உடனடிச்செய்திகள்

Friday, February 20, 2009

தமிழகம் முழுவதும் வருமானவரித் துறை அலுவலகங்கள் முற்றுகை


தமிழகம் முழுவதும்

வருமானவரித் துறை அலுவலகங்கள் முற்றுகை

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 600 பேர் கைது


ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகங்கள் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டன. இப்போராட்டங்களில் பங்கு கொண்ட சுமார் 600 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.




ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்போராட்டம் இன்று(20-02-2009) நடந்தது.


சென்னை

இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு வருமானவரிதுறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். பின்னர், "வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" உள்ளிட்ட முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்படப்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


தஞ்சை

தஞ்சை கோட்டைச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகாளிதாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். "சூனியக்காரி சோனியாவின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பாத்திமா நகரிலிருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


கோவை

கோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பாரதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். "ஈழத்தமிழனைக் கொல்லும் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடுவோம்" என்பனப் போன்ற முழக்கங்களுடன் அரசினர் கலைக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்களை காவல்துறையினர் வழிமறித்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் கோவை பாப்பநாயக்கம்பாளையத்தில் உள்ள பாடியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


மதுரை

காலை 11.00 மணியளவில் மதுரை பி.பி.குளம் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகம் மாயாண்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்கள் வருமானவரித்துறை அலுவலக நுழைவு வாயில் வரை செல்ல காவல்துறை தடை விதித்தது. தடையை மீறீ வாயில் வரை சென்ற 17 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் மதரை சேரிப்பாளையத்தில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


ஈரோடு

ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் குழந்தைகளும், பெண்களுமாக பெரும் திரளில் கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பன்னீர் செல்வம் புங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 120 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


சேலம்

காலை 10.00 மணியளவில் சேலம் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் மாவட்ட அமைப்பாளர் பிந்துசாரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் க.சேகர், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரம் திரளாக கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்கள் 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


புதுச்சேரி

புதுச்சேரி மத்திய அரசு வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். "இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட தோழர்கள் கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்தி ஈகி தமிழ் வேந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கடலூருக்கு அணிவகுத்துச் சென்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT