாச்சலம், சமநீதி வழக்குரைஞர் சங்கம் திரு. இராசேந்திரன், அனைத்துக் கல்லூரி மாணவர் இயக்கம் திரு. முகிலன், தோழர் செல்வம் (ஆதித்தமிழர் பேரவை), மகளிர் ஆயம் அமைப்புக்குழுத் தோழர் மேரி, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சென்னை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன் தலைமையேற்றார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. ஆனூர் செகதீசன் தொடக்கவுரையாற்ற, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, சேவ் தமிழஸ் இயக்க் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தோழர் தியாகு(த.தே.வி.இ.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். புலவர் பா.இறையெழிலன் நன்றி கூறினார். இவ்வார்ப்பாட்டத்தில் திரளான மகளிரும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். தஞ்சை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில், 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாவரம் திரு. சி.முருகேசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, ம.தி.மு.க. பொருளாளர் திரு. துரை.சிங்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழக அமைப்பாளர் திரு. அரங்க குணசேகரன், திரு. ம.இரவிச்சந்திரன்(தமிழக வாழ்வுரிமைக் கட்சி), மனித நேய மக்கள் கட்சி திரு. ஜெ.ஜெலந்தர், தாளாண்மை உழவர் இயக்கம் திரு. கோ.திருநாவுக்கரசு, முனைவர் இளமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிருட்டிணகிரி கிருட்டிணகிரி பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. வேலுமணி, ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு. சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூர் நகரச் செயலாளர் தோழர் முருகப்பெருமாள், தந்தை பெரியார் தி.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் ருத்ரன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவன். தமிழர் தேசிய இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் முருகேசன், தமிழ உழவர் முன்னணி இராயக்கோட்டைக் கிளைச் செயலாளர் தோழர் தூருவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவள்ளூர் திருவள்ளூர் தொடர்வண்டி நிலையம் அண்ணா சிலை அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் கஜேந்திரன், திரு. குமரி நம்பி(சுதேசி இயக்கம்), திரு. ஆ.இராஜா திருநாவுக்கரசு (தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு), தோழர் மு.பெ.முத்தமிழ்மணி(தமிழர் தேசிய இயக்கம்), தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் திரு. வீரபாண்டியன், தமிழர் பேரரசுக் கட்சி வழக்கறிஞர் கணேசன், மனித உரிமைக்கான மக்கள் கூட்டம் தோழர் சு.ப.செம்பாண்டியன், புலவர் தமிழேந்தி(மா.பெ.பொ.க.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திரு. சு.நாச்சியப்பன், மனித நேய மக்கள் பாசறை திரு. நீலக்கண்டன், தமிழ்த் தேசியக் கூட்டணி வழக்கறிஞர் பா.குப்பன், தமிழ்நாடு மக்கள் கல்விக் கூட்டமைப்பு திரு. பசுமை மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாட்டாமை கட்டிடம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழ்க் கழக சேலம் மாவட்டத் தலைவர் திரு. வை.நா.ஆடல் அரசு தலைமையேற்றார். திரு. ஆனந்தராஜ்(ம.தி.மு.க.), தமிழக எல்லைப் போராட்ட தியாகிகள் சிங்கம் திரு. ரெ.ரெத்தினம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் திரு. கே.சி.இளந்திரையன், உயிர்மைத் தமிழ்ச் சங்கம் திரு. சொல்லரசர், திரு காமராசு (ஆயுத எழுத்து தமிழ்ச் சங்கம்), திரு பூங்குழலி (தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம), திரு. அண்ணாதுரை (அம்பேத்கர் மக்கள் இயக்கம்), திரு. முரளி (உழைக்கும் மக்கள் முன்னணி), தோழர் தமிழியன் (புரட்கிசர மக்கள் முன்னணி), தோழர் இளமாறன்(த.ஓ.வி.இ.), திரு. சோலை இராஜா (தமிழர் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே.ஆனைமுத்து சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் அமைப்பாளர் தோழர் ச.பிந்துசாரன் நன்றியுரைத்தார். இதே போன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி, தமிழக அரசு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Saturday, June 15, 2013

“கோபுரம் சாய்ந்தது” - இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு தோழர் பெ.மணியரசன் வீரவணக்கம்!


“கோபுரம் சாய்ந்தது”
இயக்குநர் மணிவண்ணன்
அவர்களுக்கு வீரவணக்கம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை


இயக்குநர் மணிவண்ணன் அவர்கள், அன்று மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி இடிபோல் தாக்கியது. அவர் இயக்கிய முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, ‘பாலைவன ரோஜாக்கள்’, நூறாவது நாள், அமைதிப்படை என்று சிறந்தப் படங்கள் வழங்கி, கோபுரம் போல் உயர்ந்தார். ‘இனி ஒரு சுதந்திரம்’ மிகவும் கருத்தானப் படம்.

இயக்குநர் என்ற நிலையில் இருந்து கொண்டே பிறர் இயக்கத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். படங்களுக்கு நேரம் கொடுக்க முடியாமல் அவர் திணறிய ஆண்டுகளும் உண்டு.

திரைத்துறையில் எவ்வளவு உச்சத்திற்குப் போனாலும், பழக்கத்தில் பழையத் தோழராகவே இருந்தார். மார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த்தேசியம் ஆகியவற்றை உள்வாங்கி, அத்திசையில்  மேடைகளில் கருத்துகள் வழங்கி வந்தார். தம் மகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார். அவரே, காதல் திருமணம் - சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் தான்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட பின், இனிமையான தோழர்களாகவே பழகி வந்தோம். தமிழர் கண்ணோட்டம் இதழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தார். ஒருமுறை இதழ் வளர்ச்சிக்கென்று நிதி வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் கேட்டேன். வீட்டிற்குள் சென்றவர் பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார்.

தமிழர் கண்ணோட்டம் வளர்ச்சி நிதிக்காக முனைவர் புதுவை ராஜூ அவர்கள் இயக்கிய ‘நந்தன் கதை’ நாடகத்தை தஞ்சையில் போட்டோம். அதற்கு வந்து தலைமை தாங்கினார். போக்குவரத்து செலவுகூட வாங்கிக் கொள்ளவில்லை. அதே போல் மறுமுறை புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி தஞ்சையில் நடத்தினோம். அதற்கும் வந்து உரையாற்றி சிறப்பித்தார்.

தஞ்சையில் த.தே.பொ.க. சார்பில் பொங்கல் விழா நடத்தினோம். அதில் நடந்த பட்டிமன்றத்திற்கு, நடுவர் மணிவண்ணன்; ஓரணிக்குத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். இன்னொரு அணிக்குத் தலைவர் பேராசிரியர் அப்துல் காதர். அந்தப் பட்டிமன்றம் எவ்வளவு சிறப்பாக இருந்தி ருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். கூடியிருந்த பெருங்கூட்டம் ஆரவாரம் செய்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தீவிர அக்கறை செலுத்தியவர் தோழர் மணிவண்ணன். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது பெரு மதிப்புக் கொண்டவர். எந்த நெருக்கடிக்காகவும் அவர் ஈழஆதரவுக் கருத்துகளை மாற்றிக் கொள்ள வில்லை.

தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழின உணர்வும் தமிழ்த் தேசிய உணர்வும் உள்ளவர்கள் குறைவு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மணிவண்ணன். அந்த கோபுரம் சாய்ந்துவிட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் சார்பிலும் தோழர் மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர்,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. 

இடம்: தஞ்சை
நாள்: 15.06.2013 

Wednesday, June 12, 2013

“காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


"காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்"

தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் திரு. கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்.

 

    ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து  தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 10.30 க்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் திரு, சி. ஆறுமுகம் தலைமையேற்றார்.


காவிரி நீரை மறுத்துவரும் கர்நாடக அரசுக்கு எதிராகவும்,  காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்ககள் எழுப்பப்பட்டது. தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட தலைவர் திரு அ.கோ.சிவராமன், முன்னிலை வகித்தார்.  பொறுப்பாளர்கள், திரு தங்க.கென்னடி, பொறியாளர் என்.ஜெயபாலன் , கோ.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.


நிறைவாக தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி. வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உலக ஆற்று நீர் சட்டங்களையோ நீதிகளையோ, நீதிமன்ற உத்தரவுகளையோ மதிக்காத கர்நாடக அரசின் அடாவடித்தனத்துக்கு இந்திய அரசு துணை நிற்கிறது.   தமிழகத்துக்குரிய காவிரி நீரை இழந்து தமிழக உழவர்கள் கையறு நிலையில் உள்ளனர். தொடர்ந்து காவிரி நீரின்றி நிலத்தடி நீர் குறைந்து வருவதால்   காவிரி மாவட்ட மக்களின் குடிநீரும் கேள்விக்குறியாய் உள்ளது.


இந்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி அணைகளின் நீர் நிர்வாகப் பொறுப்பை  அதனிடம் ஒப்படைத்து, தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தனது சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு மன்றம் செல்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. உடனடியாக தமிழகத்தில்  அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.  முதலமைச்சரே முன் முயற்சி எடுத்து   காவிரி எழுச்சி நாள் அறிவித்து உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டும் "என்று பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  நிறைவாக திரு,அ.மதிவாணன் நன்றி கூறினார்.



Sunday, June 9, 2013

அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்!

"தமிழக அரசே! அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி 
மெட்ரிகுலேசன் பள்ளிகளாக மாற்றாதே!"
தமிழகமெங்கும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில்
17.07.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என்பதை வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. 

இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்மொழி நம் தாய்மொழி மட்டுமன்று; தமிழ்நாட்டின் ஆட்சிமொழி; தமிழகத்தின் தேசிய மொழி! தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களிலிருந்து தமிழ்மொழியை அப்புறப்படுத்துவதில், தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுடன் தமிழக அரசும் போட்டி போட முனைந்துள்ளது.

2013-2014 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைப் புதிதாகத் தொடங்குகிறது தமிழக அரசு. கணிதம், அறிவியல், சமூகவியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்பிக்க உள்ளது.

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பானது எதிர்காலத்தில் கல்வி, ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தமிழைப் பயன்பாடற்ற மொழியாக்கிவிடும்.

தமிழை இழந்த பின் தமிழ்மக்கள் தங்கள் மண்ணிலேயே அயலார்க்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைகளாகி, ஆட்சி உரிமையை இழந்த உதிரிக் கூட்டமாக மாறிவிடுவர்.

தாய்மொழி வழியில் கற்போர்தாம் சொந்த சிந்தனை வளர்ச்சி பெறுவர்; புதியன படைப்பர் என்று குழந்தை உளவியல் மற்றும் கல்வி உளவியல் அறிஞர்கள் உலகுதழுவிய அளவில் வரையறுத்துள்ளனர். அயல்மொழிவழி படிப்பது நெட்டுருப்போட்டு மதிப்பெண் பெறும் தன்மையைத்தான் உருவாக்கும்.

வளர்ச்சியடைந்த பிரான்சு, செர்மனி, சப்பான், ரசியா, சீனா போன்ற நாடுகளிலும் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆங்கில வழிக் கல்வி இல்லை. அந்தந்த நாட்டின் தாய் மொழிக் கல்வியே இருக்கிறது.

தமிழ்வழிக்கல்வி மூலம் தான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இனம் அறிவிலும் வணிகத்திலும் செழித்திருந்தது!

அயல்மொழித் திணிப்பைத் தடுக்க - தாய்மொழியைக் காக்க, போராடி முந்நூறு பேர்க்கு மேல் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானதும், பத்துப் பேர்க்கு மேல் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்ததும் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்த வரலாற்றுப் புகழ்மிக்க ஈகமாகும்.

தமிழக அரசுக்கு நாம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

1.   அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தைப் போக்கப் பின் வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

அ. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாகவும் (language) கட்டாயப் பயிற்று மொழியாகவும் (Medium of Instruction) இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். அரசு ஆணை(G.O.) போடுவது கூடாது.

ஆ. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அல்லது பிற மொழியை மொழிப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்.

2.   ஒன்று முதல் +2 வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் எண்பது விழுக்காடும், உயர்கல்விச் சேர்க்கையில் எண்பது விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

3.   அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர்கள் அமர்த்த வேண்டும்.

4.   பத்து மற்றும் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகமாகக் காட்டி, கல்விக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்காக தனியார் பள்ளிகளில், 9 ஆம் வகுப்பில் 10 ஆம் வகுப்புப் பாடத்தையும் +1 இல் +2 பாடத்தையும் நடத்துகிறார்கள். அறிவு வளர்ச்சிக்கு எதிரான இந்தக் கல்விச் சூதாட்டத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்தும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை நீக்க வேண்டும். +1 வகுப்பிற்கும் அரசு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரவேண்டும்.

5.   கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் 25 விழுக்காடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

6.   நடுவண் அரசு வேலைக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழில் எழுத வாய்ப்பளிக்கவும், கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வரவும் இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

தமிழ்ப் பெருமக்களே!

தமிழ்வழிக் கல்வி கோருவது தமிழைப் பெருமைபடுத்துவதற்காக அல்ல; தமிழர்கள் பெருமை பெறுவதற்காக!

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர் களுக்கும் பெண்களுக்கும் சமூக நீதி வழங்குவது தமிழ்வழிக் கல்வியே!

பல்வேறு அரசியல் மற்றும் தமிழ் அமைப்புகள் கூட்டாக உருவாக்கியதுதான் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 28.5.2013 அன்று சென்னைப் பள்ளிக் கல்வி இயக்கக வாயிலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்த நடவடிக்கையாகத் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகர்களில் 17.6.2013 அன்று ஆர்பாட்டம் நடத்துகிறோம்.

இனம் காக்க, மொழி காக்க, எதிர்கால வாழ்வுரிமை காக்க எழுச்சி பெறுவீர் தமிழர்களே! ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர்!

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT