உடனடிச்செய்திகள்

Friday, February 20, 2009

புதுச்சேரியில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 150 பேர் கைதாகி விடுதலை

புதுச்சேரியில் நடந்த முற்றுகைப் போராட்டம்
150 பேர் கைதாகி விடுதலை

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக்  கண்டித்து புதுச்சேரி மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 150 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.


    அதன்படி இன்று(20-02-2009) காலை 11.00 மணியளவில் புதுச்சேரி  மத்திய அரசு வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    "இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட தோழர்கள் கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்தி ஈகி தமிழ் வேந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கடலூருக்கு அணிவகுத்துச் சென்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT